குழந்தைகளின் அறிவுத்திறன் மேம்பாடு - ஜீன் பியாஜெட்டின் ஆய்வு

 






காலத்திற்கேற்ப குழந்தைகளின் அறிவுத்திறன் எப்படி மாறுகிறது, குறிப்பிட்ட வயது வரும்போது ஏற்படும் மாற்றங்கள் என்ன, மனநிலை மேம்பாடு ஆகியவற்றை பற்றி உளவியலாளர் ஜீன் பியாஜெட் ஆராய்ச்சி செய்தார். குழந்தைகள் இயல்பாகவே சுதந்திரமாக இயங்கி வேண்டும் விஷயங்களைக் கற்றுக்கொள்பவர்கள் என ஜீன் நம்பினார். அவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர்கள் குறிப்பிட்ட சூழலை அமைத்துக்கொண்டு வழிகாட்டினால் போதுமானது என கருதினார். கல்வி என்பது ஆண், பெண் என இருபாலினத்தவருக்கும் புதிய விஷயங்களை செய்வதற்கான திறனை தருவதே ஆகும் என்று கூறினார். 


குழந்தைகள் தங்களுக்கு இயற்கையாக உள்ள ஐம்புலன்கள் மூலம் பல்வேறு வளர்ச்சி நிலைகளில் பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். இதில் படைப்புத்திறன், கற்பனைத்திறன் ஆகியவையும் உள்ளடங்கும். ஒன்றை உணர்வது, அதை தேடுவது, மேம்பாடு அடைவது, தேர்ச்சி பெறுவது என குழந்தைகளின் அறிவுத்திறன் வளர்கிறது. 1920ஆம் ஆண்டு, ஆல்பிரட் பைனட், குழந்தைகளின் அறிவுத்திறனுக்கான அளவீட்டை உருவாக்கினார். இவர் கேள்விகளுக்கான பதிலை மட்டுமே எதிர்பார்த்தார். அதை அடிப்படையாக நினைத்தார். ஆனால், அந்த பதில்கள் குழந்தைகளைப் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கிறது. அதை ஆல்பிரட் கவனத்தில் கொள்ளவில்லை. பியாஜெட், வயதுக்கு ஏற்ப குழந்தைகள் சிந்திக்கும் முறை மாறுகிறது. கூறும் பதில்கள் வேறுபடுகின்றன என்று கருதினார். அதைப்பற்றிய ஆய்வுகளைச் செய்தார். 


பதினேழாம் நூற்றாண்டில் குழந்தை, வயது வந்தோரின் சிறிய மாதிரி என்ற கருத்து ஆய்வாளர்களிடையே  இருந்தது. குழந்தைகளின் மூளை, பெரியவர்களைப் போலவே சிந்திக்கிறது என பேசியும் எழுதியும் வந்தனர். நேரம், காலம், எண் என்பதெல்லாம் குழந்தைகள் பிறக்கும்போதே மூளையில் உள்ளது என்று கருதினர். பியாஜெட், குழந்தைகளின் அறிவுத்திறன் வயது வந்தோரைவிட வேறுபட்டதாக உள்ளது.அவர்கள் பெரியவர்களாக வளரும்போதும், காலத்திற்கேற்ப வளர்ச்சி மாறுபடுகிறது என்று கூறினார். குழந்தைகளை கேள்வி கேட்டு அவர்கள் கூறும் பதில்களை வைத்து ஆராய்ச்சியை மேற்கொண்டு நடத்துவதே அவரின் இயல்பாக இருந்தது. இப்படி செயல்பட்டு குழந்தைகளின் அறிவுத்திறனை புரிந்துகொண்டால், மனித குலத்தின் அறிவை எளிதாக அடையாளம் காண முடியும் என நம்பினார். 


தொடக்க கால ஆராய்ச்சியில், குழந்தைகள் பேசும் மொழி, அவர்களின் குடும்ப உறவுகள், விருப்பங்கள் அறிவுத்திறனை தீ்ர்மானிக்கின்றன என பியாஜெட் கருதினார். ஆனால் இறுதியாக குழந்தைகளின் செயல்பாட்டில் மொழியின் பங்கு மிக குறைவானதே என்ற முடிவுக்கு வந்தார். பிறந்த குழந்தையின் உடல் இயக்கம் மிக குறைவு, தாய்ப்பாலுக்கு அழுவதும். அதைக் குடிப்பதும்தான் முதல் பணி பிறகு பொம்மையை தேடுவது, விளையாடுவது என மாறுகிறது. 


குழந்தைகளின் சிந்தனை, செயல்பாடு, கோணம் ஆகியவற்றை ஸ்கீமா என்று குறிப்பிடுகிறார்கள். இது, முந்தைய அனுபவங்களின் அடிப்படையில் அமைகிறது. தொடக்கத்தில் எளிமையாக இருக்கும் ஸ்கீமா, குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது வயது, சிந்தனைக்கு ஏற்ப சிக்கலாகிறது. 

https://tenor.com/

கருத்துகள்