பேய்ப்படங்களை கேலி செய்யும் சிரிப்பே வராத படம் - இடியட் - ராம் பாலா

 












இடியட்

இயக்குநர் ராம்பாலா

மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி

செம்மனூர் ஜமீன், அவரது படைத்தளபதிகளால் நயவஞ்சகமாக கொல்லப்படுகிறார். கூடவே அவரது மனைவி, மகன், மகள் என எல்லோரும்தான்.அவர்கள் ஆவியாக வந்து தங்களைக் கொன்றவர்களின் வம்சாவளியை எப்படி பழிவாங்குகிறார்கள் என்பதே கதை.

படம் பேய்ப்படமாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக பேய்ப்படங்களை கிண்டல் செய்வதுதான் படம் நெடுக நடக்கிறது. ஆனால் படத்தில் எந்த காட்சிக்கும் நமக்கு சிரிப்பே வருவதில்லை என்பதுதான் பேரதிர்ச்சி.

ராசுக்கவுண்டர், அவரது மகன் சின்ராசு ஆகியோருக்கான உறவு காட்டப்படும்போது சற்று ஆறுதலாக இருக்கிறது. ஆனந்தராஜின் நடிப்பும், மிர்ச்சி சிவாவின் வசனக் காமெடிகளும்தான் முதல் பகுதியில் நம்மைக் காப்பாற்றுகிறது. பிற்பகுதி படம் முழுக்க சேனாபதி மனநல மருத்துவமனையில்தான் நடக்கிறது.

இடியட் படம் பேய்ப்படங்களை கிண்டல் செய்கிற படம். எனவே, இது பயமூட்டும் பேய் படமாக உருவாகவில்லை. குறைந்தபட்சம் அப்படி கிண்டல் செய்கிற இயல்பில் பார்வையாளர்கள் சந்தோஷப்பட ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. திரையில் இருவர் இருக்கிறார்கள். எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். காட்சி ஊடகத்தில் எதற்கு இந்தளவு வசன காமெடி?.....

சின்ராசு, செம்மனூர் ஜமீன் போனால்தான் கதை அடுத்த பகுதிக்கு நகரும். எனவே, ராசு கவுண்டர் மூலம் சொத்து பத்திரம் சின்ராசுவுக்கு தரப்படுகிறது. செம்மனூர் ஜமீனுக்கு போகும் வழியில், விபத்தாகி சின்ராசுவுக்கு சித்தபிரமை ஏற்படுகிறது. அதனால் அவர் சேனாபதி மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அந்த மருத்துவமனையை நடத்துபவர், மருத்துவம் பார்ப்பவர் ஸ்மித்தா . இவர்தான் படத்தின் நாயகி.  கூடவே அங்கு சூனியக்காரி ஒருத்தி நோயாளி போல இருக்கிறாள். அவள் ஸ்மித்தாவை பின் தொடர்கிறாள். உண்மையில் ஸ்மித்தா யார், அவருக்கும் மருத்துவமனையிலுள்ள சூனியக்காரிக்கும் என்ன தொடர்பு என்பதை அறிந்துகொள்ள படத்தை நீங்கள் பார்க்கலாம்.

படத்தில் நீங்கள் பயப்படும், அடுத்த திருப்புமுனை என நினைக்கும் எந்த காட்சிகளும் கிடையாது. படத்தில் வரும் பாத்திரங்கள் அவர்களாகவே லொள்ளுசபா கோக்குமாக்குகளை செய்துகொண்டிருப்பார்கள். அதை அவர்கள் காமெடி என நினைப்பார்கள்.

 ஒருகட்டத்தில் மனநல மருத்துவமனையில்  உள்ள பாத்திரங்கள்தான் படம் நெடுக நடித்திருக்கிறார்களோ என சந்தேகமாகவே இருக்கிறது. படத்தில் தான் ஏற்றுக் கொண்ட பாத்திரத்தை சீரியசாக எடுத்துக்கொண்டு நடிப்பவர்கள் இருவர். ஒருவர் செம்மனூர் ஜமீன். அடுத்து சூனியக்காரி. வேறு யாரும் படத்தில் சிறப்பாக நடிக்கவில்லை. அப்படி நடித்துத்தான் என்னாக போகிறது என நினைத்தார்களோ என்னவோ?

இயக்குநர் ராம்பாலா, வசனமாகவே காமெடியைப் பேசினால் போதும் என நினைத்திருக்கிறார். காட்சிகளில் சுவாரசியமான எந்த விஷயங்களும் இல்லை. இதனால் படத்தை முனைப்போடு பார்க்க ஆர்வமே ஏற்படுவதில்லை.

பேய்களே பார்க்க பயப்படும் படம்

கோமாளிமேடை டீம்


கருத்துகள்