சீரியல் கொலைகாரரின் மகன் தனது கணவனா என சந்தேகப்படும் போலீஸ் அதிகாரி - ஃபிளவர் ஆப் ஈவில்

 




ஃபிளவர் ஆஃப் ஈவில் - கே டிராமா

லீ காங் ஜி - மூன் சே வோன் - ஃபிளவர் ஆஃப் ஈவில்












பிளவர் ஆஃப் ஈவில்

கே டிராமா

லீ காங் ஜி, மூன் சே வோன்

 

பே சியாங் என்பவர் தனது டிடெக்டிவ் மனைவி, மகள் ஆகியோருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். பே சியாங்கிற்கு இரும்பு கைவினைப்பொருட்களை செய்வதுதான் வேலை. இந்த நேரத்தில், அவரை சந்திக்க டிவி நிருபர் வருகிறார். அவருக்கு பே சியாங்கின் கடந்த காலம் தெரியும். அதாவது பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் செய்த கொலைக்குற்றம் பற்றி.. இதனால் நிருபவரை பே சியாங் தனது வீட்டில் கீழறையில் கட்டிப்போடுகிறார்.

இந்த நிலையில் உணவக உரிமையாளர் ஒருவர், சீரியல் கொலைகாரர் டியோன் சிக் என்பவரின் முறையில் கொலையாகிறார். அவர் தற்கொலை செய்துகொண்டு இறந்ததால் இப்போது கொலைகளை செய்தவர், அவரின் மகன் டூ சூ என ஊடகம், காவல்துறை முடிவு செய்கிறது. பழைய வழக்குகளை கையில் எடுத்து குற்றவாளி டூவை தேடத் தொடங்குகிறது.

உண்மையில் டூ சூ வழக்கை ஆராயும் டிடெக்டிவ் மனைவிற்கு, கொலைகளை செய்வது தனது கணவரோ என சந்தேகம் வருகிறது. ஏனெனில் அவர் நள்ளிரவில் வெளியே சென்று வரும் நாளில்தான் கணவர் அணிந்துள்ள உடைபோல அணிந்துள்ள ஒருவர், உணவக அதிபரை கொலை செய்கிறார். டூ சூவைப் பொறுத்தவரை அவரின் வாழ்க்கை சீரியல் கொலைகாரரான டூ சியோக் மூலம் ஏற்கெனவே சிதைந்து போயிருக்கிறது. அவர் செய்த கொலைகளுக்காக தனது அசல் பெயரில் இருந்தால் தான் அவப்பெயரை சங்கடத்தை சந்திக்க வேண்டுமென நினைத்து பெயரை மாற்றிக்கொண்டு வாழ்கிறார். பே சியோங் என்பதுதான் அவரின் பெயர்.

அவருடைய அப்பா, அம்மா சமூகத்தில் பெரிய அந்தஸ்து கொண்டவர்களாக இருக்கிறார்கள். அப்பா, மருத்துவமனை தலைவர். மனைவி, மருந்தகம் ஒன்றை நடத்தி வருகிறார்.  இருவருமே பே சியோங் தங்களது மகன் என்றுதான் கூறுகிறார்கள். உண்மையில் ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பதே கதையில் முக்கியமான பகுதி. அதை தொடரைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அதிர்ச்சி, ஆச்சரியம் இதில்தான் இருக்கிறது.

படத்தில் பெற்றோர் செய்த தவறுகள் பிள்ளைகளின் வாழ்க்கையை எப்படி குலைக்கின்றன. அதை எதிர்கொண்டு வர அவர்கள் எந்தளவு போராடுகிறார்கள் என்பதை முடிந்தவரை திரையில் காட்சியாக, வசனமாக காட்டியிருக்கிறார்கள்.

இதில் சாய் வோன் என்பவர் கல்லூரியில் படிக்கும்போது, இரும்பு கைவினைப் பொருட்களை செய்துகொண்டிருக்கும் பே சியோங் மீது காதல் வசப்படுகிறார். இத்தனைக்கும் சாய் வோன் மீது பே சியோங்கிற்கு பெரிய ஆர்வம் எல்லாம் ஏற்படுவதில்லை. அவர் பாட்டிற்கு வேலை செய்துகொண்டு அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். ஆனால், சாய் வோன் காதலன் என்று சொல்வதற்கு எந்த விஷயமும் செய்யாத் தன்னைப் பார்த்தாலே எரிந்துவிழும் பே சியோங் மீது காதல்  கொள்கிறாள். வித்தியாசமாக இருப்பவர்களைத் தானே பெண்களுக்கு உடனே பிடித்துப் போகிறது.

