பாரத் ஜிபிடியின் ஹனுமான் - இந்திய மொழிகளில் ஏஐ

 









பாரத் ஜிபிடியின் ஹனுமான் - இந்திய மொழிகளில் ஏஐ


ஐஐடி பாம்பே தலைமை தாங்கி வழிகாட்ட ஏழு இந்திய பொறியியல் கழகங்களின் உதவியுடன் பாரத் ஜிபிடி குழுமம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிட்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஆதரவை வழங்கி வருகிறது. பாரத் ஜிபிடி குழுமம், ஹனுமான் எனும் செயற்கை நுண்ணறிவு மாடலை உருவாக்கி வருகிறது. இந்த பணிக்கு சீதாலட்சுமி ஹெல்த்கேர் நிறுவனம், உதவியையும், பங்களிப்பை வழங்கியுள்ளது. 


ஹனுமான்


ஹனுமான் என்பது செயற்கை நுண்ணறிவு மாடல். இதை எல்எல்எம் என குறிப்பிடுகிறார்கள். மொத்தம் பதினொரு மொழிகளில் இயங்கவிருக்கிறது. தமிழ், மராத்தி, இந்தி ஆகிய மொழிகள் இதில் அடங்கும். இருபது மொழிகளுக்கு செயல்பாடுகளை விரிவாக்கும் திட்டமும் உள்ளது. மருத்துவம், அரசு நிர்வாகம், கல்வி ஆகிய துறைகளில் செயற்கை நுண்ணறிவு பயன்படவிருக்கிறது. இதுதொடர்பாக பாரத் ஜிபிடி குழுமம், வெளியிட்ட வீடியோவில் பல்வேறு மொழிகளில் மக்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது காட்டப்பட்டது. 


இப்படி உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு வெறும் உரையாடுவதற்கான பாட் மட்டும் கிடையது. இதைப் பயன்படுத்தி எழுத்து, பேச்சு, காணொலி ஆகியவற்றை பல்வேறு மொழிகளில் உருவாக்கமுடியும். இந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ள விஸிஜிபிடி செயற்கை நுண்ணறிவு, மருத்துவத்துறைக்காக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. பாரத் ஜிபிடி போலவே சர்வம், குருட்ரிம் ஆகிய நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவுக்கான மாடல்களை உருவாக்கி வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு ஆதரவாக லைட்ஸ்பீட் வென்ச்சர் பார்ட்னர்ஸ், வினோத் கோஸ்லா ஆகியோர் உள்ளனர். 


செயற்கை நுண்ணறிவு மாடல்களுக்கு பேரளவிலான தகவல்கள் தேவைப்படுகின்றன. அவற்றை ஆழ்வழிக்கற்றல் மூலம் புரிந்துகொள்கின்றன. சொற்கள், வார்த்தை, அதன் அர்த்தம் ஆகியவற்றை தொடர்ந்து பயிற்சி செய்கின்றன. இதன் வழியாகவே பயனர் கேட்கும் கேள்விகளுக்கு எளிதாக பதில் சொல்ல தயாராகின்றன. 


விக்கிப்பீடியா, ஓப்பன்வெப்டெக்ஸ், கிராவல் கார்பஸ் ஆகியவற்றின் மூலம் இணையத்தில் உள்ள தகவல்களைப் பெற்று பயிற்சி செய்கின்றன. இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம், இப்படி தகவல்களைப் பெறுவதற்கு செயற்கை நுண்ணறிவு எந்த அனுமதியையும் பெறுவதில்லை. வலைத்தளங்களுக்கோ, அதில் குறிப்பிட்ட செய்திகளை எழுதியவர்கள், அதன் உரிமையாளர்களுக்கு எந்த தொகையும் வழங்குவதில்லை. இதுதான் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் பெரிய ஆபத்து. இந்த வகையில் ஓப்பன் ஏஐயின் சாட் ஜிபிடி கூட ஏராளமான எழுத்தாளர்களின் நூல்களை படித்து தனது நினைவில் அவற்றை தேக்கி வைத்துள்ளது. இதற்கு எழுத்தாளர்களிடம் முறையான அனுமதியெல்லாம் பெறவில்லை. எனவே, அதன் மீது வழக்கு தொடுக்கலாமா என பலரும் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். 


இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையைத் தழுவியது. 


நன்றி

மெட்டா மங்கீஸ் - விஜய் வரதராஜ் 

கருத்துகள்