மோசடி மன்னன் அதானி - ராஜேஷ் அதானி, சமீர் வோரா, வினோத் அதானி செய்த குற்றங்கள்

 



கௌதம் அதானி படம் - இந்தியா டுடே










அதானி குழும நிறுவனங்கள், பொதுத்துறை  வங்கிகளில் பெருமளவு கடனைப் பெற்றுள்ளன. மொத்தமாக கடனைத் திருப்பிக் கொடுக்கும் போது ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க முதலீட்டாளர்கள் தங்கள் ஈக்விட்டி பங்குகளை கொடுக்கலாம். ஆனால் இந்த பங்குகளை வைத்து கடனை எளிதாக தீர்க்க முடியாது.

பங்குகளின் விலை குறைந்துபோனால், கடன் வழங்கியவர் உடனே கடனைத் திருப்பிக்கட்ட கோருவார். இச்சூழ்நிலையை சமாளிக்க நிறுவனம் ஈக்விட்டி பங்குகளை விற்று பணத்தை திரட்டும் நிலை உருவாகும். பங்குகளின் விலை குறைந்த நிலையில் அவற்றை தொடர்ந்து விற்கையில் அதன் விலை மேலும் குறையும். அதானி குழுமத்தில் வெளியே தெரிந்த கடன் அளவைத் தாண்டியும், அதிக கடனைப் பெற்றிருக்க வாய்ப்புள்ளது.




ஒரு நிறுவனத்தின் ஈக்விட்டி பங்குகளை வாங்குபவர், அதன்  பகுதி உரிமையாளர் போல என புரிந்துகொள்ளலாம். இந்த பங்குதாரர்கள், நிர்வாக குழுவினர் எடுக்கும் தொழில்ரீதியான முடிவுகளுக்கு ஆதரவாக அல்லது  எதிராக வாக்களிக்க முடியும். நிறுவனம் பெறும் வருமானத்தில் ஈக்விட்டி பங்குகளைப் பெறுபவர்களுக்கு பங்குண்டு.

அதானி குழுமம், கௌதம் அதானியின் குடும்ப உறுப்பினர்களால் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்படுகிறது. இவர்களால்தான் முக்கியமான நிதி, நிர்வாக முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

அதானி குழுமத் தலைவரும் இயக்குநருமான கௌதம் அதானி, பள்ளி படிப்பை இடையில் கைவிட்டவர். வைரம் மற்றும் பிளாஸ்டிக்  வணிகம் செய்தார். பின்னாளில் அதானி குழுமத்தை உருவாக்கினார். அதுமுதல்  பட்டியலிடப்பட்ட ஏழு நிறுவனங்களில் ஆறு நிறுவனங்களுக்கு கௌதம் அதானியே, தனித்தலைவராக இருந்து வருகிறார்.

குழும நிறுவனங்களில் கௌதம் அதானி அதிக அளவு அதிகாரத்தை கொண்டிருக்கிறார். அவர் இல்லாத நிலையில் நிறுவனத்தின் நிர்வாகத்தில் நிறைய பாதிப்புகள் ஏற்படும் என கிரடிட் சைட்ஸ் நிறுவனம் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத அறிக்கையில் கூறியுள்ளது.

அதானி குழுமம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே அதன் நிர்வாகத்தில் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் அதிகம். குழுமத்தில் முக்கிய பதவிகளில் உள்ள இருபத்தி இரண்டு தலைவர்களில் எட்டுப்பேர் கௌதம் அதானியின் குடும்ப உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

ஹிண்டர்பர்க் அமைப்பு, இதுபற்றிய தகவல்களை அறிய அதானி குழுமத்தில் வேலை செய்த முன்னாள் ஊழியர்களையும்,  கணக்குத் தணிக்கையாளர் குழுவையும் அணுகியது. இவர்களிடம் தேவையான உண்மைத் தகவல்களைப் பெறுவது கடினமாக இருந்தது.