பே சியோங்கிற்கு சிறுவயதில் ஊர்க்காரர்கள் பேயோட்டுகிறோம் என அடித்து உதைத்த காரணத்தால் இறந்து போன அவனது அப்பா கண்ணில் தெரிகிறார். அவனை அணுகுபவர்களை அவர், கொன்றுவிடு என கூறிக்கொண்டே இருக்கிறார். தனது கொலைகார புத்தியை மகனுக்கு வாழும்போது உருவாக்க முயன்று தோற்றவர் அவர். சாய் வோன் பே சியோங்குடன் இருக்கும்போது மட்டும், அவள் அருகாமை மட்டுமே அவனை சற்று காப்பாற்றுகிறது. அவனது அப்பா அவனை நீங்கியிருக்கிறார். இந்த ஒரே காரணத்திற்காக அவன், சாய் வோனை காதலிக்கிறான். சாய் வோனின் அம்மா சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கிறார். சாய் வோன் காவல்துறையில் டிடெக்டிவாக வேலை செய்கிறாள்.  

முன்னாள் குற்றவாளி  தன் கணவன், தன் பிள்ளைக்கு அப்பா, சீரியல் கொலைகாரரின் மகன் என தெரியும்போது காவல்துறை அதிகாரி என்ன செய்வாள் என்பதுதான் கதையின் முக்கியமான முடிச்சு. அந்த தடுமாற்றத்தை சாய் வோன் பாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சிறப்பாக கையாண்டுள்ளார்.

தனது கணவனை விட்டு விடும்படி மூத்த அதிகாரியிடம் மண்டியிட்டு கேட்கும் மொட்டை மாடிக் காட்சி இதற்கு உதாரணம். அடுத்து, இறுதிப்பகுதியில் காரில் தன்னை முழுக்க மறந்துவிட்டானா என்ற  பயத்தில் காதலிக்கிறேன் என்று சொல்வானா என எதிர்பார்ப்புடன் டூ சூ முகத்தைப் பார்த்துக்கொண்டு பேசும் காட்சி.  டூ சூவின் தங்கையிடம் டூ சூ இப்போது தன்னுடைய கணவன், அவனுக்கு ஒரு மகள் இருக்கிறாள், மனைவி இருக்கிறாள். அவன் எந்த சூழ்நிலையை சந்தித்தாலும் முடிவை எடுத்தாலும் பக்க பலமாக தான் இருக்கிறேன் என்று கூறும் காட்சி…

லீ காங் ஜி தான் தொடரை தூக்கி நிறுத்தும் நாயகன். தனது சகோதரி வாழ்க்கைக்காகவே தனது வாழ்க்கையை பணயம் வைத்து வாழ்பவன். இறுதியில் தன்னை தன்னை விட அதிகமாக காதலிக்கும் மனைவியால் குற்றவாளியாக கருதப்பட்டு அவமானங்களை சந்திப்பவன். பாத்திரம் கழுவும் இடத்தில் நாம் பிரிந்துவிடலாம், எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை என்று சாய் வோன் கூறும் காட்சியில் லீ காங் ஜி பிரமாதமான நடிகர் என நிரூபிக்கிறார்.

மேற்சொன்ன கார் காட்சியில், நினைவிழப்பால் மனைவி சாய் வோனை மறந்திருந்தாலும் நினைவு வரும்போது அதை எதிர்கொண்டு தான் ஒரு குற்றவாளி என்பதை மறக்காமல் டிடெக்டிவ் என மனைவியை குறிப்பிட்டு பேசுவது அருமை. அடுத்து, தனது வீட்டுக்கு வந்து கைவினைப்பொருட்களுக்கான கூடத்தை வைக்க மனைவி சாய் வோனிடம் பேசும் காட்சி.

டிவி ரிப்போர்டராக வரும் கிம் மூ ஜின், போலீஸ் அதிகாரி , குழு தலைவர், பிரிவுத் தலைவர் என அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். தொடரின் முக்கியமான பாத்திரம் என்றால் சீன உணவகத்தில் கிம் மூ ஜின்னின் நண்பரைக் கொலை செய்துவிட்டு போகும் டாக்சி ட்ரைவர்தான். அவர்தான் தனது மனைவியைத் தேடி அலைந்து அதன் வழியாக டூ சூவை கடத்திச் செல்கிறார். அதன் வழியாகவே பார்வையாளர்களுக்கு டூ சூ, அவன் அப்பா, அது தொடர்பான விசாரணை தெரிய வருகிறது.

இறுதிக் காட்சிகளில் கூட அவரை கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அவரை தவிர்த்துவிட்டார்கள்.

இறுதிக்காட்சியில் இரக்கமே இல்லாத சீரியல் கொலைகாரன், யாரையும் கொலை செய்ய தயங்கும் டூ சூவைப் பார்த்து பயந்து ஓடுவது நம்பகத் தன்மையாக இல்லை. சைக்கோ கொலைகாரர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு உணர்ச்சி என்பது அரிது. பிறரின் கவனத்தைத் தவிர்க்க அழுகை, சிரிப்பு இருப்பது போல நடிப்பாரகள். அப்படித்தான் டூ சியோக்கின் கூட்டாளி இருக்கிறார். அவர் பயப்படுவது போல நடிப்பது ஏற்றுக்கொள்வது போல இல்லை. ‘’இறுதியாக நான்தான் ஜெயிப்பேன். நீ என்னைக் கொன்றாலும் நான் உன்னைக் கொன்றாலும்’’ என்பவர் எதற்கு டூ சூவிடமிருந்து பயந்து ஓடுகிறார்.

