ஊரடங்கு விதிகளால் மாணவர்களை அழைத்து வர முடியவில்லை! - பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

CommentWise-Your Opinion can make a difference
commonwise


மொழிபெயர்ப்பு நேர்காணல்

நிதிஷ்குமார், மாநில முதல்வர், பீகார்

பல்வேறு மாநிலங்களில் பீகாரைச் சேர்ந்த இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு வரமுடியாமல் தடுமாறி வருகின்றனர். முகாம்களில் அவர்களை தங்க வைத்து இந்திய அரசு உணவுகளை வழங்கி வருகிறது. இதுபற்றி பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாரிடம் பேசினோம்.

பீகாரிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற தொழிலாளர்கள் மகாராஷ்டிரம், தமிழ்நாடு, கேரளம் என பல்வேறு மாநிலங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் பீகாரில் நோய்பரவல் சதவீதம் குறைவாக இருக்கிறது. என்ன மாதிரியான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறீர்கள்?

ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 5 மணிப்படி பீகாரில் 329 நோயாளிகள் அடையாளம் கண்டறியப்பட்டிருக்கிறார்கள். அதில் 57பேர் முழுக்க குணமாகியுள்ளனர். இதில் 270 பேர் இன்னும் கண்காணிப்பில் உள்ளனர். நாங்கள் எங்கள் மாநிலத்தில் உள்ள ஆறு மையங்கள் மூலம் நோயாளிகளின் மாதிரிகளை சோதித்து வருகிறோம். 75 லட்சம் வீடுகளில் 4 கோடி மக்களுக்கு சோதனைகளை நடத்தி நோய்ப்பரவலைக் குறைத்துள்ளோம். மருத்துவமனைகள், சிகிச்சை வசதிகள், தனிமைப்படுத்தல் வசதிகளை செய்துள்ளோம். மத்திய அரசிடம் வெண்டிலேட்டர் உள்ளிட்ட கருவிகளின் உதவியைக் கோரியுள்ளோம்.

டில்லி, பஞ்சாப், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலுள்ள பீகார் தொழிலாளர்களுக்கு என்ன மாதிரியான உதவிகளை செய்திருக்கிறீர்கள்? மத்திய அரசிடமும், பிற மாநில அரசுகளிடமும் உதவிகளைக் கோரியுள்ளீர்களா?

மாநிலத்திற்கு வெளியேயுள்ள பீகார் தொழிலாளர்களுக்கு உணவு, உறைவிடம், மருத்துவ சிகிச்சை அளிக்க மாநில தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் செயலாற்றி வருகிறது. மாநில முதல்வர் பேரிடர் நிவாரண நிதி மூலம் 250 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. பீகார் தொழிலாளர்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் அளிப்பதற்கான வசதிகளைச் செய்துள்ளோம். இதுவரை வெளியுள்ள தொழிலாளர்களிடமிருந்து வசதிகள் கோரி 300 அழைப்புகள் வந்துள்ளன. ஆயிரம் ரூபாய் நிதி கோரி 25 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 16 லட்சம் பேருக்கு வங்கிக்கணக்கு மூலமாக நாங்கள் நிதியை அனுப்பி வைத்துவிட்டோம். எங்களது அரசின் பீகார் பவுண்டேஷன் ஒன்பது மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் 12 நகரங்களில் 55 முகாம்களை அமைத்து 12.35 லட்சம் மக்களுக்கு உணவு, உறைவிட வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளோம்.

பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டால் மட்டும்தான் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு மீண்டும் கிடைக்கும். அவர்களுக்கு தற்காலிகமாக வேலைவாய்ப்புகளையும், மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளையும் நீங்கள் செய்து தர முடியுமா?

பல மாநிலங்களில் ஊரடங்கு தடை விலக்கப்பட்டதும் அங்குள்ள தொழிற்சாலைகள், கட்டுமானத் தொழில், உணவகங்கள் ஆகியவற்றில் பீகார் தொழிலாளர்கள் மீண்டும் பணியமர்த்தப்படுவார்கள். அம்மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களது பங்கு முக்கியமானது. அவை தவிர பீகார் அரசு அவர்களுக்கான பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. அதில் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருகிறோம். மகாத்மா காந்தி கிராம வேலைவாய்ப்புத் திட்டம், வெள்ளத்தடுப்பு பணிகள் ஆகியவற்றில் பீகார் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் உண்டு.

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் படித்து வந்த மாணவர்களை அழைத்து வர நீங்கள் ஏன் முயற்சிகள் எடுக்கவில்லை? பல்வேறு மாநில அரசுகள் தங்களது மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களை அழைத்து வர நடவடிக்கைகளை எடுத்தனவே?

நாங்கள் மாணர்களை அழைத்து வர முயன்றபோது, மத்திய உள்துறை அமைச்சகம் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கான விதிகளை அறிவித்துவிட்டது. இதனால் அந்த விதிகளுக்கு இணங்க எங்களால் மாணவர்களை வேறு மாநிலங்களிலிருந்து அழைத்து வர முடியவில்லை. நாங்கள் மாநிலத்திற்கு வெளியே இருக்கும் பீகார் குடிமக்களுக்கான உதவிகளை வழங்கிக்கொண்டுதான் இருக்கிறோம். விதிகள் தளர்த்தப்படும்போது, நாங்கள் அவர்களையும், தொழிலாளர்களையும் அழைத்துக்கொண்டு விடுவோம்.

நன்றி: இந்துஸ்தான் டைம்ஸ்

ஆங்கிலத்தில்: வினோத் சர்மா

தொகுப்பு: ஸ்வதத்தன் சர்மா, அரசு கார்த்திக்

கருத்துகள்