அலட்டிக்கொள்ளாத ஆழமான பங்கு மோசடி - மோசடி மன்னன் - அதானி - பகுதி 5

 











ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அமைப்பு அறிக்கை





1999 – 2001ஆம் ஆண்டு கணக்குத் தணிக்கையாளரான தர்மேஷ் தோஷி, பங்கு முறைகேட்டில் ஈடுபடுவதாக இந்திய அரசு குற்றம்சாட்டியது. இந்த முறைகேட்டில் தோஷியுடன் கைகோத்து செயல்பட்டவர் கேட்டன் பரேக். இவர் மீதும் வழக்கு பதிவானது.

அமெரிக்காவில் நடைபெற்ற பெர்னி மேடாஃப் ஊழல் போலவே, இந்தியாவில் நடைபெற்ற பங்குச்சந்தை  ஊழலை கேட்டன் பரேக் செய்தார். இது, இந்திய பங்குச்சந்தை வரலாற்றிலேயே  மிகப்பெரும்  ஊழலாகும்.   

இந்த முறைகேட்டின் மூலம் விலை உயர்ந்த பெருநிறுவனப் பங்குகளில் அதானி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்த தகவலை செபி அமைப்பும், நாடாளுமன்ற குழுவின் விசாரணையும் உறுதி செய்துள்ளன. ஊழலில் ஈடுபட்டதற்காக அதானி குழுமத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களும் குற்றம்சாட்டப்பட்டனர்.

2002ஆம் ஆண்டு, தர்மேஷ் தோஷி தன்னை சூழும் ஆபத்தைப் புரிந்துகொண்டு காவல்துறை கைது செய்யும் முன்னரே வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

2006ஆம் ஆண்டு, எலாரா கேபிடல் நிறுவனத்தைச் சேர்ந்த நிறுவன இயக்குநர் ராஜ் பட், தர்மேஷ் தோஷியுடன் வணிக ஒப்பந்தங்களைச்  செய்துகொண்டார்.  இந்த காலகட்டத்தில் தோஷி மோசடியான செயல்களை நிறுத்தாமல் செய்துகொண்டுதான் இருந்தார். இந்தியப் பங்குச்சந்தையில் பல்வேறு வணிகச் செயல்பாடுகளை தோஷி செய்கிறார் என புலனாய்வுத்துறைக்கு மின்னஞ்சல் தகவல்கள் கிடைத்தன. அதை வைத்தே தோஷியின் செயல்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்தன.

இந்த மின்னஞ்சல் தகவல்களில் ராஜ்பட், தோஷியின் நிறுவனமான ஜெர்மின் கேபிடல் மற்றும் முறைகேட்டில் சிக்கியவரான கேட்டன் பரேக் ஆகியோரும் இருந்தனர்.

ஹிண்டன்பர்க் அமைப்பு, ஜெர்மின் கேபிடல் நிறுவனத்தின் இயக்குநர்களாக இருந்தவர்களில் ஒருவரான லண்டனைச் சேர்ந்த மிகிர் கபாடியாவை போனில் தொடர்புகொண்டு  பேசியது. பிரிட்டனின் பெருநிறுவன ஆவணங்களின்படி, 2000-2008ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில்  மிகிர் கபாடியா, ஜெர்மின் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் செயல்பட்டிருக்கிறார். ஹிண்டன்பர்க் அமைப்பிற்கு தகவல் சொன்னவர்கள், மிகிர் காபாடியா கேட்டன் பரேக்கிற்கு நெருக்கமான குடும்ப நண்பர் என கூறினர். ஆனால் இதுபற்றி பேசியபோது, மிகிர் தனது உறவு பற்றி உறுதியான பதில் ஏதும் கூறவில்லை.

ஹிண்டன்பர்க் அமைப்பு, மிகிரிடம், அவருக்கு தோஷி அல்லது ஜெர்மின் கேபிடல் நிறுவனம், எலாரா கேபிடல் நிறுவனம் அல்லது  ராஜ் பட் ஆகியோரிடம் வணிகத் தொடர்பு இருக்கிறதா? என்று கேட்டது. ஆனால் அதற்கு மிகிர் மழுப்பலான பதிலை சொன்னார்.