காதலிக்கிறார்கள், திருமணம் செய்துகொள்கிறார்கள், பிள்ளை பிறக்கிறது இப்படி செல்லும் உறவு நம்பிக்கையின் அடிப்படையில்தான் இருக்கிறது. ஆனால் டிடெக்டிவ் சா ஜிவோன் தொடரில் பெரும்பாலான நேரங்களில் கணவரை சந்தேகப்பட்டுக் கொண்டே இருக்கிறார். இந்த உறவை எப்படி டூ சூ நம்புகிறார். அவர் சீரியல் கொலைகாரரின் மகன், அவருக்கு ஒரு அக்கா இருக்கிறார் என தெரிகிறது. இதெல்லாம் தெரிந்தபிறகு, நேர்மையான அதிகாரி என்றால் அவரை சிறையில் அடைப்பதே சரி. ஆனால் தன் மேல் காதல் இருந்தால் கருணை காட்டலாம்  என்று சாஜிவோன் யோசிப்பது வினோதமாக இருக்கிறது.

உண்மையில் சற்று குழப்பமான இடம் இது. அப்பா இழந்துவிட ஆண் துணையின்றி அம்மாவும் மகளும் சூப்பர் மார்க்கெட்டை நடத்துகிறார்கள். அந்த நேரத்தில் கைவினைப் பொருட்களை செய்து வரும்  பே சியோங், சாஜி வோனின் கவனத்தை ஈர்க்கிறான். அவன் யாருக்கும் நல்லதும் செய்யவில்லை, அல்லதும் செய்யவில்லை. இந்த நிலையில்தான் சாஜி வோன் வற்புறுத்தி தன்னை காதலிக்க பிறகு மணம் செய்துகொள்ள தூண்டுகிறாள்.  பே சியோங் என்ற அடையாளத்தில் உள்ள டூ சூ, தனது அக்காவுக்காக அவதூறு, பழியை ஏற்றுக்கொள்கிறான். ஸிஸோபெரெனியா போல குறைபாடுகளும் உள்ளது. அப்பாவின் குரல் காதில் கேட்பது, அப்பாவின் உருவம் கண்ணில் தெரிவது எல்லாமே… இதெல்லாம் இல்லாமல் ஊடகங்கள் அவன் பெயரை அப்பாவின் கொலைக்கூட்டாளி என சொல்லி அவனது வாழ்க்கை வேட்டையாடுகின்றன. இந்த நிலையில் திருமணம்தான் அவனுக்கு சற்று ஆறுதல் தருகிறது.

 ஆனால் அந்த திருமணமே ஒருகட்டத்தில் அவனுக்கு சாபமாக மாறுகிறது. திரும்ப திரும்ப  தான் கொலை செய்யவில்லை என பே சியோங் (டூ சூ) சொல்வது பரிதாபமாக இருக்கிறது. உண்மையில் காதலித்து, மணம் செய்து குழந்தை பெற்றபிறகும் கூடவா ஒருவரை முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. தொடரின் முடிவு, மகிழ்ச்சியாக முடிவது பலருக்கும் பிடித்தமானதாக இருக்கலாம்.

டூ சூவும், டிடெக்டிவும் அவர்களது எதிர்காலத்தை யோசித்து பிரிந்து செல்வதுதான் சரியானதாக இருக்கும். காதல், திருமணம் இரண்டிலும் நம்பிக்கை தகர்ந்து ஒருவரையொருவர் விசாரணை செய்துகொண்டு இருந்தால், கணவன் மனைவிக்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தால் அங்கே இருக்கும் உறவு காவல்துறை அதிகாரி, குற்றவாளி அல்லது குற்றம்சாட்டப்பட்டவர் என்ற உறவு மட்டும்தானே? அங்கே அன்பு உருவாக வாய்ப்பே இல்லை.

கடந்த காலம் என்பதை யாரும் எளிதில் மறைக்க, மறந்துவிட முடியாது. டூ சூவின் அக்காவை காதலிக்கும் ரிப்போர்டர் மூ ஜின் கூட அவன் செய்யும் வேலை காரணமாகவே அவனது காதலி டூ ஹே சூவிடமிருந்து விலகிச்செல்லும்படி நேருகிறது. குற்றவாளி என சுட்டிக்காட்டி கட்டுரை எழுதிய பால்ய கால நண்பன் டூ சூவையும் அவனால் புறக்கணிக்க முடியவில்லை.

பெற்றோரின் செயல்கள் அவர்களின் பிள்ளைகளை விட்டு வைக்காமல் வேட்டையாடுகின்றன.

கோமாளிமேடை டீம்

 -----------------------

https://indianexpress.com/article/entertainment/web-series/flower-of-evil-star-lee-joon-gi-duranga-post-8102657/

கருத்துகள்