இதில் சிலர், அவர்கள் வேலை செய்த முதலாளி மேல் தீவிர விசுவாசம் கொண்டிருந்தனர். மேலும் பலருக்கு உண்மையைக் கூறினால் தங்கள் மேல் அதானி குழுமம் குற்றம் சாட்டி வழக்கு தொடரும் என பயம் இருந்தது. அவர்கள் பயத்திற்கும் காரணம் இருக்கிறது. ஏனெனில் அதானி நிறுவனம், தங்களது நிறுவனத்தை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களுக்கு, பங்குச்சந்தை ஆய்வாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து வந்தது. சிலர் தங்களது அடையாளம் வெளிப்படக்கூடாது என்று சொல்லி பல்வேறு தகவல்களைக் கொடுத்தனர்.

‘’அது ஒரு குடும்ப வணிக நிறுவனம். சிறிய நிறுவனமாக இருந்தபோதிலிருந்தே அதனை கௌதம் அதானி, அவரது சகோதரர்கள், அவர்களின் பிள்ளைகள்  கட்டுப்படுத்தினர். முதல் தலைமுறை வணிக நிறுவனமாக வளர்ந்துவிட்டது. சிறு வணிக நிறுவனமாக இருந்து முந்த்ரா துறைமுகத்தை நடத்தும் அளவுக்கு வளர்ச்சி பெற்றபோதும் நிறுவனத்தின் அடிப்படைக் கலாசாரம் மாறவே இல்லை’ என்று முன்னாள் பணியாளர் கூறினார். பிற பணியாளர்களும் இதை ஆமோதித்தனர். ‘’குழுமத்தின் முக்கியமான முடிவுகளை கௌதம் அதானி தனியாகவே எடுப்பார்’’ என முன்னாள் பணியாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

அதானி குழுமத்தின் பெரும்பான்மையான பங்குகளை கௌதம் அதானி தானே வைத்துக்கொண்டிருந்தார். ஏனெனில் அதானி குழுமத்தை அவர்தான் கட்டியமைத்தார். அதன் வணிகம் என்பது அவருக்கும், அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்குமானது என நினைத்தார்.  

அதானி குழுமம் நிதி மோசடி, மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பது ஆகியவற்றைச் செய்த வகையில் 17 பில்லியன் டாலர்களை சம்பாதித்தது. இதுபற்றிய விசாரணை, தொடர்ச்சியாக நடைபெறாத வகையில் இந்திய அரசின் பல்வேறு அமைப்புகளே தடையையும், தாமதத்தையும் ஏற்படுத்தின.

அதானி குழுமத்தில் நடைபெற்ற பல்வேறு நிதிமோசடிகள், பணத்தைக் கொள்ளையடிப்பது தொடர்பான அனைத்து நடவடிக்கையிலும் கௌதம் அதானியின்  குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

 வைரம், இரும்பு, நிலக்கரி ஆகியவற்றை விற்றுத்தான் அதானி குழுமம் பெரும் நிறுவனமான வளர்ந்தது. ஆனால் விற்பனையின் ஏற்றுமதி, இறக்குமதி பரிவர்த்தனைகளில் மோசடி செய்ததாக நிதி அமைச்சகம் குற்றம்சாட்டியது. இதன் அடிப்படையில் நிதி அமைச்சகத்தின் கீழுள்ள கடத்தல் பொருட்கள் தடுப்பு பிரிவு மற்றும் தேசிய, மாநில அரசு விசாரணை அமைப்புகள் அதானி குழுமத்தை விசாரணை செய்தன.

அதானி குழுமம் செய்த நிதி மோசடி, முறைகேடு வழக்குகளில் முறையான ஆவணங்கள், வங்கி பதிவுகள், சாட்சிகள் என எவையும் எளிதாக விசாரணைக்கு கிடைக்கவில்லை. விசாரணை நடைபெறுவதை இந்திய அரசின் பல்வேறு அமைப்புகளே தடைக்கற்களாக மாறி தடுத்தன என்பதே உண்மை.

