12.மோசடி நிரந்தரம், முறைகேடு ஒரு சந்தர்ப்பம் - மோசடி மன்னன் அதானி

 











ஆதி குழுமம், அதானி குழுமத்திற்கு நிலக்கரியை விநியோகம் செய்யும் நிறுவனமாகும். நீண்டகாலமாக அதானி குழுமத்தின் வாடிக்கையாளராக உள்ளது. ஆதி குழுமத்தின் முதலீட்டாளர் பெயர், உட்கர்ஷ் ஷா. இவர், கௌதம் அதானியின் முப்பதாண்டு கால நண்பர் என எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை கட்டுரை தகவல் கூறுகிறது.





2020ஆம் ஆண்டு கணக்குப்படி, ஆதி குழுமத்தின் வருவாய், 9 மில்லியன் டாலர்களாகும். மொத்த லாபம் 97 ஆயிரம் டாலர்கள் என்ற தகவல், நிதி தொடர்பான ஆவணங்களிலிருந்து தெரிய வருகிறது.

அதானி குழுமத்தில் உள்ள நான்கு நிறுவனங்கள், ஆதி குழுமத்திற்கு 87.4 மில்லியன் டாலர்களை கடனாக வழங்கியுள்ளது. ஆனால் இதுபற்றி விசாரித்ததில் பணம் கடன் கொடுக்கப்பட்டதற்கான எந்த ஆவணங்களும் இல்லை. இத்தனைக்கும் கடன் கொடுத்த பல நிறுவனங்கள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டவை.

ஆதி குழுமத்தின் வருமானம், லாபம் அடிப்படையில் அந்த நிறுவனம், பிற நிறுவனத்திடமிருந்து கடனைப் பெற்றதே தவறான நடவடிக்கை. பொருளாதார ஆலோசகர் எவரும் கடன் வாங்கும் யோசனையை ஏற்கவே மாட்டார்கள்.  ஆதி குழுமம், வாங்கிய கடனைக் கட்ட900 ஆண்டுகள் தேவைப்படுகிறது. அப்படி கடினமாக உழைத்தாலும் கூட அசலைத்தான் கொடுக்க முடியும். அப்போதும் கடன் தொகைக்கான வட்டியைக் கட்ட முடியாது.

2020ஆம் ஆண்டு, ஆதி கார்ப் என்டர்பிரைசஸ் நிறுவனம், 86 மில்லியன் டாலர்களை அதானி பவர் நிறுவனத்திற்கு கடனாக வழங்கியது.  அதானி குழுமத்தில் உள்ள நான்கு நிறுவனங்கள் மூலம் அதானி பவர் நிறுவனத்திற்கு 98 சதவீத கடன்தொகை கிடைத்தது.

அதானி குழும நிறுவனங்களுக்குள் நிதியை அனுப்ப, ஆதி குழுமம் ஒரு வழித்தடமாக பயன்பட்டது. இந்த வகையில் பரிவர்த்தனையான பணம், பட்டியலிடப்பட்ட அதானி நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு அதானி பவர் மகாராஷ்டிரா லிட். நிறுவனம்(அதானி பவர் நிறுவனத்தின் துணை நிறுவனம்), 1,989 மெகாவாட் மின் திட்டத்தை டிரோட் எனும் இடத்தில் மேம்படுத்தியது. 2010ஆம் ஆண்டு மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த குரோமோர் ட்ரேட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம், அதானி பவர் மகாராஷ்டிரா நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை, 128 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியது.

2011ஆம் ஆண்டு குரோமோர் நிறுவனத்திற்கு, அதானி பவர் நிறுவனத்திடமிருந்து வியாபார ஒப்பந்தம் ஒன்று வந்தது. அதாவது குரோமோர் நிறுவனத்தை அதானி பவர் வாங்க நினைத்தது. அதானி பவர் மகாராஷ்டிராவில், குரோமோர் நிறுவனம் வாங்கியிருந்த பங்குகளின் மதிப்பு, திடீரென ஒரே நாளில் 128 மில்லியன் டாலர்களிலிருந்து 423 மில்லியன் டாலர்களாக உயர்ந்தது. அதற்கு முன்னர், குரோமோர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு விலை 128.3 மில்லியன் டாலர்கள் என உள்ளூர் நீதிமன்றத்தில் உள்ள ஆவணங்களில் பதிவாகியிருக்கிறது. இரு நிறுவனங்கள் ஒன்றாக இணைக்கப்படுவதற்கு முன்னர் பங்கு மதிப்பு திடீர் வளர்ச்சி பெற்றிருக்கிறது. (ப.108)




விற்பனை விலையாக, 9 சதவீத அதானி பவர் நிறுவனத்தின் பங்குகள் குரோமோர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த பங்குகளின் மதிப்பு 213 மில்லியன் டாலர்களாகும். இது செய்திகளிலிருந்து பெறப்பட்ட தகவலாகும்.

