செய்தியில் தகவல்களை சரிபார்ப்பது முக்கியம்

 










பொதுவாக  நிறைய பிரபலங்கள் / அரசியல்வாதிகள் பேட்டி எடுக்கும் வரை அமைதியாக இருப்பார்கள்.  பிறகு, பத்திரிகையாளரை அழைத்து செய்தியை எழுதிய உடனே அல்லது அதை வெளியிடும் முன்னர் இறுதி வடிவத்தை ஒருமுறை அவர்களுக்கு அனுப்பித் தரும்படி கேட்பார்கள். பேசிய வார்த்தை, அர்த்தம் மாறியிருக்கிறதா என்று சரி பார்க்கத்தான் இந்த சோதனை. இந்த முறை இப்போது ஊடகங்களில் பழக்கமாகிவிட்டது.

பத்திரிக்கைகள் செய்தி ஆதார மனிதர்களிடம் அச்சேறாத செய்தியை அனுப்பி, அவர்களின் திருத்தங்களைக் கேட்டு பிறகு அதைச் செய்து அச்சுக்கு அனுப்புகிறார்கள். அனைத்து கட்டுரைகளுக்கும், இதுபோல திருத்தங்கள் செய்து கட்டுரைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்புவது சரியானதல்ல. முடிந்தவரை பத்திரிகையாளர்கள் இம்முறையைத் தவிர்க்கவேண்டும்.

தவறுகள் ஏற்படாமல் இருக்க, பேசும்போது முறையாக அதை ரெக்கார்டரில் பதிவு செய்துகொண்டு அதை ஒருமுறைக்கு இருமுறை கேட்டுவிட்டு கட்டுரையை எழுதலாம்.இப்படி எழுதப் பழகினால் கட்டுரைகளில் திருத்தங்கள் குறையும். நாளடைவில்  தகவல் பிழைகள் இருக்காது. 

செய்திகளை, பேட்டி எடுப்பவர்களிடம் காட்டிவிட்டு பிரசுரிப்பது என்றால் அதை செம்மைப்படுத்தி வெளியிடுவதில் ஆசிரியர் குழுவின் உரிமை பறிபோகிறது என்றே அர்த்தம். முடிந்தளவு இந்த செயலுக்கு பத்திரிகையாளர் உடன்படக்கூடாது. தகவல்கள் துல்லியமாக இல்லையென்றால் பத்திரிகையாளர் அதை மாற்றலாம். சமரசமாகி செய்திக்கட்டுரையை , பேட்டியை வெளியிடுவதை விட அதை வெளியிடாமல் இருப்பதே நல்லது. நீங்கள் செய்யும் நடவடிக்கைகளை நாளிதழ் ஆசிரியருக்கு முன்பே தெரிவித்துவிடுங்கள்.

செய்திகளைக் கூறுபவர், செய்தியை பதிவு செய்யும்போது ஒரு தகவலும்,  நேரில் ஒரு தகவல் என மாற்றிப் பேசினால்  அதற்கு  டபுள் டிப்பிங்  என்று பெயர். இப்படி ஒரு செய்தியை நீங்கள் பத்திரிகையாளராக இருந்து பிரசுரித்தால்  உங்களது பெயரும் நாளிதழின் நம்பிக்கையும் எளிதில் கெட்டுவிடும். இந்த செய்தி, நாளிதழைப் படிக்கும் வாசகர்களை ஏமாற்றுவதாகும். பிற செய்தி நிறுவனங்களிலிருந்து செய்தியைப் பெற்று தொகுத்தால் அந்த நிறுவனங்களுக்கு நன்றி சொல்லி செய்தியை பிரசுரிப்பதே அடிப்படை இதழியல் அறமாகும். இதன்மூலம் வாசிப்பவர்களுக்கு அந்த செய்தி உங்களுடையதல்ல என்பதோடு, உரிய நிறுவனத்திற்கு செய்தியாளருக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

 

 thanks cartoon stock

 


கருத்துகள்