வைரக்கற்களை திருடிக்கொண்டு தனித்தீவுக்கு வரும் இருபெண்களை துரத்தும் கொலைகாரர்கள்! பாடி ஆஃப் சின்

 











பாடி ஆஃப் சின்

(2018)

ஆங்கிலம்

 Directors: Amariah OlsonObin Olson

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறும் கதை. அங்குள்ள பணக்கார தொழிலதிபர்கள், ஊதாரி பயல்கள் வரும் பார். அவர்களை வேட்டையாட நிறைய ஆட்களும் இருப்பார்களே? அப்படித்தான் எரிகா என்ற பெண் தனது தோழி லோரனுடன் அங்கு இருக்கிறாள். அங்கு வரும் பணக்கார ஆட்களை ஆசைப் பேச்சால் மயக்கி, உடலுறவு கொண்டுவிட்டு பிறகு மயக்க மாத்திரையால் நிஜமாக தூங்கவைத்துவிட்டு வேலையைத் தொடங்குகிறார்கள். அவர்களின் பணம், அணிகலன் என அனைத்தையும் திருடிக்கொண்டு கம்பி நீட்டுவதே வழக்கம்.

தனது அடையாளத்தை மறைத்து திருட்டு வேலையை செய்துவருகிறாள். உடலுறவு சந்தோஷமும், திருட்டில் தனது சாமர்த்தியம் மேம்படுவதையும் அவளே சிலாகித்து கொள்கிறாள். தனது தோழி லோரனுக்கும் இதுபற்றி கற்றுத் தருகிறாள். வறுமையான நிலைக்காக எரிக்காவை தேடி வந்த லோரனுக்கு, திருட்டு செய்வதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால் அவள் எரிக்காவை நம்புகிறாள்.

எரிக்கா அப்படி ஒரு பணக்காரனை சந்தித்து பேசி இறுதியாக உடலுறவு கொள்கிறாள். பிறகு கிளம்பும்போது, மதுபானத்தில் மாத்திரையை கலந்துகொடுத்து அவனிடமிருந்த பணத்தை, வாட்சை, குறிப்பாக மறைத்து வைத்த வைரங்களை கொள்ளையடிக்கிறாள். உண்மையில் அவளுக்கு தான் செய்த விஷயம் எத்தனை பேரை பாதிக்கிறது என தெரியாது. தெரிந்தாலும் தெரிந்த வித்தையை செய்யத்தான் செய்வாள். ஏன்? வாழும் வழியென அவளுக்குத் தெரிந்தது அதுதானே?

வைரத்தை எடுத்துக்கொண்டு எரிக்காவும் லோரனைக் கூட்டிக்கொடு தனிதீவு ஒன்றில் உள்ள தனது மறைவிடமான வீட்டுக்கு வருகிறாள். ஆனால்  வரும்போது ஒரு பெட்டி ஒன்றை எடுத்துக்கொண்டு வருகிறாள். அதனால் எரிக்கா, லோரனுக்கு ஏற்படும் ஆபத்தும். அதை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதும்தான் கதை.

படம் சுபா எழுதிய நாவல் போல சண்டையும், துப்பாக்கிச் சத்தமுமாக போகும் என்று நினைக்கலாம். அது உங்கள் பிரச்னை என இயக்குநர் நினைத்து, டபுள் எக்ஸ் சினிமாவாக எடுத்து வைத்திருக்கிறார். எரிக்கா பாத்திரத்தில் நடித்த நடிகை படத்தின் தயாரிப்பாளரோ என நினைக்கும்படி அவருக்கான உடைகள், காட்சிகள் மட்டும் தனியாக அழகாக தெரிகின்றன. படுக்கை அறை சமாச்சாரம் உட்பட.

ஆனால் தீவுக்கு வந்தபிறகு கதை ஒட்டகம் போல படுத்தே விடுகிறது. எழமாட்டேன்கிறது. எரிக்கா, அவளது தோழியைச் சுற்றி மூன்று ஆண்கள் வருகிறார்கள். இவர்களில் யார் நல்லவர், கெட்டவர் என்பதை சுவாரசியாக சொல்லியிருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். வில்லன் பாத்திரங்கள் இரண்டு உண்டு. இருவரும் நடக்கிறார்கள், சிகரெட் குடிக்கிறார்கள், இல்லையெனில் பாரில் மது அருந்துகிறார்கள். இதைத்தவிர அவர்கள் வேறெதுவும் செய்யவில்லை. இறுதிக் காட்சியில் இருக்கும் ட்விஸ்ட் நன்றாக இருந்தாலும் அது சுவாரசியமானதாக அமையவில்லை.

சண்டைக்காட்சிகள் எல்லாமே, நாயகி, ஷெரீஃப், வில்லன் டாம் ஆகிய பாத்திரங்கள் தூக்க கலக்கத்தில் சண்டைபோடுவது போல எடுத்து வைத்திருக்கிறார்கள்.

காமமும், பணத்தின் மீதான ஆசையும் உலகத்தை எப்படி ஆட்டிப்படைக்கிறது என்பதை முடிந்தளவு காட்சியாகவே காட்ட முயன்றிருக்கிறார் இயக்குநர். காட்சிகள் வெளிப்புறத்தில் அழகாக இருப்பதை விட ஆழமானதாக இருக்கவேண்டும் என்பதை மறந்துவிட்டார்.

எரிக்காவுக்காக மட்டுமே….

கோமாளிமேடை டீம் 



கருத்துகள்