கிளாசிக் நேர்காணல் - கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லக்ஷ்மணன்- இரண்டாம் பகுதி!


நீங்கள் உங்கள் படிப்பை எப்போது முடித்தீர்கள்?

நான் படிப்பை முடிக்கவில்லை. கார்ட்டூன் வரைவதற்கு எதற்கு பட்டப்படிப்பு? எனது பட்டப்படிப்பு சான்றிதழ் மைசூர் பல்கலைக்கழக பதிவாளரிடம்தான் இன்றும் இருக்கிறது. அதை நான் இன்றுவரையிலும் பெறவில்லை. அதற்கு பதிலாக கௌரவ பட்டங்கள் நிறைய பெற்றுள்ளேன்.

நீங்கள் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தனியார் கலைக்கல்லூரிக்கு விண்ணப்பித்தீர்கள் அல்லவா?

ஜே.ஜே. கலைக்கல்லூரிக்கு விண்ணப்பித்தேன். ஆனால் அந்த முட்டாள்கள் எனக்கு திறமை இல்லை என்று நிராகரித்துவிட்டனர். சரி, அந்தளவு எனக்கு ஊக்கம் தந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

உங்களுக்கு அங்கு அனுமதி கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் என்னவாகியிருக்கும்?

நான் விளம்பர நிறுவனத்தில் பணிபுரிந்திருப்பேன். குழந்தைகள் உணவு மற்றும் லிப்ஸ்டிக் ஆகியவற்றை விளம்பரப்படுத்திக்கொண்டு இருந்திருப்பேன்.

உங்களை அந்தப்பள்ளி பின்னாளில்  பரிசுகளை வழங்க அழைத்தார்கள் அல்லவா?

நான் அங்கு அவர்களின் அழைப்பை ஏற்று சென்றேன். பரிசுகளை வழங்கினேன். அதற்கப்பிறகு அவர்கள் என்னை பேச சொன்னார்கள். நான் அங்கு எப்படி இளமைக்காலத்தில் திறமைக்கான அடையாளம் இல்லை என்று கூறி வெளியேற்றப்பட்டேனோ அதைப்பற்றி  பேசினேன்.

புதுமைத்திறன் கொண்ட கலைஞர்கள், எழுத்தாளர்கள் படிப்பில் தோல்வியுற்றவர்கள்தான் என்று கோட்பாடு உள்ளதே?

எனது சகோதரர் ஆர்.கே. நாராயணன், சுவாமி மற்றும் அவனது நண்பர்கள் கதையை எழுதியபோது, பி.ஏ. ஆங்கில பட்டப்படிப்பில் தோல்வியுற்றிருந்தார்.

உங்கள் கார்ட்டூன்களுக்கான ஐடியாக்களை எங்கிருந்து தேடிப்பிடிக்கிறீர்கள்?

 ஒவ்வொரு நாளும் கடினமாகத்தான் செல்கிறது. கவலையாகத்தான் நகர்கிறது. கடவுளே நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று தோன்றும். எனது  கார்ட்டூன்களை முடித்தபிறகு அடுத்தநாளும் இப்படித்தான் நகரும். பல்வேறு அரசியல் நிகழ்வுகளிலிருந்து எனக்கு கார்ட்டூன்களுக்கான ஐடியாக்கள் கிடைக்கும்.

எனக்கு கார்ட்டூனுக்கான ஐடியா கிடைத்துவிட்டது. இனி கவலைப்பட வேண்டியதில்லை என்று உங்களுக்கு தோன்றியதில்லையா?

இல்லை. நீங்கள் கூறுவது அதீத தன்னம்பிக்கை என்று நினைக்கிறேன். அப்படி இதுவரை நடந்ததே இல்லை.

நீங்கள் என்ன வரையப்போகிறீர்கள் என்று உங்கள் ஆசிரியருக்கு முன்னதாகவே சொல்லுவது உண்டா?

எப்போதும் இல்லை.

