ஓப்பன் மைண்ட்ஸ் 2023 நிறைவுப்பகுதி - ஜெரோதா நிதின் காமத், சசிதரூர், சல்மான் ருஷ்டி, நந்தன் நீல்கேனி

 






சல்மான் ருஷ்டி, எழுத்தாளர்

சசிதரூர், எழுத்தாளர், நாடாளுமன்ற உறுப்பினர்

தொழில்நுட்ப ஆலோசகர் நந்தன் நீல்கேனி

நிதின் காமத், ஜெரோதா



ஓப்பன் மைண்ட்ஸ் 2023

சல்மான் ருஷ்டி

76

எழுத்தாளர்




இந்தியாவை மையப்படுத்திய விக்டரி சிட்டி என்ற நாவலை வெளியிட்டார். நியூயார்க்கின் சட்டாகுவா என்ற இடத்தில் நூல் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, தீவிரவாதி ஒருவனால் கடுமையாக தாக்கப்பட்டார். ஈரான் நாட்டின் அயதுல்லா கோமெய்னி என்ற மத அடிப்படைவாத தலைவரால் தூண்டுதல் பெற்ற ஆள்தான் தாக்குதலுக்கு காரணம்.

சல்மான் ருஷ்டி. தனது கற்பனைக்கு கொடுத்த பெரிய விலை இத்தகைய தாக்குதல் என கூறலாம். விக்டரி சிட்டி நாவல், விஜயநகர பேரரசரைப் பற்றிய புனைவை மையமாக கொண்டது. இதற்கு முன்னர், மிட்நைட் சில்ரன் என்ற ஒரு நாவலை இந்தியாவின் சுதந்திரத்தை மையமாக வைத்து எழுதினார் ருஷ்டி. மத அடிப்படைவாதிகளை தூண்டிவிடும் அளவுக்கு கற்பனை வளம் கொண்ட எழுத்துக்கு சொந்தக்காரர்.

மாய அழகு கொண்ட எழுத்துக்களால் பேரரசர்கள் மறைந்துவிட்ட உலகிலும் புகழ்பெற்று பேசப்படுகிறார் ருஷ்டி. எதிர்காலத்திலும் அவரது நாவல்கள் புகழ்பெற்று விளங்கும் என்பதை மறுக்க முடியாது.

 

பிமல் படேல்

61

கட்டட கலைஞர்



இந்தியாவில் புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டடத்தைக் கட்டியவர், பிமல் படேல். இவரது ஹெச்சிபி டிசைன் பிளானிங் அண்ட் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனமே முக்கோணமான வடிவில் அமைந்த கட்டடத்தை உருவாக்கியது. சிஇபிடி என்ற பல்கலைக்கழகத்தின் தலைவராக செயல்படுகிறார்.

 காசி விஸ்வநாதர் கோவிலின் காரிடார் பணியை செய்து வருவது பிமல் படேல்தான். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சபர்மதி ஆறு தொடர்பான பணி ஒன்றை ஏற்றதில் இருந்து பிமலின் கட்டட பணி ஏறுமுகமாகவே உள்ளது. புதிய நாடாளுமன்றம் மதம், கலாசாரம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

 

 

நந்தன் நீல்கேனி

68

பொது தொழில்நுட்ப அறிவியலாளர்

 

அண்மையில் ஐஐடி பாம்பேவுக்கு 315 கோடி ரூபாயை நன்கொடையாக கொடுத்த செய்தியை அறிந்திருப்பீர்கள். இதுவரை அங்கே படித்த மாணவர்களில் அதிக நன்கொடை கொடுத்த மனிதர் நீல்கேனிதான். இன்ஃபோசிஸில் வேலை செய்தபோது அரசுடன் இணைந்து ஆதார் கார்டை உருவாக்கினார். பிறகு, யுபிஐ, ஃபாஸ்டேக், ஒன்டிசி என பல்வேறு தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உருவாக்கப்பட காரணமாக இருந்த மனிதர். இன்று இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் க்யூஆர் கோடு மூலம் யுபிஐ வசதியைப் பயன்படுத்துகிறார்கள் என்றால் அதற்கு நந்தன் நீல்கேனியின் புத்திசாலித்தனமே முக்கியமான காரணம்.