2004-2006 காலகட்டத்தில்,  கௌதம் அதானியின் சகோதரர் வைர வணிகம் தொடர்பான திட்டத்தில் மோசடி செய்தார். ஆவணங்களை போலியாக உருவாக்கியது, சட்டவிரோத இறக்குமதி ஆகியவற்றுக்காக கைது செய்யப்பட்டார்.  இந்த குற்றங்களுக்குப் பிறகும் அதானியின் சகோதரர் அதானி குழுமத்தின் நிர்வாக தலைவராக முக்கியப் பொறுப்பில் அமர வைக்கப்பட்டுள்ளார்.

 தங்கம், வைரம் ஆகியவற்றை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கான அனைத்து கொள்கை முடிவுகளையும் சமீர் வோரா, அதானி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் திரு. ராஜேஷ் அதானியிடம் கேட்டு எடுத்திருக்கிறார். (பக்கம் 6) என வருவாய்த்துறை புலனாய்வு ஆணையக விசாரணை அதிகாரிகள், தம் அறிக்கையில் கூறியுள்ளனர். 





 ராஜேஷ் அதானி, 1999, 2010 ஆகிய இரு ஆண்டுகளில் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 1999ஆம் ஆண்டு நிலக்கரி விற்பனை தொடர்பாக போலி ஆவணங்களைத் தயாரித்தது, நிலக்கரியை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தது ஆகிய குற்றச்சாட்டில் கைதானார். 2010ஆம் ஆண்டு, வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் இறக்குமதி செய்த பொருட்களின் மதிப்பை குறைவாக மதிப்பிட்டு வரி ஏய்ப்பு செய்ததாக கைதுசெய்யப்பட்டார் ராஜேஷ் அதானி.

பொதுவாக ஒரு நிறுவனத்தின் உயரதிகாரி முறைகேடு, வரி ஏய்ப்பு காரணமாக அரசால் வழக்கு தொடுக்கப்பட்டு கைதானால், உடனே அந்த நிறுவனம் அவரை பணியிலிருந்து நீக்கிவிடும். ஆனால் அதானி குழுமத்தில் ராஜேஷ் அதானிக்கு உயர்பதவி வழங்கப்பட்டது. அதானி குழுமத்தின் வணிக தொடர்புகளை மேம்படுத்தியவர் என அவருக்கு பாராட்டுக்குறிப்பு எழுதப்பட்டுள்ளது.

கௌதம் அதானியின் மைத்துனரான சமீர் வோராவும் கூட,  வருவாய்த்துறை புலனாய்வு ஆணையகத்தால்  குற்றம்சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டவர்தான். வைரம், தங்கம் ஆகியவற்றுக்கான விலையைத் தீர்மானித்து அவற்றை ஏற்றுமதி, இறக்குமதி பரிவர்த்தனை செய்து வந்தார். நகை வணிகம் செய்து வரும் பல்வேறு நிறுவனங்களும் உதவி வந்தார். சமீர் வோரா தான்செய்யும் சட்டவிரோத வணிகத்திற்கு நகை வணிக நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொண்டார்.






சமீர் வோரா, அரசு வரிவாய்த்துறை அமைப்பு செய்த விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில்களை அளித்தார். அவரின் மோசடிகளுக்கு பரிசாக அதானி குழுமத்தில் பாராட்டப்பட்டு, பதவி உயர்வைப் பெற்றார்.  2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவில் இயங்கிய அதானி நிறுவனத்தில் செயல் தலைவராக சமீர் வோரா நியமிக்கப்பட்டார் என லிங்க்டுஇன் வலைத்தள தகவல் கூறுகிறது. கார்மிசாயில் சுரங்கம், ரயில் திட்டம் ஆகியவற்றில் முக்கியமாக பங்காற்றினார் என அவரது வேலை பற்றி கூறப்பட்டுள்ளளது.  

அடுத்து அரசின் பல்வேறு ஊழல் விசாரணை குற்றச்சாட்டில் மாட்டியவர், கௌதம் அதானியின் சகோதரரான வினோத் அதானி (வினோத் சாந்திலால் ஷா). இவர் குழுமத்தின் செயல்தலைவராக பணியாற்றுகிறார். வைரம் மற்றும் மின்சாரத்துறை பொருட்களை வாங்கிய ஊழல்களில் குற்றம்சாட்டப்பட்ட வரலாறு கொண்டவர்.    

