இளம் விதவையைக் காதலித்து அதன் வழியாக தனது அம்மாவை உணரும் பால்ராஜூ! - சாவு கப்புரு சல்லாக

 












சாவு கப்புரு சல்லாக

தெலுங்கு

இயக்குநர் – கவுசிக் பெகல்படி

இசை – ஜேக்ஸ் பிஜோய்


இறந்தவர்களை மயானத்திற்கு கொண்டு செல்லும் பஸ்தி பால்ராஜ், சாவு வீட்டில் கணவரை இழந்த பெண்ணைக் காதலிக்கிறார். இந்த காதல் இருவர் வாழ்விலும், குடும்ப உறுப்பினர்களிடையேயும் ஏற்படுத்தும் விளைவுகள்தான் கதை.

குடிசைப்பகுதி மக்களாக வாழ்பவர்களின் வாழ்க்கை, மத்திய வர்க்க கிறிஸ்தவர்களின் வாழ்க்கை என இரண்டையும் இயக்குநர் விவரித்துள்ளார்.

பஸ்தி பால்ராஜூக்கு, அவரது தாயான கங்கம்மாதான் எல்லாமே. கங்கம்மா, விசாகபட்டினம் கடற்கரையில் சோளத்தை சுட்டு வருகிறார். பால்ராஜின் அப்பா, வாதம் வந்து விழுந்து படுக்கையில் கிடக்கிறார். வீட்டுக்கான சம்பாத்தியம் என்பது கங்கம்மாவின் பொறுப்பு. பஸ்தி பால்ராஜ் , இறந்தவர்களை தூக்கிச் சென்று மயானத்தில் அடக்கம் செய்யும் வேலையை செய்கிறார். இதில் கிடைப்பதுதான் அவரது சம்பாத்தியம்.

சாவு வீட்டுக்குப் போகும்போது அங்கு, இறந்த பிணத்தின் அருகே மல்லிகா என்ற இளம்பெண்ணைப் பார்க்கிறார் பால்ராஜ். உடனே, காதல் வயப்பட்டு பிணத்தை தூக்கி வண்டியில் வைக்கும் முன்னரே காதல் வயப்படுகிறார். உடலை அடக்கம் செய்துவிட்டு கிளம்பும்போதே, மல்லிகா என்ற இளம் விதவையிடம் காதலைச் சொல்லிவிடுகிறார். இதனால் அவருக்கும் மல்லிகாவின் மாமனார் வீட்டாரான கிறிஸ்தவர்களுக்கும் சண்டையாகிறது. பால்ராஜூவின் காதலை மல்லிகா ஏற்றாளா, இல்லையா என்பதே கதை. அதைத்தாண்டி ப்படத்தில் ஈர்க்கும் விஷயங்கள் உண்டு.

முக்கியமாக கங்கம்மாவின் வாழ்க்கை. அவருக்கும் மோகனுக்கும் இடையிலான நட்பும் காதலும்….

படத்தில் முரண் என்பதே பால்ராஜூவுக்கும் கணவரை இழந்த மல்லிகாவுக்குமான காதலும், அதுதொடர்பாக மல்லிகாவின் மாமனார் வீட்டாருக்குமான மோதல். இன்னொருபக்கம், பால்ராஜூவின் அம்மா கங்கம்மாளுக்கும் டிவி மோகனுக்குமான காதல். தன் அம்மாவின் காதலை பால்ராஜூ எப்படி புரிந்துகொள்கிறார் என்பதே மல்லிகாவின் மனதைப் புரிந்துகொள்வதற்கான மைய இடமாக அமைகிறது.

தனது அம்மாவின் உழைப்பு, காதல் பற்றி இரண்டு இடங்களில் பால்ராஜூ பேசுகிறார். ஒன்று, மல்லிகா பஸ்சிற்காக காத்திருக்கும்போது.. இரண்டாவது சர்ச்சில் மல்லிகாவின் மாமனாரிடம் வலியும் நெகிழ்ச்சியுமாக பேசுவது….

படத்தில் நெகிழ்ச்சியாக பார்வையாளர்கள் ஒன்றாக இணையும் இடங்கள் சில இயல்பாகவே அமைந்திருக்கிறது ஆனால் அதையும் நகைச்சுவையாக்கியே இயக்குநர் காட்டிவிட்டார். இதனால் நாயகனின் மன முதிர்ச்சியை நாம் பார்ப்பது கடினமாகவே இருக்கிறது. உணர்வதும் கூட மிகச்சில இடங்கள்தான்.

கீழ்த்தட்டு வர்க்க ஆட்கள், அவர்களைப் பற்றி மத்தியதர வர்க்கத்தினரின் எண்ணங்கள் என்ன, முன்முடிவுகளால் ஒருவரைப் பற்றி முடிவுக்கு வந்தால் என்னாகும்., உண்மையான சந்தோஷம்  என்பது எங்கிருக்கிறது  என்பதை படம் நெடுக  வசனங்களாலும், காட்சியாலும்  பதிவு செய்துள்ள இயக்குநர் கவுசிக் பாராட்டப்படவேண்டியவர்.

பெரிய பிரச்னைக்களுக்கு எளிய தீர்வுகள் இருக்கும், வாழ்க்கை என்பதே அழகான பொய், சாவு என்பது நம்ப முடியாத நிஜம் என சில வசனங்கள் கேட்பதற்கு நன்றாக எழுதப்பட்டிருக்கின்றன.

வாழ்க்கைத் தத்துவம்

கோமாளிமேடை டீம்

-----

பாடல்கள் இல்லாமல் திரைப்படம் யூட்யூபில் காணக்கிடைக்கிறது. 

கருத்துகள்