இந்தியாவில் பத்திரப் பதிவாளர் கூட பெண்களின் பெயரில் பத்திரங்களை பதிவு செய்ய தயங்குகின்றனர்! சிப்ரா டியோ


Woman, Women'S Power, Specialist, Presentation
pixabay



சிப்ரா டியோ, லாண்டெஸா அமைப்பு

லாண்டெஸா என்ற அமைப்பு உலகம் முழுவதும் உள்ள ஏழை மக்களுக்கான நிலங்களைப் பாதுகாக்கவும், அவர்களின் வாழ்க்கை நடத்த நிலங்களைப் பெற்றுக்கொடுக்கவும் பணியாற்றிவருகிறது. இந்த அமைப்பில் பெண்களுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். சிப்ரா டியோ.

பெண்களுக்கு அனைத்து விஷயங்களிலும சம உரிமை தரப்படவேண்டும் என்கிறீர்கள். நிலம், விவசாயம் ஆகியவற்றில் தரப்படம் உரிமை அவர்களை முன்னேற்றுகிறது என நம்புகிறீர்களா?

இன்றைய நவீன உலகில் நிலம் என்பது ஒருவருக்கு முக்கியமான அடையாளத்தைத் தருகிறது. பெண் நிலத்தை சொந்தமாக கொண்டிருப்பது அவளது தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. அந்த நிலத்தை மையமாக வைத்து அவள் தன் வாழ்க்கையை விவசாயியாக கழிக்க முடியும். அரசு அங்கீகாரம், விவசாய பொருட்களை வாங்குவது, அதனை விற்பதற்கான சந்தை என அவளது வாழ்க்கையை நிலம் முற்றிலுமாக மாற்றுகிறது. யாரையும் சார்ந்து நிற்காமல் அவள் தன் வாழ்க்கையை சுயமரியாதையோடு நடத்திக்கொள்ள விவசாயநிலம் உதவுகிறது.

பெண்களுக்கு நிலங்களை வழங்கும் சட்டங்களுக்கு எதிர்ப்புகள் உருவாகி உள்ளதா?

எதிர்ப்புகள் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம். மிகச்சிறந்த இரண்டு உதாரண்ங்களை நான் உங்களுக்கு சொல்லுகிறேன். ஹரியானா மாநிலத்தில் இந்து திருமணச்சட்டத்தின் படி பெண்களுக்கு வழங்கப்பட்ட நிலவுரிமையை ரத்து செய்ய சட்டசபை இருமுறை முயன்றது. ஆனால் குடியரசுத்தலைவர் அவர்களின் முயற்சியை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தடை செய்தார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒருவருக்கு மகள் இருந்தால் அவளுக்கு சொத்துக்களை வழங்கலாம். அதாவது நில உரிமையை. ஆனால் திருமணமான மகளுக்கு நில உரிமையை வழங்க முடியாது. நாங்கள் இதுதொடர்பாக அதிகாரிகளை சந்தித்துப் பேசி திருமணமான ஒருவரின் மகளுக்கும் கூட அவளின் சகோதரனைப் போல சொத்தில் சம உரிமை தேவை என்பதை சொல்லி திருத்தம் கொண்டு வர முயன்றோம்.

பெண்களுக்கான நிலவுரிமையைப் பற்றி நீங்கள் பேசினாலும் கூட, பெண்களின் பேரில் அவர்களுக்கு உரிமையான நிலங்களை பார்ப்பது அரிதாக இருக்கிறதே?

அப்படி பெண்கள் பெயரில் நிலங்களை பதிவு செய்யாமல் இருப்பதற்கு குறிப்பிட்ட மாநிலத்தை , நகரைச் சேர்ந்த அதிகாரிகளின் பாகுபாட்டு மனமே காரணம். பெண்கள் எப்போதுமே தந்தையில் நிலத்தில் பங்கு கேட்க கூடாது என சமூகம் நினைக்கிறது. பதிவாளர்கள் அதனை அப்படியே பிரதிபலிக்கின்றனர். அதனால்தான் தந்தையின் சொத்தாக நிலம் இருந்தால் அவை பெண்களுக்கு தரப்படுவதேயில்லை.

இந்தியப் பெண்களுக்கு என்ன காரணங்களுக்காக நிலங்கள் தரப்படாமல் மறுக்கப்படுகின்றன?

மாநில அரசுகளும், மத்திய அரசுகளும் பல்வேறு சட்டங்களை சொத்துரிமை மற்றும் இந்து சட்டம் சார்பாக போட்டிருந்தாலும் அவை முறையாக செயல்படுத்தப்படுவதில்லை. வடமேற்கு மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரப்பிரதேசம்,  உத்தர்காண்ட், டில்லி ஆகிய மாநிலங்களில் பெரும்பாலும் நிலம், ஆண்களின் பெயரில்தான் பதிவு செய்யப்படுகின்றன. பெண்களுக்கு கொடுக்கப்படும் நிலம் குறிப்பிட்ட காலம் விவசாயம் செய்யப்படாமல் இருந்தால் அல்லது அப்பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டால் அந்த நிலத்தின் மீதான உரிமையை அவள் இழந்துவிடுவாள். இப்படி பாரபட்சமான சட்டங்களையே இந்தியா கொண்டுள்ளது. பெரும்பாலும் மாநில அரசுகளிடம் உள்ள விதிகளின்படி, பெண்களுக்கு நிலவுரிமை கிடைக்காமல் செய்யப்படுகிறது.

இந்திய மாநிலங்கள் அனைத்துமே நீங்கள் கூறியப்படி பாரபட்சமாக நடந்துகொள்கின்றன என்று கூறுகிறீர்களா?

இந்தியா சுதந்திரமடைந்தபோது விவசாய நிலங்கள் விவசாயிகளுக்கே என்று கூறப்பட்டது. அதன் பொருள், அப்போது ஆண்கள்தான் நிலத்தின் மீது உரிமை கொண்டிருந்தார்கள். இன்று 65 சதவீதம் விவசாய தொழிலாளர்கள் பெண்களாகவே இருக்கிறார்கள். ஆனால் 14 சதவீத பெண்கள் மட்டுமே நிலவுரிமை கொண்டிருக்கிறார்கள்.

பெண்கள் திருமணம் செய்துகொண்டு வேறு நகரங்களுக்கு சென்று விடுகிறார்கள். அவர்களுக்கு நிலத்தை கொடுத்தால் நிலம் விவசாயம் செய்யப்படாமல் போய்விடும் என பலர் விவாதம் செய்கிறார்கள். ஆனால் அதேசமயம் ஆண்கள் திருமணம் செய்துகொண்டு பெருநகரங்களுக்கு, அல்லது வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகிறார்கள். அவர்களுக்கு மட்டும் எப்படி சொத்துரிமையை எழுதி வைக்கிறார்கள்? இந்தக்கேள்விக்கு இங்கு பதிலே கிடையாது. ஆண், பெண்ணுக்கான வேறுபாடு எப்போது இருக்கிறது.

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஏப்ரல் 22, 2020

ஆங்கிலத்தில் -  ருத்ரநீல் கோஷ்

கருத்துகள்