24/7 அந்தரங்க வாழ்க்கை விற்பனைக்கு! - டிக்டாக் லைவில் இணையும் மக்கள்!

 










அடுத்தவரின் வாழ்க்கையை எட்டிப்பார்ப்பது ஒருவித கிளுகிளுப்பான உணர்வைத் தருகிறது. அதனால்தான் மக்கள் பிக் பிரதர், பிக் பாஸ், ஆகிய நிகழ்ச்சிகளைப்பார்த்துவிட்டு அதில் உள்ள பங்கேற்பாளர்களின் குணங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் இதுபற்றிய காரசார விவாதங்கள் நடைபெறுகின்றன. உண்மையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சம்பளம் உண்டு. அங்கு உருவாகும் பிரச்னைகள் அனைத்துக்குமே எழுத்துப்பூர்வ திரைக்கதை உண்டு. இதெல்லாம் அறிந்தாலுமே மக்கள் உணர்வுபூர்வமான சண்டை, கைகலப்புகளுக்கும் தங்களை மீறி ஒன்றிவிடுகிறார்கள். 


இது சமூக வலைத்தளங்களிலும் தீவிரமாக நடைபெறுகிறது. இந்த வகையில் ஜெட்டிஜேம்ஸ், ஆட்டும்ரேயான் என்ற இளம் தம்பதிகள் தங்களின் மூன்று வார வாழ்க்கையை அப்படியே டிக்டாக் லைவ்வில் ஒளிபரப்பினார்கள். வீட்டில் மொத்தம் ஒன்பது கேமராக்கள். படுக்கை அறை, கழிவறையில் கூட கேமரா உண்டு. ஐந்தூறு மணி நேரங்கள் இணையத்தில் தங்களுடைய அந்தரங்க வாழ்க்கையை ஒளிபரப்பி காசு சம்பாதித்தனர்.


 லைவ் என்பதால் இதில் நேரடியாக கமெண்டுகளை அடிக்கலாம். பெரும்பாலானவை எதிர்மறையாக இருக்கும். சில கட்டளையிடுவது போல இருக்கும். டிக்டாக் நிறுவனம், லைவில் தனது வாழ்க்கையை ஒளிபரப்பி வாழ்பவர்களுக்கு காசு கொடுக்கும் கிஃப்ட் திட்டத்தை வைத்திருக்கிறது. இதைத்தான் மேற்சொன்ன ஜேம்ஸ் தம்பதி, குறிவைத்து இயங்கியிருக்கிறது. இவர்களுக்கு பெரிய திறமை ஏதும் கிடையாது. எனவே, இயல்பான வாழ்க்கையை அப்படியே நேரலையாக்கி பார்வையாளர்களை அதற்கு அடிமையாக்கி பார்க்க வைக்கிறார்கள். பார்வையாளர்கள் டிக்டாக் நிறுவனம், விற்கும் நாணயங்களை குறிப்பிட்ட டாலர்களுக்கு வாங்கி வீடியோக்களை ஒளிபரப்புபவர்களுக்கு பரிசாக கொடுக்கலாம். இந்த வகையில்தான் இதில் பணம் சம்பாதிக்க முடியும். 


இதில் பார்க்கும் பார்வையாளர்கள்தான் காசு தரவேண்டும் என்பதால், அவர்களின் கமெண்டுகள் முக்கியமானவை ஆகின்றன. அப்படி செய், இப்படி செய் என்று கூறவும் கூட அதிக வாய்ப்பு உள்ளது. இப்படி லைவாக வாயேரிசம் உருவாவது புதிதல்ல. ட்விட்ச் என்ற லைவ் தளத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த தளத்தை யூட்யூபிற்கு மாற்று என்று கூறுவார்கள். முழுக்க நேரலை நிகழ்ச்சிகளே அதிகம். இதில் கூட ஒரு பயனர் கடந்த 2021ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை தனது 24/7 வாழ்க்கையை லைவில் ஒளிபரப்பி வருகிறார். 