‘’என்னால் அதை நினைவுபடுத்திக்கொள்ள முடியவில்லை. ஆனால் அப்படி இருந்திருக்கலாம்’’ என்றார்

மோசடியான நபரான தோஷியுடன் நீங்கள் வணிகம் செய்கிறீர்களே?, தோஷி எதற்கு லண்டனைச் சேர்ந்த நிறுவனத்துடன் வணிகம் செய்கிறார்? என்று ஹிண்டன்பர்க் அமைப்பு கேட்டபோது அதற்கு,  

‘’நான் இதைப்பற்றி எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை. உங்களுக்கு இந்த தகவல்கள் எங்கிருந்து கிடைத்தன என்று தெரியவில்லை. ஆனால் நான் இதுபற்றி எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை. ‘’ என மிகிர் கூறினார்.

மின்னஞ்சல் தகவல்களை வெளியிட்ட அச்சால் காய், என்ற முதலீட்டு நிதி மேலாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியது ஹிண்டன்பர்க் அமைப்பு. அவர், மிகிர் கபாடியுடன் வணிக ஒப்பந்தம் செய்ததை உறுதி செய்தார். வெளியிட்ட மின்னஞ்சல் தகவலையும் உண்மை என்று கூறினார்.

‘’நீங்கள் குறிப்பிடும்போதுதான் மிகிர் கபாடியா பெயர் நினைவுக்கு வருகிறது. மீண்டும் அவரை நான் நினைவுபடுத்திப் பார்க்கிறேன். அவரோடு வணிக ஒப்பந்தங்களை செய்து பதினைந்து ஆண்டுகள் ஆகியிருக்காது? எத்தனை ஆண்டுகள் என்று தெரியவில்லை. ஆம். நான் அவருடன் பேசும்போது லண்டனில் இருந்தார். சில முறை வாடிக்கையாளர்களோடு சந்தித்து வணிகம் சம்பந்தமாக பேசியிருக்கிறோம். ஆனால், அது வெகு காலத்திற்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் ’’

‘’மிகிர் கபாடியா, எலாரா ஆகியோர் இணைந்து சில முதலீடுகளை செய்தனர்.செமி கண்டக்டர் வணிகம் (மோசிப்) தொடர்பான ஒப்பந்தம் எனக்கு நீங்கள் சொன்னபிறகு நினைவுக்கு வருகிறது. வெகு நாட்களுக்கு முன்னர்  நடந்த விஷயம் அது. ‘’  

 

மின்னஞ்சலை ஹிண்டன்பர்க் நிறுவனம், அச்சால் காய்க்கு அனுப்பி வைத்தது. ‘’மின்னஞ்சல் வெளிப்படுத்தப்பட்டபோது ஒருமுறை விற்பனை (மோசிப்) தொடர்பான அழைப்பு வந்தது. பிறகு, அதற்குமேல் அவர்களிடம் அழைப்பும் வரவில்லை. நாங்களும் எந்த வணிகமும் செய்யவில்லை. ’’ என்றார்.

ஹிண்டன்பர்க் அமைப்பு, எலாரா இயக்குநர் ராஜ் பட்டிடை போனில் அழைத்தும், மின்னஞ்சல் வழியாகவும் தொடர்பு கொண்டு அதானி குழும பங்குகள் பற்றி கேட்டது. ஆனால் அதற்கு அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை.  

நியூ லியாயினா இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம், சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த முதலீட்டு நிதிநிறுவனம். இந்த நிறுவனம் தனது வலைத்தளத்தில் தனது முதலீடு, விரிவான தளத்தில் பெரிதாக அமைந்தது என குறிப்பிடுகிறது.  2021ஆம் ஆண்டு நியூ லியாயினா ஹோல்டிங்ஸ் நிறுவனம், அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனத்தில் 1.01 சதவீத பங்குகளை, 420 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியது. இப்படி பங்குகள் வாங்கும் அணுகுமுறையைத்தான் விரிவான தளம், பெரிய முறையில் முதலீடு என்று குறிப்பிடுகிறது போல…

நாடாளுமன்ற ஆவணங்களின் படி அதானி குழுமத்தில் நான்கு நிறுவனங்களில் நியூ லியாயினா நிறுவனம், முதலீடு செய்துள்ளது. இப்போதும் பங்குதாரராக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

வெவ்வேறு பெயர்களைக் கொண்ட வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மூலம் அதானி குழுமம், அதன் உரிமையாளர்களைப் பற்றிய கேள்விகளை எளிதாக தவிர்த்துவிடுகிறது. நிறுவனத்தில் முதலீடு  செய்யும் பொதுமக்களுக்கும் இதில் வேறுபாடு தெரியாது.

