உலக நாடுகளின் வளர்ச்சிக்கு தொழிலாளர்களின் இடப்பெயர்ச்சி முக்கியக்காரணம் - பேரா. சின்மய் தும்பே



தொழிலாளர்களின் இடம்பெயர்வு வளர்ச்சி தரும்!

சின்மய் தும்பே – பேராசிரியர் ஐஐஎம்

இப்போதைய நிலையில் அரசு என்ன செய்யவேண்டும் என நினைக்கிறீர்கள்?

அரசு இடம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களை 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகாம்களை அமைத்து தங்க வைத்துள்ளது. இந்தியா முழுக்க ஆறு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு, கிராமங்களுக்கு வரமுடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்கள் ஊர் திரும்ப அரசு உதவ வேண்டும். முகாம்கள் தொழிலாளர்களுக்கு இப்போது அவசியமில்லை. இந்த தொழிலாளர்கள் உணவுப்பொருட்களை நியாயவிலைக் கடைகளில் பெறுவதற்கு உரிமை உண்டு. ஆனால் பெரும்பாலும் இவர்கள் தங்களுடைய கிராமத்தில்தான் பெறும் வசதி இருக்கிறது. இந்த உதவிகளை தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் பகுதிகளிலேயே பெறுவதற்கு வழி செய்தால் நன்றாக இருக்கும்.

தொழிலாளர்கள் இடம்பெயர்வதற்கு என்ன காரணம்?

இரண்டு காரணங்களுக்காக தொழிலாளர்கள் இடம்பெயர்கின்றனர். ஒன்று வளர்ச்சி, இன்னொன்று வாழ வழியில்லாமல் அங்கிருந்து நகர்கிறார்கள். இந்தியாவில் இந்த இரண்டு விஷயங்களும் நடைபெறுகின்றன. இந்திய மாநிலங்களில் ஒன்றாக பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம்(கடற்கரையோரம்) ஆகியவை வளம் பொருந்தியவை. இங்கிருந்து மக்கள் இடம்பெயர்வது வளர்ச்சியைக் காரணமாக காட்டித்தான். சில பஞ்சம், புயல் பாதித்த இடங்களில் மக்களுக்கு வேலை இருக்காது. நிலமும் வளமிழந்துவிடும். அங்கிருந்தும் மக்கள் இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்றுவிடுகின்றனர்.

இடம்பெயர்வு என்பதை சட்டவிரோதமானது, தவறானது என்று நினைக்கவேண்டியதில்லை. மாநிலம், நாடு ஆகியவற்றுக்கு இடம்பெயர்வு என்பது வளத்தையே கொண்டுவந்து சேர்க்கிறது. வளமிழந்த வாழிடப்பகுதிகளில் பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை அரசு எடுத்தால் மட்டுமே மக்கள் இடம்பெயர்வு குறையும்.

இந்தியாவில் தொழிலாளர் இடம்பெயர்வு எப்படியிருக்கிறது?

வட இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தற்போது தென்னிந்தியாவிற்கு வேலைக்காக இடம்பெயர்ந்து வருகின்றனர். உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த படிக்காத தொழிலாளர்கள் முதலில் டில்லிக்குத்தான் வேலைக்காக சென்று வந்தனர். தற்போது தென்னிந்தியாவிற்கு செல்கின்றனர். இங்கு கீழ்மட்ட வேலைகளுக்கு எப்போதும் ஆட்கள் தேவை அதிகம் உள்ளது. பெரும்பாலான தொழிலாளர்களின் தேர்வாக கேரளம் உள்ளது. இங்குள்ளவர்களுக்கு, வளைகுடா நாடுகளிலிருந்து பணம் கிடைக்கிறது. மலையாளிகள் நன்கு படித்திருப்பதால், அதிகளவு சம்பளம் பெறுகின்றனர். இங்கு வேலைகளும் அதிகமாக உள்ளன.

தொழிலாளர்களின் இடம்பெயர்வுக்கு வறுமைதான் முக்கியக்காரணமா?

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வட இந்திய மாநிலங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து வேலை செய்து வருகின்றனர். முன்னமே சொன்னது போல வளர்ச்சி, வாழ்க்கை ஆகியவற்றுக்காகத்தான் இடம்பெயர்வு தொடங்கியது. ஆனால் இன்று நீங்கள் வறுமையான மாநிலம் என்று சொல்லும் பீகாரிலுள்ள சரண் மாவட்டம் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் முதலீட்டால் முன்னேறி வருகிறது. இதேபோலா கர்நாடகத்திலுள்ள உடுப்பியம் பணக்கார மாவட்டமாக மாறி வருகிறது. இடம்பெயர்ந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் தமது பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க முயல்கிறார்கள். இதன்மூலம் அடுத்த தலைமுறையை பாதுகாக்க தலைப்படுகின்றனர்.

நன்றி : டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏப்ரல் 13, 2020

ஆங்கிலத்தில்: சுகந்தா இந்துல்கர்

 

 


கருத்துகள்