பாதுகாப்பிற்கு சிசிடிவி கேமரா இருக்கிறது. இதில் ஒருவரின் அந்தரங்க வாழ்க்கை தெரியாது. ஆனால் அவரின் வீட்டிற்குள், படுக்கை அறையில், ஹாலில் கூட கேமராக்களை பதித்து அதை கவனித்துக்கொண்டிருந்தால், அது எப்படியான மன அழுத்தத்தை தரும்? 


இங்கு நேரடியான உடல் பாதிப்பு ஏதும் இல்லை. ஆனால், மனம் பேதலித்துவிடும். அதை லைவ் ஸ்ட்ரீமிங் தளங்கள் பெரிதாக கண்டுகொள்வதில்லை. அவர்களுக்கு வேண்டியது, தங்களது மென்பொருளை சேவையை மக்கள் அதிகம் பார்க்கவேண்டும். அடிமையாக இருக்கவேண்டும் என்பதுதான். அந்த வகையில்  டிக்டாக் லைவ், ஃபேஸ்புக் லைவ் ஆகியவை பெருமளவு வெற்றியைப் பெற்றுவிட்டன. தீவிரவாத தாக்குதல்களை கூட ஃபேஸ்புக் லைவில் சில சமூகவிரோதிகள் செய்தனர். இதற்கான எந்த வித பொறுப்பையும் சமூகவலைதள நிறுவனங்கள் ஏற்பதில்லை. லைவ் ஸ்ட்ரீமிங்கைப் பொறுத்தவரை ஒருவர் அதைப் பார்த்து அடிமையாகி விட்டால் அதிலிருந்து மீள்வது கடினம். இச்செயலின் விளைவாக சமூகத்தில் உருவாகும் பாதிப்புகள் என்னவென்று ஆராய்வது முக்கியம். 


டிக்டாக் லைவில் வெற்றி பெற்றதை அடுத்து ரெட்டிட் தளமும் கூட பயனர்களுக்கு கிஃப்ட் திட்டத்தை அறிவித்திருக்கிறது. ரெட்டிட் கோல்ட் புரோகிராம் என்பது அதன் பெயர். யோசித்து கான்செப்ட் உருவாக்கி வீடியோ எடுப்பவர்கள் ஒருபுறம் என்றால், கன்டென்ட் எல்லாம் கிடையாது. நான்தான் கன்டென்ட் என களமிறங்கி தங்கள் வாழ்க்கையை அப்படியே வீடியோவாக்கி ஒளிபரப்புகிறார்கள். இந்த வகையில் லைவ் ஸ்ட்ரீமிங் வெற்றியாளர்கள் வாரத்திற்கு ஐயாயிரம் டாலர்கள் முதல் 50 ஆயிரம் டாலர்கள் வரை சம்பாதிக்கிறார்கள். 


24/7 லைவ் ஸ்ட்ரீமிங் முறையில் வீடியோக்களை ஒளிபரப்புபவர்கள் தங்களது பார்வையாளர்களை தக்க வைக்க அவர்களுக்கு பொழுதுபோக்கு விஷயங்களை செய்கிறார்கள். கமெண்டுகளில் அவர்கள் கூறுவதை பின்பற்றுகிறார்கள். நிறைய கேமராக்களை வைத்து லைவ் செய்கிறார்கள் என்றால், அதில் பயனர்கள் தங்களுக்கு பிடித்த கேமராக்களை தேர்ந்தெடுத்து அதன் வழியாக வீடியோவைப் பார்க்கலாம். இதுபோல வசதியைக்கூட டிக்டாக் லைவ் தருகிறது. இந்த சமூக வலைத்தளங்களில் பார்வையாளர்கள் செலவு செய்யும் அளவும் அதிகரித்து வருகிறது. 




ஆனந்த் ஹூவர்


வயர்ட் இதழ் 

கருத்துகள்