ஊருக்கு நல்லது செய்யும் மோட்டார் சைக்கிள் கிளப்புகள்!

 













யமஹா, கவாசாகி நின்ஜா, ஹீரோ இம்பல்ஸ், பல்சர் என பைக்குகளை ஓட்டும் இளைஞர்கள் எப்போதும் சமூகத்தில் ஆபத்தான ஆட்களாகவே பொறுப்பற்றவர்களாக பார்க்கப்படுகிறார்கள். இதற்கு அவர்கள் நடந்துகொள்ளும் ‘எரிமலை எப்படி பொறுக்கும்’ என்ற அவசரமான மனநிலையும் முக்கியமான காரணம்.

 ராபர்ட் எம் பிர்சிக் என்பவர், ஸென் அண்ட் தி ஆர்ட் ஆஃப் மோட்டார்சைக்கிள் மெயின்டனன்ஸ்  என்ற நூலை எழுதியிருக்கிறார். ‘’மோட்டார்சைக்கிளில் பயணம் செய்வது என்பது தெரபி போலத்தான். பைக் பயணம் மூலம் ஒருவர் உலகத்தின் மீதும் சமூகத்தின் மீதும் கவனம் கொள்கிறார்’’ என்று பேசுகிறார்.

இங்கு நீங்கள் படிக்கப்போவது மோட்டார் சைக்கிளை வைத்துக்கொண்டு பீச்சில் பந்தயத்திற்கு போய் வாக்கிங் வரும் தொப்பை அங்கிள்கள் மீது மோதுபவர்கள் அல்ல. சமூகத்திற்கு கொஞ்சமே கொஞ்சம் நன்மை செய்யும் ஆட்களைப் பற்றித்தான்.

ஊர்வதி பத்தோலுக்கு இப்போது வயது 35 ஆகிறது. அவர் முதன்முதலில் தனது அக்காவின் தோழி ஒருவர் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்தார். அதனால், பின்னாளில் ராயல் என்பீல்ட் பைக் ஒன்றை வாங்கி ஓட்டத் தொடங்கினார். முதன்முதலில் பைக் ஓட்டத் தொடங்கியபோது அவருக்கு வயது 14. சினிமாதானே பலருக்கும் ஆதர்சம். ஊர்வசிக்கு தூம் படம் என்றால் இஷ்டம். எனவே அதில் வரும் ஸ்டன்டுகளை செய்துபார்க்க நினைத்தார். ஆனால் சுற்றிலும் இருந்தவர்கள், இயக்குநர் மோகன் ஜி போல, ‘’மோட்டார் சைக்கிள் ஓட்டுனா அவ பொண்ணு கிடையாது. கெட்டுப்போய்டுவ’’ என அழுகிப்போன தத்துவங்களை உளறிக்கொட்டியிருக்கிறார்கள். எதற்கு இவர்களோடு ஒவ்வொரு இடத்திலும் சண்டை? என்று ஊர்வசிக்கு தோன்றியது. எனவே, தி பிக்கர்னி என்ற பைக் கிளப்பைத் தொடங்கினார். தன்னைப் போல மோட்டார் பைக் ஓட்டுபவர்களை அதில் இணைத்தார். மொத்தம் பத்து பெண்கள். கர்டுங் லா எனும் உயரமான இடத்திற்கு சென்று வந்தனர். அதை லிம்பா சாதனையாக்கினார் ஊர்வசி.

தி பிகர்னி தொடங்கி பதினேழு ஆண்டுகள் ஆகிறது. இப்போது நாடெங்கும் பதினேழு கிளைகள் உள்ளன. 2500 பேர் இந்த கிளப்பில் இணைந்து பயணிக்கிறார்கள்.

இவர்களின் கிளப்பில் சேரும் பெண்கள், அதிக சக்தி கொண்ட பைக்குகளை வைத்திருக்கவேண்டுமென்ற அவசியம் கிடையாது. இங்கு உறுப்பினராகுபவர்களுக்கு வண்டியை பழுது பார்ப்பது பற்றி கற்றுக்கொடுக்கிறார்கள். பிற கிளப்புகளைச் சேர்ந்தவர்களையும் சந்தித்து உரையாடுகிறார்கள்.

 ஊர்வசி, வாகனத்துறை சார்ந்த நிறுவனத்தில் வேலை செய்கிறார். ‘’பெண்கள் தங்களை எந்த முன்முடிவு இல்லாமல் அணுக வேண்டும். அவர்களின் பாதுகாப்பும், ஒன்றாக நாங்கள் இணைவதும்தான் முக்கியம். நாங்கள் பெண்கள் பயணிப்பதற்கான வாகனங்களை விளம்பரம் செய்து வருகிறோம்.’’ என்றார் ஊர்வசி.