நீங்கள் கார்ட்டூன் வரைவதோடு எழுதவும் தொடங்கியுள்ளீர்கள் அல்லவா?

ஆமாம். ஹோட்டல் ரிவேரா என்ற நாவலை எழுதியுள்ளேன்.

அது நீங்கள் முதன்முறையாக மும்பை வந்தபோது தங்கிய ஹோட்டல் அல்லவா?

ஆமாம். அது எப்படி உங்களுக்குத் தெரியும்?

உங்கள் சுயசரிதையில் அதுபற்றி எழுதியுள்ளீர்களே?

அப்படியா, நான் இன்னும் அந்நூலை படிக்கவில்லை.

 நீங்கள் காகத்தை ஓவியமாக வரைந்துள்ளீர்கள். அது ஏன் குறிப்பாக காகத்தை வரைய தேர்ந்தெடுத்தீர்கள்?

காகம் புத்திசாலித்தனமான பறவை.  அதன் பின்னணி நிறம் நீலம், கருப்பு, பச்சை என இருந்தாலும் தெளிவாக தெரியும்.

காகத்தை அதன் புத்திசாலித்தனத்திற்காக பாராட்டுகிறீர்கள்?

ஆமாம். அழகற்ற அசிங்கமான பறவையாக நான் கருதுவது மயிலைத்தான். அது அளவுக்கதிமாக மக்களால் பாராட்டப்படுகிறது.

மயில் தேசியப்பறவை அல்லவா? காகத்தை தேசியப்பறவையாக கொள்ளலாம் என நினைக்கிறீர்களா?

ஆமாம் நான் அப்படித்தான் நினைக்கிறேன்.

உங்களது கார்ட்டூன்களை நீங்கள் எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

குறிப்பிட்ட விஷயங்களை சொல்லும் விதத்தில் பரவாயில்லை என்றே நினைக்கிறேன்.

அதில் ஏதேனும் திருத்தங்களை செய்ய விரும்புகிறீர்களா?

இல்லை. அது சரியாகத்தான் இருக்கிறது.

உங்களது வேலையில் நீங்கள் ஏமாற்றங்களை சந்தித்திருக்கிறீர்களா?

அதிர்ஷ்டவசமாக இல்லை.

இன்று சந்தையில் நிறைய கார்கள் வந்துவிட்டன. நீங்கள் அம்பாசிடர் காரையே பயன்படுத்துகிறீர்கள்?

அம்பாசிடர் எனக்கு வசதியாக இருக்கிறது. வலிமையான கார். கருப்பு நிற அம்பாசிடர் காரை நான் பயன்படுத்துகிறேன்.

நீங்கள் கார்ட்டூன்களில் கார்களையும், விமானங்களையும் வரையும்போது அம்பாசிடர் கார்களையே வரைகிறீர்கள். மாருதி, ஹோண்டாக்களை வரைவதில்லை ஏன்?

நான் நவீன கார்களை கவனிப்பதில்லை. விமானங்களில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை.

புகழ்பெற்ற மனிதராக இருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அப்படியொன்றும் சிறப்பாக நினைக்கவில்லை.

உங்களை பல்வேறு அமைப்புகள் விழாக்களுக்கு அழைத்து வருகின்றன அல்லவா?

ஃப்ரீமேஷன், ரோட்டரி சங்கங்கள் பல்வேறு விழாக்களுக்கு அழைப்புகளை அனுப்புகின்றன.

நீங்கள் எந்த அமைப்பிலாவது உறுப்பினராக இருக்கிறீர்களா?

இல்லை. நான் மனிதர்களின் சங்கம் எதிலும் உறுப்பினராக இல்லை. நான் தனியாகவே இருக்கிறேன்.

நன்றி: ரீடர்ஸ டைஜெஸ்ட் டிச.2004

ஆங்கிலத்தில்: அசோக் மகாதேவன், மோகன் சிவானந்த்

 

 

 

 


கருத்துகள்