ஆனால் இப்படியொரு வணிகம் நடந்ததற்கான எந்த வித ஆதாரங்களும் அதானி பவர் நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் பதிவு செய்யப்படவில்லை. குரோமோர் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் அடிப்படையில் செய்யப்பட்ட வணிகம் என்பதால், அத்தகவல் பற்றி அதானி பவர் நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என அந்நிறுவனம் கூறியது.

ஹிண்டன்பர்க் அமைப்பு, செய்த ஆய்வில் குரோமோர் நிறுவனத்திற்கு எந்த உரிமையாளர்களும் கிடையாது. அதன் ஒரே தலைவர் திரு. சாங் சுங் லிங் என்பது உள்ளூர் நீதிமன்ற (மொரீஷியஸ்) ஆவணங்களிலிருந்து தெரிய வந்தது.

சிங்கப்பூரில் இயங்கி வரும் அதானி குழுமத்தின் தனியார் நிறுவனமான அதானி குளோபல் லிட்.நிறுவனத்தில் வினோத் அதானியோடு சேர்ந்து இரண்டாவது தலைவராக இருப்பவர் சாங் சுங் லிங். இந்த தகவலை அதானி என்டர்பிரைசஸ் ஆண்டறிக்கை தெரிவிக்கிறது. (ப.66)  சாங் சுங் லிங், அதானி குழுமத்தின் பங்குதாரர், கௌதம் அதானியின் நெருங்கிய வணிக கூட்டாளி என தைவான் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வினோத் அதானியுடன் தொடர்புகொண்டுள்ள சாங், இரண்டு மோசடி விவகாரங்களில் சம்பந்தப்பட்டவர் ஆவார்.

சாங் சுங் லிங் பெயர், இந்திய வருவாய்த்துறை புலனாய்வு ஆணையகத்தின் ஆவணங்களில் இடம்பெற்றுள்ளது. அதானியின் பட்டிலியப்பட்ட நிறுவனங்களிலிருந்து நிதியை அதானி குழுமம் மோசடியாக பெற்ற வழக்கில் சாங் சம்பந்தப்பட்டிருக்கிறார்.  அதானியின் தனியார் நிறுவனங்களில் ஒன்று, எலக்ட்ரோஜென் இன்ஃப்ரா ஹோல்டிங்க் பி.லிட். இந்த நிறுவனம், சட்டவிரோதமான முறையில் அதானி என்டர்பிரைசஸ், அதானி பவர் ஆகிய நிறுவனங்களிலிருந்து நிதியைப் பெற்றுள்ளது என டிஆர்ஐ ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. சாங், இந்த நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து விலகியபிறகு அந்த பதவியில் நியமிக்கப்பட்டவர் வினோத் அதானி.






சாங் சுங் லிங், குடாமி இன்டர்நேஷனல் பிடிஇ லிட். நிறுவனத்தின் தலைவர் ஆவார். அதானி குழுமத்தின் வைர வணிக மோசடியில் தொடர்புடைய குடாமி நிறுவனம், அரசின் விசாரணை அமைப்புகளால் விசாரிக்கப்பட்டுள்ளது (ப.16)

2005ஆம் ஆண்டு ஆவணங்களின்படி, வினோத் அதானியின் வீட்டு முகவரி 75, மேயர் சாலை, 17-01,  ஹவாய் டவர். வினோதமாக சாங் சுங் லிங்கின் வீட்டு முகவரியும் கூட இதேதான் என விசாரணை ஆவணங்கள் தெரிவிக்கின்றன.



 ஹிண்டன்பர்க் அமைப்பு, சிங்கப்பூரில் உள்ள ஹவாய் டவர் வீட்டைச் சென்று பார்வையிட்டது. அங்குள்ள குடியிருப்பில் சாங் சுங் லிய், வினோத் அதானி ஆகியோர் இருவரும் வாழும் வீடு இருந்தது.  

குரோமோர் நிறுவனத்துடன் அதானி குழுமத்தின் வணிகம் என்பது, பொதுவான நிறுவனப் பங்குதாரர்களின் பணத்தை மோசடியான முறையில் பறிக்க நடத்தப்பட்டது என தெரிய வந்தது.  







இந்தியாவைச் சேர்ந்த அடிப்படைக் கட்டுமான நிறுவனம், பிஎம்சி புராஜெக்ட்ஸ். 2010ஆம் ஆண்டு இந்த நிறுவனம் சம்பாதித்த வருமானம் 784 மில்லியன் டாலர்களாகும். இதை அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கை கூறுகிறது. பிஎம்சி நிறுவனம், அதானி குழுமத்துடன் வணிகத் தொடர்பு கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தைத் தவிர வேறு முக்கியமான நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் பிஎம்சி நிறுவன வலைத்தளத்தில் இல்லை.

அதானி குழுமம், தனது நிறுவன ஆவணங்களில் பிஎம்சி நிறுவனம் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை.

