மனதில் பெருகும் ஆவேசத்தை, கோபத்தை மடைமாற்ற முடியுமா?

 











ஆவேச உள்ளுணர்வு என்பதை நேர்மறையாக எடுத்துக்கொள்ளலாம். அதை விளையாட்டு மூலம் எளிதாக வெளிப்படுத்தலாம் என்று உளவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் அந்த இடத்திலும் அப்படி வெளிப்படுத்துவது, விதியாக இல்லாதபோதும் வரவேற்கப்படுவதில்லை. தன் கோபத்தை, ஆவேசத்தை வெளிப்படுத்தும் வீரர் ஊடகங்களில் மோசமான முன்னுதாரணமாக காட்டப்படுகிறார்.

பரிமாண வளர்ச்சிப்படி பார்த்தால் ஆவேச உள்ளுணர்வு என்பதை உயிர்கள் பிழைப்பதற்கான வாசலாக பார்க்கலாம். வெல்லும் வெறி இல்லாமல் நாம் போர், நோய்களைத் தாண்டி பிழைத்து வந்திருக்க முடியாது. ஒருவகையில் உயிர்களை பிழைக்க வைப்பதற்கான ஆற்றலாக ஆவேசத்தைக் கொண்டிருக்கிறோம். மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளுக்கும் இந்த உணர்வு உண்டு. உயிருக்கு ஆபத்து வரும்போது யாரும் பிறருக்கு செல்லம் காட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள். தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றவே நினைப்பார்கள்.  லோரன்ஸ் என்ற உளவியல் ஆய்வாளர் மனிதர்களுக்கு ஏற்படும் ஆவேசத்தை நேர்மறையாகவே அணுகிறார். தனது கோட்பாட்டை விலங்குகளை வைத்து சோதித்து நிரூபணம் செய்தார்.

சிக்மண்ட் ஃப்ராய்ட், ஆவேச உணர்வை குறிப்பிட்டபடி செயலில் பயன்படுத்தி வெளியிட வேண்டும் என்கிறார். அப்படி ஆற்றல் வெளியிடாதபோது அது உள்ளுக்குள் அழுத்தமாக மாறும்.  ஸ்டோர் என்ற ஆராய்ச்சியாளர், ஒருவருக்கு ஏற்படும் ஆவேச இயல்புக்கு அவரது சிறுவயது அனுபவங்கள் அடிப்படையாக இருக்கும் என்று கூறினார். வாழ்க்கையில் ஒருவருக்கு ஏற்படும் எதிர்மறையான நிகழ்வுகளால் ஒருவர் ஆவேச இயல்பால் எதிர்வினையாற்றலாம். அடக்கி வைக்கும் ஆவேச உணர்வு ஒருவருக்கு மன அழுத்தம், ஸிஸோபெரெனியா, பாரனோயா என குறைபாடுகளாக உருவாகிறது. சில ஆய்வாளர்கள் ஆவேச இயல்புக்கு சமூக, பொருளாதார, அரசியல் சார்ந்த அழுத்தங்களைக் காரணமாக கூறுகிறார்கள். 

ஆவேச உள்ளுணர்வுக்கான நிரூபண சான்றுகளை பலரும் ஏற்றுக்கொள்வதில்லை. ஒருவரின் உடலில் இயற்கையாகவே தோன்றுகிறது அல்லது சூழல்களால் ஒருவர் கற்றுக்கொள்கிறார் என இரண்டு வகையில்தான் கருத்துகள் விவாதிக்கப்படுகின்றன.

ட்ரைவ் என்ற கோட்பாடு, குற்றம் செய்வதில் முக்கியமானது. குறிப்பிட்ட செயலை நோக்கி ஒருவரை செலுத்துகிற ஒன்று. ஒருவரை குறிப்பிட்ட நோக்கத்தில் உழைக்கிறார் ஆனால் அந்த நோக்கத்திற்கு நிறைய தடைகள், சவால்கள் வருகின்றன. அதை அவர் விரக்தி அல்லது ஆவேசமாக எதிர்கொள்வார். இந்த வழிமுறையில்தான் ஒருவர் வெல்கிறார் அல்லது தோற்று உபதேசிப்பவராக மாறுகிறார். விரக்தியும் கூட அப்படியே இருக்காது. அதுவும் கூட மனதில் தேங்கி ஏதோவொரு வகையில் வன்முறையாக மாறலாம்.

 

ஆவேசம் என்பது உருவாவது, அதை பயன்படுத்துவது, பாதிப்பை எதிர்கொள்வது என நிறைய விஷயங்களை கவனிக்கவேண்டும். சமூகம் வழியாக கூட ஆவேச உணர்வை ஒருவர் கற்றுக்கொள்ளலாம். இதற்கு பல்வேறு மனிதர்களின் அனுபவங்கள் உதவக்கூடும். ஆனால் ஆவேசத்திற்கு வெற்றிகளைப் போலவே இன்னொரு புறத்தில் தோல்வியும் பலியானவர்களும் உண்டு.

காற்று மாசுபாடு, வெப்பம் அதிகரிப்பது, மக்கள் கூட்டம் ஆகியவை உணர்வு ரீதியாக ஒருவரை ஆவேச உணர்வுக்கு உள்ளாக்குகிறது. இந்த ஆவேச உணர்வு உடல் ரீதியாக, உணர்வு ரீதியாகவும் வெளிப்படுகிறது. வெளிப்புறத்தில் உள்ள தூண்டுதல்களால் ஒருவரின் உணர்வுநிலை,அ றிவு தூண்டப்பட்டு அவர் ஆவேசம் கொள்கிறார். சுற்றுச்சூழல் அழுத்தம், சமூக பாகுபாடுகள், அரசியல் முரண்பாடுகள் இப்படி வெளிக்காரணங்களாக அமைகின்றன.

ஒருவர் பிறரை எப்போது தாக்குகிறார்? தனது வாழ்க்கைக்கு, இருப்புக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக உணரும்போதுதானே? இந்த சூழ்நிலையில்தான் ஒருவர் மனதில் ஆவேசம் பெருகி வன்முறை செயல்பாடுகள் உருவாகின்றன. கால்பந்து அல்லது வேறு விளையாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். ஒருவர் தனது அணிக்காக ஆதரவைத் தெரிவிக்கிறார். அதற்கு இன்னொரு அணியை கிண்டல் செய்கிறார். உடனே எதிர் அணியை ஆதரிக்கும் ரசிகர்கள் சும்மாயிருப்பார்களா? சம்பந்தப்பட்டவர்களை வாடா அடித்தே பார்த்துவிடுவோம் என தூண்டுகிறார்கள். பிறகு என்ன? அடிதடி, கலவரமாகிறது. வன்முறையால் சிலர் ஊனமாகிறார்கள். சிலரது வாழ்க்கை மீட்கவே முடியாத அளவில் சரிகிறது. மீட்பு பெற முடியாதபடி வீழ்ச்சி அடைகிறது.

படம் - பிக்சாபே 


கருத்துகள்