2011ஆம் ஆண்டுவரையிலான அதானி குழுமத்தின் செயல் தலைவராக அதிகாரப்பூர்வ ஆவணங்களில் வினோத்தின் பெயர் உள்ளது. அதானி குழுமத்தில் ஆறு நிறுவனங்களுக்கு செயல் தலைவராகவும், அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குதாரராகவும், அதானி பவர் நிறுவனத்தின் முதலீட்டாளராகவும் உள்ளார். தற்போது அதானி குழுமத்தில் எந்த பதவிகளிலும் இருப்பதாக குறிப்பிடப்படவில்லை.

தொடக்க காலத்தில் இருந்தே அதானி குழுமம், வினோத் அதானியின் பதவி, தலையீடு பற்றி மறுத்தே வந்துள்ளது. 2009 -2014 காலகட்டத்தில் மின்சார பொருட்கள் வாங்கிய விலைப்பட்டியல் பற்றிய வருவாய்த்துறை புலனாய்வு ஆணையகத்தின் விசாரணையில், அதானி குழுமம், அறிக்கையொன்றை சமர்ப்பித்தது. அதில், வினோத்திற்கும் குழுமத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. நிறுவனத்தின் பங்குதாரர் மட்டுமே என்று கூறப்பட்டிருந்தது. மேற்படி, வருவாய்த்துறை புலனாய்வு ஆணையகம் - டிஆர்ஐ மதிப்பிட்ட விலைப்பட்டியல் மோசடியின் மதிப்பு 39.74 பில்லியன் டாலர்களாகும்.

 ராஜேஷ், வினோத் என இருவருமே செய்த வைர வணிக மோசடி மதிப்பு 6.8 பில்லியன் டாலர்களாகும். இந்திய ஊடகங்கள் வினோத்தை அதானி குழுமத்தில் முக்கியமான அதிகாரம் கொண்ட அதிகம் வெளித்தெரியாத நபராக சித்திரித்தன.

‘’வினோத் பல ஆண்டுகளாகவே மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்கிறார். அவர் துபாயில்  செயல்படும் அதானி குழுமத்தின் செயல்பாடுகளை நிர்வகிக்கிறார்’’ என அதானி குழுமத்தின் முன்னாள் இயக்குநர் தகவல் தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கூட கௌதம் அதானி, ‘’வினோத் அதானி அதானி குழுமத்தில் எந்தவொரு பதவியும் பொறுப்பும் வகிக்கவில்லை’’ என்று கூறினார். ஆனால் வினோத் அதானி, அதானி குழுமத்தின் வெளிநாட்டு நிதி முதலீடு, தொடர்புகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் என்பதே நடைமுறை உண்மை.  

ஹிண்டன்பர்க் அமைப்பு செய்த ஆராய்ச்சியில் மொரிஷியஸில் செயல்படும் பெருநிறுவனங்களைப் பற்றிய தகவல்களை சேகரித்தனர். அந்த ஆவணங்களில் வினோத் அதானி, ஏராளமான நிறுவனங்களைத் தொடங்கியதோடு பல்வேறு நிறுவனங்களோடும் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. ஆனால் அவர் தொடங்கிய முதலீட்டு  நிறுவனங்களின் செயல்பாடு எதிலும் நேர்மை என்பதே அணுவளவும் கிடையாது.

ஐக்கிய அரபு அமீரகம், சைப்ரஸ், சிங்கப்பூர், கரீபியத் தீவுகள் என பல்வேறு நாடுகளில் உள்ள வினோத் அதானி தொடர்புடைய நிறுவனங்கள் பற்றி தேடியதில், அனைத்துமே போலி நிறுவனங்கள் என தெரிய வந்தது. அதானி குழுமத்திற்குள் நிதியைக் கொண்டு வர அல்லது அந்த நிறுவனங்களிலிருந்து நிதியை வெளியே அனுப்ப வெளிநாட்டில் தொடங்கப்பட்ட போலி நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டன.

 


கருத்துகள்