அதானி குழுமத்துடன் அல்லது அதன் ஒரு பகுதியாக இயங்கியதன் வழியாகவே பிஎம்சி புரோஜெக்ட்ஸ் நிறுவனத்திற்கு, பெருமளவு வருமானம் கிடைத்துள்ளது. 2014ஆம் ஆண்டு வருவாய்த்துறை புலனாய்வு ஆணையகத்தின் ஆவணப்படி, பிஎம்சி புராஜெக்ட்ஸ் என்ற நிறுவனம் ஒரு போலி நிறுவனமாகும். இதைப் பயன்படுத்தி நிலக்கரி, மின்சார உற்பத்தி பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளது அதானி குழுமம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎம்சி புரோஜெக்ட்ஸ் நிறுவனம், முன்னர் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்த முகவரி, தொடர்பு எண் அதானி குழுமத்துடன் தொடர்புடையது. பிஎம்சி நிறுவனத்தின் பழைய வலைத்தளத்தில், அதானி குழுமத்துடன் பெரிய சிக்கலான திட்டங்களை இணைந்து செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதில், அதானி தாஹெஜ் துறைமுகத் திட்டமும் ஒன்று.

இதைப் படிக்கும்போது நமக்கே குழப்பமாக இருக்கலாம். ஆனால் இந்த குழப்பம் பிஎம்சி ஊழியர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. நான் வேலை பிஎம்சி என்ற நிறுவனத்திற்காகவா? அல்லது அதானி குழுமத்திற்காகவா? எதற்கு வேலை செய்கிறோம் என நிறையவே குழம்பியிருக்கிறார்கள். இறுதியாக அவர்களுக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது. பிஎம்சி நிறுவனத்தின் உதவி மேலாளர் பிஎம்சி புரோஜெக்ட்ஸ் (அதானி குழுமம்) என தனது பணி பற்றி குறிப்பிட்டு பிரச்னைக்கு தீர்வுகண்டிருக்கிறார்.

இன்னொரு பணியாளர், அதானி பிஎம்சி புரோஜெக்ட்ஸ் இந்தியா என பெருநிறுவன பதிவேடுகளில் இல்லாத பெயரைக் கூட குறிப்பிட்டு, தான் அங்கு வேலை செய்வதாக கூறியிருக்கிறார்.

லிங்க்டு இன் வலைத்தளத்தில் இதுற்றி தேடியபோது ஏழு பணியாளர்களை ஹிண்டன்பர்க் அமைப்பு அடையாளம் கண்டது. இவர்கள் அனைவரும் அதானி குழுமம், பிஎம்சி என இரு நிறுவனங்களின் பெயர்களையும் தாங்கள் வேலை செய்யும் நிறுவனங்களாக குறிப்பிட்டுள்ளனர்.

வருவாய்த்துறை புலனாய்வு ஆணையக அதிகாரிகள், பிஎம்சி புரோஜெக்ட்ஸ்  நிறுவனம் பற்றி விசாரித்தபோது, அதன் உரிமையாளர் யார் என்பதை அறிய முடியவில்லை. (ப.49, 74,75) 2021ஆம் ஆண்டு பிஎம்சி நிறுவனத்தின் உரிமையாளர் பற்றிய தகவல்  வெளியானபோது, அதன் தலைவர் என சாங் சியன் டிங் என குறிப்பிடப்பட்டது. இவர், சாங் சுங் லிங்கின் மகன் ஆவார்.

தைவான் நாட்டில் நடைபெற்ற அரசு விழாவில், பிஎம்சி புரோஜெக்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் சாங் சியன் டிங் பங்கேற்றார். அப்போது அவரை ‘அதானி குழுமத்தின் தைவான் நாட்டு பிரதிநிதி’ என குறிப்பிட்டனர். நிகழ்ச்சியில் அதானி குழுமத்தின் பெயர் அட்டையை கையில் வைத்திருந்த சாங் சியன் டிங், அதானி குழுமத்தின் பிரதிநிதியாகவே பேசினார் என தைவான் நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.



2018ஆம் ஆண்டு சீன ஊடகமும் மேற்சொன்ன தகவலை உறுதிப்படுத்தி செய்தியை வெளியிட்டிருக்கிறது.

ஹிண்டன்பர்க் அமைப்பு செய்த விசாரணையிலிருந்து பிஎம்சி புரோஜெக்ட்ஸ் என்ற நிறுவனம், அதானி குழுமத்தின் தனியார் நிறுவனம் என தெரிய வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களிலிருந்து நிதியை  சட்டவிரோத வழிகளில் பெறுவதும் உறுதியாகியுள்ளது. ஆனால் இதுபற்றிய தகவல்கள் அதானி குழுமத்தில் எங்குமே பதிவு செய்யப்படுவதில்லை.

 

நன்றி

திரு.இரா.முருகானந்தம்

டெனர்.காம். 

கவிஞர் மெய்யருள்

கருத்துகள்