வரலாற்றை உண்மைகளின் அடிப்படையில்தான் பார்க்கவேண்டும் - வரலாற்று ஆய்வாளர், எழுத்தாளர் வில்லியம் டால்ரிம்பிள்

 





வரலாற்று ஆய்வாளர் வில்லியம் டால்ரிம்பிள்














வில்லியம் டால்ரிம்பிள், டெல்லியைப் பற்றிய நிறைய நூல்களை எழுதியுள்ளார். டெல்லி பல்வேறு வம்ச மன்னர்களின் கதைகளைப் பேசிக்கொண்டே இருக்கும் நகரம். அங்கு எங்கு திரும்பினாலும் ஏதாவது ஒரு மன்னரின் கல்லறை, நினைவுத்தூண் இருக்கும். எழுத்தாளர் வில்லியம், டெல்லியில்  நிஜாமூதீன் கல்லறை அருகில் அறை எடுத்து தங்கியிருந்தார். சிலந்திவலைகள் கட்டிய மூலை, தூசி படிந்த ஜன்னல்கள், கசியும் நீர்க்குழாய்  என வசதிகள் நிறைந்த அறை அது.

சிட்டி ஆஃப் ஜின் (1993), தி அனார்ச்சி, வொயிட் முகல்ஸ், ரிடர்ன் ஆப் எ கிங், தி லாஸ்ட் முகல் என தொடர்வரிசையாக நூல்களை எழுதியுள்ளார். 2021ஆம் ஆண்டு ‘கம்பெனி குவார்டர்’ என்ற நூலை எழுதினார். இப்போது இந்து நாளிதழின் இந்து லிட் ஃபார் லைஃப் நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருக்கிறார். அவரிடம் அவரின் அடுத்த நூல், பாட்காஸ்ட், வரலாறு பற்றியும் பேசினோம்.

நீங்கள் காலத்திற்கு ஏற்ப உங்களை புதுப்பித்துக்கொள்கிறீர்களா?

நான் முதல் நூல் எழுதும்போது என்ன செய்தேனோ அதைத்தான் இப்போதும் செய்துகொண்டிருக்கிறேன். எனது பேச்சுகள் குறிப்பிட்ட காட்சிப்பரப்பை விளக்கி வருகின்றன. என்னைப் பொறுத்தவரை எதுவுமே மாறவில்லை. நான் இப்போது பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றை செய்து வருகிறேன். நீங்கள் ஒரு நூலை எழுதினால், அதை ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் பேர் வாசிப்பார்கள். ஆனால் நான் இப்போது பேசும் ஒலிக்கோப்பை  பல லட்சம் பேர் தரவிறக்கி கேட்டு வருகிறார்கள். இது எனக்கு புதுமையான உணர்வுகளை அளிக்கிறது.

இந்தியாவை இன்னொரு நாடு ஆளவில்லை. அதை ஒரு பெருநிறுவனம் கையகப்படுத்தியது என்று நூலில் கூறினீர்களே?

நிச்சயமாக. அந்த உண்மைதான் அதைப்பற்றிய நான்கு நூல்கள் எழுதக்காரணம். கிழக்கிந்திய கம்பெனி, ஒரு பெருநிறுவனம். அந்த நிலையில்தான் இந்தியாவைக் கையகப்படுத்தி ஆட்சி செய்தது. 1784ஆம் ஆண்டுதான் பிரிட்டிஷ் அரசு, இந்திய வரலாற்றுக்குள் வருகிறது.  நாட்டை ஒழுங்குபடுத்தும் சட்டவிதிகள் வகுக்கப்படுகின்றன.

அரசு, தனியார் நிறுவனங்கள் கூட்டுறவு உருவாகிறது. 1858ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு, பெருநிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்துகிறது. பிறகுதான் பிரிட்டிஷ் அரசு  ஆட்சி தொடங்குகிறது. இந்த காலகட்டம் 1858 தொடங்கி 1947 வரை, 90 ஆண்டுகள் இருக்கும்.