ஏமிகார்ப் என்ற குழுமம், நியூ லியாயினா நிறுவனத்தை நடத்தி வந்தது. இந்த நிறுவனமே,  வெளிநாட்டிலுள்ள அதானி குழுமத்தின் முதலீட்டு நிறுவனங்களுக்கு தேவையான இயக்குநர்கள்,  பிற சேவைகளை வழங்கி வந்தது.

நியூ லியாயினா நிறுவனத்தின் வலைத்தளத்தில் நிதி மேலாளர்கள் பற்றிய விவரங்கள் இடம்பெறவில்லை. இரண்டு நிர்வாக குழு உறுப்பினர்கள், கணக்கு தணிக்கை நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றிருந்தது. இரண்டு உறுப்பினர்களும் ஏமிகார்ப்பைச் சேர்ந்தவர்கள். லிங்க்டுஇன் தகவல்களை சோதித்தபோதும், முதலீட்டு நிறுவன பணியாளர்கள் பற்றிய தகவல்கள் இல்லை. ஏமிகார்ப்பின் அஞ்சல்பெட்டி எண் மட்டுமே இருந்தது. முகவரியில் இருந்த தொலைபேசி போன் எண்ணும் கூட ஏமிகார்ப்பினுடையதுதான்.

2021ஆம் ஆண்டு இந்திய நிதி அமைச்சகம், நியூ லியாயினா அமைப்பை நடத்தும் மூன்று உரிமையாளர்கள் பெயரைக் கூறவேண்டுமென கூறியது. பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவன பங்குதாரர்கள் பற்றிய கேள்விகள் எழவே, விவகாரத்தில் இந்திய அரசு தலையிட்டது. மூன்று உரிமையாளர்களும் ஏமிகார்ப் நிறுவனத்தில் பணியாளர்களாக இருந்தனர். இந்த வகையில் நியூ லியாயினா, ஏமிகார்ப்புடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது தெரிய வந்தது.

ஹிண்டன்பர்க் நிறுவனம், நியூ லியாயினா நிறுவனத்தின் வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொண்டது. அழைப்பை ஏற்ற நிறுவனத்தின் வரவேற்பறை பெண்மணி,  தான் பேசுவது சைப்ரஸ் நாட்டிலுள்ள ஏமிகார்ப் தலைமையகம் என பதில் கூறினார். லிங்க்டு இன் வலைத்தளத்தில் தேடியதில் ஏமிகார்ப்பின் தலைவர் என குறிப்பிடப்பட்டிருந்த மரியோஸ் டோஃபாரோஸ் என்பவரே நியூ லினியினாவின் தலைவர் என்றும் தகவல் கிடைத்தது.

இதுபற்றி மரியோஸிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘’ஏமிகார்ப், நியூலியாயினாவைக் கட்டுப்படுத்தவில்லை’’ என்று கூறினார். இணையத்தில் இதுபற்றிய தகவல்களை தேடிப்பார்க்க வலியுறுத்தினார்.

நியூ லியாயினா நிறுவனம், அதானி குழுமத்திற்கு பங்குகளை வாங்கி உதவி செய்கிறதா என ஹிண்டன்பர்க் கேட்டது. அதற்கு அவர், ‘’நீங்கள் இப்போதுதான் சந்தேகம் போல கேள்வியைக் கேட்கிறீர்கள். ஆனால் நான் இதுபற்றி எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. நீங்கள் சொல்லும் எந்த தகவலையும் நான் உறுதிப்படுத்தவும் விரும்பவில்லை’’ என்றார்.

பிறகு ஹிண்டன்பர்க் அமைப்பு, கணக்காளரும், நியூ லியாயினாவின் இரண்டாவது தலைவருமான மைக்கலிஸ் அஷியோட்டிஸிற்கு போனில் அழைத்து நிறுவனப் பங்கு பற்றி கேள்விகளைக் கேட்டது. அதற்கு அவர், நான் நிறுவனத்தின் செயல் தலைவராக இல்லை என்று கூறிவிட்டார். மேலும் நியூ லியாயினா நிறுவனம் பற்றிய  தகவல்களுக்கு ஏமிகார்ப் நிறுவனத்தை அணுகுமாறு கூறினார்.

