நீங்கள் மட்டும்தான் வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? - எழுத்தாளர் மார்லன் ஜேம்ஸ்

 











எழுத்தாளர் மார்லன் ஜேம்ஸ்

நேர்காணல்

ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் மார்லன் ஜேம்ஸ். இவர் தனது முதல் நாவலை எழுதியபோது அதற்கு பெரும் வரவேற்பு, மாலை மரியாதையெல்லாம் கிடைக்கவில்லை. ஜான் குரோவ்ஸ் டெவில் என்பதுதான் நூலின் பெயர். இந்த நூல் பதிப்பாளர்களால் 78 முறை மறுக்கப்பட்டுள்ளது.

கடும் விரக்திக்குள்ளான மார்லன், எழுதிய கையெழுத்து பிரதி, நண்பர்களின் கணினியில் இருந்த பிரதி என அனைத்தையும் அழித்தார். ஆனால் ஒரு ஒரு கணினி பிரதி மின்னஞ்சலில் தப்பி பிழைத்தது. பின்னாளில் 2015ஆம் ஆண்டு எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் செவன் கில்லிங்க்ஸ் என்ற புனைவை எழுதி  மேன் புக்கர் பரிசை வென்றார். நூலில், இசைக்கலைஞர் பாப் மார்லியை ஒருவர் கொலை செய்ய முயல்வதை புனைவாக்கியிருந்தார்.

அதற்குப் பிறகு டார்க் ஸ்டார் எனும் தொடர்வரிசை நாவல்களை எழுத தொடங்கினார். பிளாக் லியோபேர்ட், ரெட்வோல்ஃப் என இரண்டு நாவல்கள் ஓடிடியில் தொடராக தயாரிக்கப்படவிருக்கின்றன. ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவிற்காக வந்தவரிடம் பேசினோம்.

மரபான வரலாற்றை எப்படி கற்பனையான புனைவாக மாற்றுகிறீர்கள்?

நான் சிறுவயதில் இருந்து பல்வேறு வகையான கதைகள், கட்டுரைகளை படித்து வளர்ந்தேன். எனக்கு கையில் கிடைப்பதையெல்லாம் படிப்பேன்.இதனால் எதை வைத்து வேண்டுமானாலும் என்னால் கதையை உருவாக்க முடியும்.ஒரு விஷயத்தை கற்பனை கலந்து உருவாக்க முடியாதபோது அது இலக்கியம் எப்படி ஆகும்? இலக்கிய வகைகளை ரேங்குகளாக பிரித்துப் பார்ப்பதில்லை. மக்கள், குறிப்பிட்ட இலக்கிய வகைகளை பிரிவுகளை படித்துவிட்டு அதை ரேங்குகளாக பிரித்து பார்ப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. பல்வேறு ஐடியாக்களை இலக்கியத்திற்குள்  பயன்படுத்துவது, பல்வேறு பிரிவுகள், வகைகளாக மாறுவது பற்றியெல்லாம் நான் கவலைப்படுவதில்லை.

உங்கள் நாவல்களில் அதிக வன்முறை உள்ளதாக விமர்சனங்கள் எழுகின்றன. நீங்களும் எழுதும் வன்முறைகளை குறைத்துக் கொள்வீர்களா, உங்கள் எழுத்துகளை செம்மை செய்யும் ஆசிரியர்கள் வன்முறையை வெட்டினால் ஏற்பீர்களா?

பெரும்பாலான சமயங்களில் எனது ஆசிரியர்களை விட நான்தான் அதிகம் பின்வாங்கியிருக்கிறேன். வன்முறையான சம்பவங்களுக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என யோசித்திருக்கிறேன்.எனது நாவல்களை படிக்கும் வாசகர்கள், வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்டேன் என்று கூறியிருக்கிறார்கள். நீங்கள் மட்டும்தான் வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா என்று அவர்களைப் பார்த்து கேட்க விரும்புகிறேன். வன்முறையின் விளைவாக வலி, வேதனை, ரத்தம் ஆகிய விளைவுகள் உண்டு. நான் இதைப்பற்றி அறியாதவன் அல்ல. என்னுடைய நாவல்களை படிக்காதவர்கள் பலர் ஜான் விக் சினிமாவைப் பார்த்து ரசிப்பவர்களாக உள்ளனர்.