பெரும் அரசர்கள் ஆண்ட தேசமான இந்தியாவை, வெளிநாட்டைச் சேர்ந்த பெருநிறுவனம் கையகப்படுத்தியது ஆச்சரியம்தான் அல்லவா?

உண்மையில், இது சற்று வினோதமான கதைகளைக் கொண்டுள்ளது. நான் இதுபற்றிய செய்திகளை அறிய இருபது ஆண்டுகள் ஆய்வுகளைச் செய்துள்ளேன். நீங்கள் கடந்த இருபது ஆண்டுகளை எடுத்துக்கொள்ளுங்கள். கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய பெரு நிறுவனங்கள் பிரமாண்டமாக உருவாகி வளர்ந்துள்ளன.  இந்த நிறுவனங்கள் நவீனகால அரசுகளை விட பணபலமும், அதிகாரமும் கொண்டவை.

ஆனால் கிழக்கிந்திய கம்பெனியின் தொடக்கம் சிறியதுதான்…

அமேஸான் கூட காரேஜ் ஒன்றில் தொடங்கப்பட்டதுதான். கிழக்கிந்திய கம்பெனி, ஆளுநரின் அறையில் தொடங்கப்பட்டது. அதற்கு கதவுகள் உண்டே தவிர தனியாக அலுவலகங்கள் ஏதும் அமைக்கப்படவில்லை. ஆளுநரின் வீட்டில் கிழக்கிந்திய கம்பெனி செயல்பட்டு வந்தது. இந்த முறையில் அமேஸான், பெஸோஸின் காரேஜில் இயங்கி வந்தது அவ்வளவுதான்.  

ஃபேஸ்புக், அமேஸான் போன்ற நிறுவனங்கள் நமக்கு எதிராக ஆயுதங்களை எடுப்பதில்லை. மனிதர்கள் சிந்திக்கும் முறையைப் புரிந்துகொண்டு செயல்படுகிறார்கள். எளிமையாக சொன்னால் நம் மனதைப் படிக்கிறார்கள்.

வரலாற்றை திரும்ப ஆய்வு செய்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இந்த வகையில் மோசடி ஏதேனும் நடந்ததை மாற்ற முடியுமா அல்லது மார்க்சிய தவறுகளைத் திருத்தலாமா?

வரலாற்றை திரும்ப ஆய்வு செய்வது, புதிய ஆதாரத்தின் அடிப்படையில் பார்ப்பது தவறு கிடையாது. ஆனால் செயல்பாட்டை மதம், அரசியல் பயன், கருத்தியல் சார்ந்து மாற்றிக்கொள்ளக்கூடாது. தகவல்கள் அடிப்படையில்தான் அதை அணுக வேண்டும். நான் வரலாற்றை இப்படித்தான் அணுகிப் பார்க்கிறேன்.

உங்களின் அடுத்த நூல் எதைப்பற்றியது?

தி கோல்டன் ரோட் என்ற நூல், வரும் அக்டோபரில் வெளியாகும். இந்திய குடிமைச் சமூகம் பற்றிய பேசுபொருளைக் கொண்டது. பௌத்தம், இந்து ஆகிய மதங்கள் தெற்காசியாவில் எப்படி பரவின என்பதைப் பேசுகிறது. வானியல் எப்படி பாக்தாத் சென்று பிறகு ஐரோப்பாவிற்கு பரவியது என்பதைப் பற்றியும் கூறவிருக்கிறது. சென்னை வரும்போதெல்லாம் நூல் ஆராய்ச்சிக்காக காஞ்சிபுரம், மாமல்லபுரம் ஆகிய நகரங்களுக்கு சென்று வருகிறேன்.

 

 

மூலம்

ஜியா அஸ் சலாம்

இந்து ஆங்கிலம்


கருத்துகள்