இறுதியாக ஹிண்டன்பர்க் அமைப்பு, வரிச்சலுகை நிறைந்த குராகோவில் உள்ள ஆண்டெட்டா குழுமத்தை அணுகியது. இங்கு அழைப்பை ஏற்ற வரவேற்பறை பெண்மணி, ‘’ஏமிகார்ப் அலுவலகம், மாலை வணக்கம். நான்  உங்களுக்கு எப்படி உதவ வேண்டும்?’’ என்று கேட்டார். ஹிண்டன்பர்க் அமைப்பினர், அவரிடம் ஆண்டெட்டா குழுமம், ஏமிகார்ப் நிறுவனத்தைச் சேர்ந்ததா என்று கேட்டதும் மூன்று முறை ஆமாம் என்று உறுதியாக ஆமோதித்து பதில் சொன்னார்.

 அதானி குழுமம், ஏமிகார்ப் நிறுவனத்துடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளது. ஏமிகார்ப் நிறுவனம் தனது ஏழு முதலீட்டு நிறுவனங்களை வைத்து அதானி குழுமத்திற்கு உதவி வருகிறது. இந்த நிறுவனங்கள் இல்லாமல் 17 நிறுவனங்களை உருவாக்கி நடத்தி வந்தது. இதில் பதினேழு போலி நிறுவனங்களில் வினோத் அதானிக்கும் தொடர்பு உண்டு. மூன்று நிறுவனங்கள் மொரிஷியஸில் இயங்கி வந்தன. இதிலிருந்து முதலீடாக சென்ற நிதி மூலம் அதானி குழுமத்தின் பங்குகள் வாங்கப்பட்டன.

ஏமிகார்ப் நிறுவனம் போலியான முதலீட்டு நிறுவனங்களை மட்டும் நடத்தி வரவில்லை. இந்த நிறுவனத்திற்கு உலகமெங்கும் வாடிக்கையாளர்கள், நிறுவனங்கள் உண்டு. தங்களுக்கென வணிக பரிவர்த்தனைகளுக்கென தனி வங்கியை நடத்தி வருகிறது ஏமிகார்ப் நிறுவனம். பெரு நிறுவனங்களுக்கும், உலக நாடுகளிலுள்ள பங்குச் சந்தைகளுக்கும் இடையில் சுவர் போல செயல்பட்டு வருகிறது.

அமெரிக்க நாட்டு ஆவணங்களின் படி, 4.5 பில்லியன் 1எம்டிபி எனும் மோசடியை செய்ததில் ஏமிகார்ப் நிறுவனத்திற்கு முக்கிய பங்குண்டு. இந்த மோசடி தொடர்பான ஆவணங்களை அமெரிக்காவும், மலேசியா நாட்டின் ஊழல் தடுப்பு கமிஷன் தொகுத்து வைத்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள சிஸ்டெனிக் என்ற நிறுவனம் நியூ லியானியா நிறுவனத்தில் பங்குகளை வாங்கியுள்ள நிறுவனங்களில் ஒன்று.

பில்லியன் டாலர் வேல் என்ற ஆங்கில நூலில் மேற்சொன்ன பெரும் ஊழல் பற்றிய நீதிமன்ற ஆவணங்கள், கூடுதல் விசாரணை என விவரித்து கூறப்பட்டுள்ளது. மலேசிய நாட்டு மக்களை முதலீடு செய்ய வைத்து ஏமாற்றி மோசடி செய்த ஏமிகார்ப்பின் தந்திரங்கள் பற்றி நூலாசிரியர்கள் துல்லியமாக விவரித்துள்ளனர்.(பக்கம். 141-142)

 மியூச்சுவல் ஃபண்ட் போல மக்களுக்கு காட்டி, பணத்தை முதலீடு செய்யவைத்து நூதனமாக வழிகளில் ஏமிகார்ப் தந்திரமாக ஏமாற்றியது பற்றி விளக்கமாக கூறப்பட்டுள்ள நூல் இது.  


நன்றி 

இரா. முருகானந்தம்

கருத்துகள்