2

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மோட்டார்சைக்கிள் குழு, ராஷ்டிரிய ரைடர்ஸ். இவர்கள் ராணுவத்தினருடன் தங்கள் கொண்டாட்டங்களை வைத்துக்கொள்கிறார்கள். ராணுவத்தின் முகாம், பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் ஆகியோரை சந்தோஷப்படுத்துகிறார்கள். ஷிங் செகாவாத் என்பவர், தனது நண்பர்கள் ஷிவாதித்தே மோடி, ரவிந்திர ஜாங்கிர் ஆகியோருடன் இணைந்து ராஷ்டிரியா ரைடர்ஸ் கிளப்பைத் தொடங்கியிருக்கிறார்.  ‘’ராணுவத்தினரின் தியாகத்தை நாங்கள் அறிந்திருக்கிறோம். அவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு நன்றி சொல்ல நினைத்தோம். அதை மட்டுமே சொல்ல நினைத்தோம்’’ என்றார் செகாவத்.  

ஹிம்மத் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் ஜெய்ப்பூரிலிருந்து கார்க்கில் வரை பதினாறு நாள்கள் மோட்டார்சைக்கிளில் சென்றனர். மொத்தம் 4 ஆயிரம் கிலோமீட்டர்கள். ராணுவ வீர ர்களைப் பார்த்து ஜெய்ப்பூர் மக்கள் கையெழுத்திட்ட ஓவியம் ஒன்றை பரிசளித்திருக்கிறார்கள். ராஷ்டிரிய ரைடர்ஸ், 20 பயணங்களில் 27 ஆயிரம் கிலோமீட்டர்களைக் கடந்துள்ளனர். இப்படி சென்ற பயணங்களில் ஒன்று நூலாகவும் மாறியிருக்கிறது. தி டைகர் ஆப் டிராஸ் – ஹார்பர் கோலின்ஸ் வெளியீடு, இந்த நூலின் துணை எழுத்தாளர் ஹிம்மத். நூல், கேப்டன் அனுஜ் நய்யாரின் ராணுவ வாழ்க்கையைப் பற்றி பேசுகிறது. நூலை அனுஜின் தாய், மீனா எழுதியிருந்தார்.

3

மதுசூதன் சிங், டெல்லியைச் சேர்ந்தவர். இவர், ஹார்மோனி ஆஃப் ரைடர்ஸ் என்ற மோட்டார் சைக்கிள் கிளப்பை வைத்திருக்கிறார். பெண் குழந்தைகளுக்கான கல்வி, ரத்த தானம், ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கான நிதியுதவி ஆகியவற்றுக்காக மோட்டார் சைக்கிளில் பயணிக்கிறார். ‘’எங்கள் கிளப்பின் நோக்கமே, சேவா, சிக்‌ஷா, சுரக்ஷா தான். முடிந்தவரை சாதாரண மக்களுக்கு உதவி செய்ய நினைக்கிறோம். சமூகத்திற்கு ஏதேனும் திருப்பிக் கொடுக்கும்போது மனதிற்கு திருப்தி கிடைக்கிறது’’ என்றார் மதுசூதன் சிங்.  

 4

2020 ஆம் ஆண்டு நான்கு பேர்களாக இருந்த பைக்கர்ஸ் ட்ரூப், இன்று வளர்ந்து நானூறு உறுப்பினர்களைக் கொண்டதாக மாறியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த மோட்டார்சைக்கிள் பிரியர்கள், இக்குழுவைத் தொடங்கியுள்ளனர். இதன் நிறுவனர், ஹர்சித். ஒரு இடத்திற்கு மோட்டார்சைக்கிளில் செல்லவேண்டியது, பிறகு அங்கு குப்பைகளை சுத்தம் செய்யவேண்டியது என்பதுதான் பைக்கர்ஸ் ட்ரூப்பின் லட்சியம்.

‘’நாங்கள் மோட்டார்சைக்கிளில் பல்வேறு இடங்களுக்குச் சென்றபோதுதான், அங்கு பிளாஸ்டிக் பாட்டில்களும், நாப்கின்களும் டயப்பர்களும் கிடப்பதைப் பார்த்தோம். எனவே, அதை  சுத்தம் செய்ய நினைத்தோம்.

தொடக்கத்தில் இடங்களை சுத்தம் செய்யும்போது, என்மீது சிலர் குப்பைகளை  எறிந்து கேலி செய்த அவமானங்களும் நடந்துள்ளது. மக்கள் மறுசுழற்சி பாட்டில்களை பயன்படுத்தவேண்டும். அப்படி இல்லை என்றால் குப்பைகளை குப்பைத்தொட்டியிலாவது போடலாம். எனவேதான் நாங்கள் இதை சரிசெய்ய களமிறங்கினோம்’’ என்றார் ஹர்ஷித்.

மூன்று மாதங்களுக்கு ஒரு பயணம் என திட்டமிட்டு பயணிக்கிறார்கள். வண்டி ஓட்டுவதற்கான பொருட்கள், உணவு ஆகியவற்றோடு குப்பை அள்ளுவதற்கான பேக்கையும் எடுத்துச் செல்கிறார்கள். தொட்டிக்கல்லு அருவி, சிவகஞ்ச் மலை ஆகிய இடங்களில் குப்பைகளை அகற்றியிருக்கிறார்கள். சில இடங்களில் மாணவர்கள், மக்களின் ஆதரவும் கிடைத்துள்ளது.

இந்து ஆங்கிலம்

மூலம்

பிரவீன் சுதேவன்

thanks - tenor

கருத்துகள்