போலிச்செய்திகளை பரப்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சமூக விரோதிகள்தான்! - சிவராஜ் சிங் சௌகான்


Delhi Confidential: Left At Home | Delhi Confidential News ...



மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியைக் கலைத்து குதிரைப் பேரம் நடத்தி புழக்கடை வழியாக முதல்வர் ஆன பெருமை கொண்டவர் சிவராஜ் சௌகான். தற்போது மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான முயற்சிகளை செய்துவருகிறார். அதுபற்றிய விவரங்களை அவரிடம் பேசினோம்.

மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள இந்தூரில் என்னென்ன தடுப்பு பணிகளைச் செய்துள்ளீர்கள்?

இந்தூர் மத்தியப்பிரதேசத்தின் முக்கியமான வணிக நகரம். அங்கிருந்து பல்லாயிரம் பேர் வெளிநாடுக்குக்கு சென்று வந்திருக்கிறார்கள். அவர்கள் இங்கு சந்தித்தவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டினாலும் முழுமையான தகவல்கள், தொடர்புடையவர்களை பற்றிய விவரங்களை அவர்கள் கொடுக்க மறுக்கிறார்கள். நாங்கள் அதிகாரிகளைக் கூட்டி இதுபற்றிய ஆலோசனைகளைச் செய்து அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறோம். இதன் காரணமாக பரிசோதனை, சிகிச்சை, தனிமைப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

மூத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனமின்மைக்காக கண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் இருக்ககிறார்கள். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

கோவிட் -19 க்கு எதிராக அரசு சார்பில் மக்களைக் காப்பாற்ற அதிகாரிகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும், துப்புரவுத்துறை பணியாளர்களும் மருத்துவர்களும், செவிலியர்களும் முன்நின்று போராடிவருகின்றனர். தங்கள் கடமையைச் செய்யும்போது துரதிர்ஷ்டவசமாக அவர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அவர்களை உடனே குற்றம்சாட்ட வேண்டாம். பாதிக்கப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளின் தொடர்பு பட்டியலைக் கேட்டிருக்கிறோம். இதன்மூலம் பிறருக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் காக்க முயல்கிறோம். மாவட்டவாரியாக பாதிக்கப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் பற்றிய பட்டியலைக் கேட்டிருக்கிறோம். இதுபற்றிய விசாரணையின் முடிவில் அவர்களின் மேல் நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவெடுக்கப்படும்.

முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான கமல்நாத், மாநில அரசு நோய்த்தொற்று விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லையென கூறியிருக்கிறார். இந்திய அரசு அந்நேரத்தில் ஆட்சி மாற்றத்திற்கான முயற்சியில் இறங்கியிருந்தது என்று கூறியிருக்கிறாரே?

முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன். அவர் அப்படி மக்கள் மீது அக்கறை கொண்டிருந்தால், நோய் தடுப்பிற்கான நடவடிக்கைகளை ஏன் முன்னமே எடுக்கவில்லை. மத்திய பிரதேசத்தில் ஆய்வக வசதிகள் குறைவு என்பதால், நோய் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளை நாங்கள் டில்லிக்கு அனுப்பி வைத்துள்ளோம். மேலும் இந்த நேரத்தில் திரு. கமல்நாத் புகார் சொல்லுவது வருத்தத்திற்குரியது. அனைவரும் ஒன்றாக சேர்ந்தால்தான் பெருந்தொற்று பிரச்னையை சமாளிக்க முடியும்.

 நீங்கள் மாநில முதல்வராக மார்ச் 23 அன்று பதவியேற்றீர்கள். ஆனால் இன்னும் அமைச்சரவை அமைக்கப்படவில்லை. நீங்கள் மட்டும்தான் ஒன் மேன் ஆர்மியாக வேலை செய்துகொண்டிருக்கிறீர்கள்?

நீங்கள் கூறுவது சரிதான். அமைச்சரவைக்கூட்டம் நடத்தி முடிவெடுகளை எடுத்து அமைச்சர்களை குறிப்பிட்ட பணிகளை பார்த்துக்கொள்ளச் செய்வது சரியான நடைமுறை. ஆனால் இப்போதைய நிலையில் அது சாத்தியமில்லை. காரணம், பெருந்தொற்று வேகமாக மக்களுக்கு பரவி வருகிறது. எனவே இப்போது நோயைக்கட்டுப்படுத்துவதே முக்கியம் என்று நான் அதில் மட்டும் கவனம் குவித்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன். எம்எல்ஏ, எம்.பி ஆகியோரிடம் கருத்துகளை கேட்டு அதன்படி செயல்திட்டம் வகுத்து செயல்படுகிறது அரசு.

மாநில அரசிடம் இப்போதும் கூட சோதனை செய்வதற்கான சரியான வசதிகள் கிடையாது. என்ன செய்யப்போகிறீர்கள்? இந்த நிலைமை எப்போது முன்னேறும்?

 

நீங்கள் கூறுவது தவறான செய்தி. நான் இங்கு முதல்வராக வருவதற்கு முன்னர் இங்கு ஆய்வக வசதிகள் மிக குறைவாக இருந்தன. தற்போது மாநிலத்தில் ஒன்பது இடங்களில் ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தூரில் நாங்கள் 5,120 மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகிறோம். ஆயிரம் மாதிரிகளை டில்லிக்கு ஆய்வு செய்ய அனுப்பி வைத்திருக்கிறோம். மேலும் நோய்த்தொற்று ஏற்பட்டவர்களிடம் நாங்கள் மாதிரிகளை சேகரித்து வருகிறோம்.

ஊரடங்கு உத்தரவு மாநில பொருளாதாரத்தின் என்ன பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது?

மாதம் தோறும் எங்களது மாநிலம் 2 முதல் 3 ஆயிரம் கோடி ரூபாயை இழந்து வருகிறோம். பொருளாதாரம் பெரும் சுணக்கமாகி நிற்கிறது.  இதற்காக நாங்கள் தனி கமிட்டி அமைத்து பேசி வருகிறோம். ஊரடங்கு காலம் முடிந்தபிறகு நாங்கள் எங்கள் திட்டங்களை செயல்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்த உள்ளோம்.

உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களில் கூட சிலர் போலிச்செய்திகளை சமூக வலைத்தளங்களில் ஈடுபாட்டுடன் பரப்பி வருகிறார்கள். இதனை எப்படி பார்க்கிறீர்கள்?

நாங்கள் அப்படிப்பட்டவர்களை பிடித்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்போம். நீங்கள் கூறுவது மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்திருக்கிறது என்பது என்னுடைய கருத்து. நாங்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் போலிச்செய்திகளை எதிர்கொண்டு விழிப்புணர்வு செய்வதற்கான திட்டங்களை வகுத்துள்ளோம். போலிச்செய்திகளை பரப்பும் சமூக விரோதிகள் எங்கிருந்தாலும் அவர்கள் ஆபத்தானவர்களே. அவர்கள் கட்சியில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க எனது அரசு தயங்காது.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ், லிஸ் மேத்யூ

 


கருத்துகள்