தினசரி ஏராளமானோர் கொல்லப்பட்டுவருகிறார்கள். ஆனால் நாம் ஒரு பையன் பெண்ணைச் சந்தித்தபோது என காதல் படம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இப்படி இருப்பவர்கள்தான் எனது நாவலில் உள்ள வன்முறையைப் பற்றி பேசுகிறார்கள்.  

நிறைய எழுத்தாளர்கள் பெண்களைப் பற்றிய சரியாக விவரித்து புரிந்துகொண்டு எழுதுவதில்லை என்று பேசியுள்ளீர்கள். ஏன் அப்படி யோசிக்கிறீர்கள்?

 

நிறையப் பேர் பெண்களைப் படிப்பதில்லை.  இதைச் சொல்லும்போது பலரும் எனது அம்மா, சகோதரியை நான் புரிந்துகொண்டுவிட்டேனா என நினைப்பார்கள். எழுத்தாளர்கள் பலரும் பெண்களை சரியாக புரிந்துகொண்டு எழுதுவதில்லை. எழுத்தாளர்கள் மக்களை சரியாகப் புரிந்துகொண்டு அவர்களின் உணர்வுகளை அறிந்து எழுதுவது குறைந்துவிட்டது. ஜேம்ஸ் மிலி இதுபற்றி கூறும்போது, கறுப்பின மக்கள் பற்றி கவனித்து எழுதுவதை விட அவர்கள் மீது எழுத்தாளர்களுக்கு உள்ள பயங்களை ஏற்றி வைக்கிறார்கள் என கூறியிருந்தார்.

எழுத்து துறை சார்ந்த பேராசிரியர் நீங்கள். உங்கள் மாணவர்களுக்கு என்ன அறிவுரைகளை சொல்ல நினைக்கிறீர்கள்?

நான் மாணவர்களுக்கு மூன்று நாட்கள் விதிமுறைகளைப் பற்றி சொல்லித் தந்துவிட்டு பிறகு நான்காவது நாள் அவற்றை உடைத்துவிட்டு கதைகளை படிக்கச் சொல்லுவேன். விதிகள் என்று பொதுவாக சொன்னாலும் அதெல்லாம் தனிமனிதனான ஒருவனின் கருத்துதான். இதன் அர்த்தம், ஒருவர் விதிகளை அறிந்துகொள்ளக் கூடாது என்பதல்ல. விதிகளிலிருந்து ஒருவர் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். கதையை பல்வேறு வழிகளில் சொல்லலாம் என்பதையும் மாணவர்கள் அறிந்துகொள்ளவேண்டும்.

ஆசியா ஆப்பிரிக்கா கண்டங்களில் இருந்தும் கூட நாவல் எழுதுபவர்கள், திரைப்பட இயக்குநர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள் அல்லவா?

ஆமாம். நாங்கள் கதை சொல்லுவதில் பசி கொண்டவர்களாக இருக்கிறோம். இப்போது எங்களைப் பற்றிய திரைப்படங்களும் வந்துகொண்டிருக்கின்றன. ட்ரிபிள் ஆர் ஐரோப்பாவில் வெற்றியடையவேண்டுமென்று அவசியமில்லை. ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் ஆசிய, ஆப்பிரிக்க எழுத்துகள், கதைகள் வெற்றியடைந்து வருகின்றன. நாங்கள் எங்கள் கதைகளை ஏற்கெனவே சொல்லத் தொடங்கிவிட்டோம். நாம்ஒருவருக்கொருவர் கதைகளை சொல்லிக்கொண்டால் கூட போதுமானதுதான்.

இந்திய வாசகர்களுக்கு கற்பனை சார்ந்த புனைவுகளில் உங்களின் பரிந்துரை என்ன?

எ ஸ்ட்ரேஞ்சர் இன் ஓலண்டிரியா  - சோபியா சமாதார், தி பாப்பி வார் – ஆர்.எப்.குவாங் ஆகிய இரு நூல்களை படிக்கலாம்.

 

 

 

 

 

 

 இந்து ஆங்கிலம்

மூலம் ராதிகா சந்தானம்


கருத்துகள்