சசிதரூர்

67

எழுத்தாளர், நாடாளுமன்ற உறுப்பினர்




கேரளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி யின் நாடாளுமன்ற உறுப்பினர். அண்மையில் அம்பேத்கர் – எ லைஃப் என்ற நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார். தனது பத்து வயதில் இருந்து எழுதிக்கொண்டிருக்கிறார். இந்தியாவின் பல்வேறு பிரச்னைகள், சிக்கல்கள், இந்துத்துவம் பற்றி எழுதியுள்ளார். நூல்களும் சிறப்பாக விற்று வருகின்றன. சமூக வலைத்தளங்களில் இந்துத்துவ வெறியர்கள் பற்றி அங்கதமாக எழுதுவது, மதவாத கட்சிகளைப் பற்றி தொடர்ச்சியாக விமர்சனம் செய்வது என இயங்கி வருகிறார். நூல்களை சுவாரசியமாக வாசிப்பவரின் மனதுக்கு நெருக்கமாக அங்கதமான இயல்பில் எழுதுவது சசிதரூரின் பலம்.

 

பிரதாப் பானு மேத்தா

56

பொதுநல அறிவுஜீவி, சிந்தனையாளர்

இவரை அரசியல்வாதிகளுக்கு பிடிக்கலாம், பிடிக்காமல் போகலாம். ஆனால் முழுமையாக புறக்கணிக்க முடியாது. அரசியலமைப்பு சட்டப்படி, சுதந்திரமாக தனது கருத்துகளை கூறிக்கொண்டே வருகிறார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர். அசோகா பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருந்தார். பிறகு வந்த அரசுகளில் பல்வேறு பதவிகளை வகித்தார். 2006ஆம் ஆண்டு தேசிய அறிவு கமிஷன் என்ற அமைப்பில் பங்கு பெற்றார். சமூக நீதியை அடிப்படையாக கொண்டு அரசின் செயல்பாடுகளை கேள்விக்கு உள்ளாக்குபவர். எந்த கட்சியைக் குறித்தும் கவலைப்படுவதில்லை.


ஸ்வபன்தாஸ் குப்தா

67

வலதுசாரி சிந்தனையாளர்


அண்மையில் மேற்கு வங்கத்தில் போட்டியிட்டு தோற்றாலும், கருத்து என்ற வகையில் பல்வேறு பத்திரிகைகளிலும் வலதுசாரி கருத்தியல் கட்டுரைகளை எழுதி வருகிறார். மழுப்பாமல் பேட்டிகளை கொடுத்து வருகிறார். வலதுசாரி கட்சிகளைப் பொறுத்தவரை தேர்தல் வெற்றிகளைப் பெற்றாலும், சிந்தனை தளத்தில் அவர்களின் கருத்துகளைப் பேச அதிக ஆட்கள் இல்லை. அந்த வறட்சியை பஞ்சத்தை தனது எழுத்தாலும் பேச்சாலும் போக்குபவர் ஸ்வபன்தாஸ் குப்தா. குறிப்பாக ஆங்கில அறிவுஜீவிகளின் வட்டாரத்தில் தனது கருத்துகளை ஆழமாக ஊன்றி விதைத்து வருகிறார்.


கீதா கோபிநாத்

51

துணை நிர்வாகத் தலைவர், ஐஎம்எஃப்


கேரளத்தை பூர்விகமாக கொண்டவர். மைசூரிலும், டெல்லியிலும் வளர்ந்து வந்தவர். பிறகு அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தவர், அங்கு கல்வி கற்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.பிறகுதான் உலக நிதி நிதியகத்தில் பொருளாதார வல்லுநராக நியமிக்கப்பட்டு பிறகு கூடுதல் தலைவராக பணி மாற்றம் செய்யப்பட்டார். பொருளாதாரக் கொள்கை பற்றி வெளிப்படையாக கருத்து சொல்லும் துணிச்சல்காரர். இந்திய வம்சாவளி என்று பெருமைப்படுபவர்கள் இருந்தாலும், கீதா தனது சுதந்திரமான சிந்தனை, பேச்சுக்காக பலராலும் பாராட்டப்படுகிறார். தனது மதிப்புமிக்க ஆலோசனைகள் மூலம் உலக நாடுகளின் பொருளாதார பிரச்னைகளுக்கு தீர்வு தருவார் என நம்பலாம்.


வெங்கி ராமகிருஷ்ணன்

71

உயிரியலாளர்


செல்களில் உள்ளே உள்ள புரதம் உருவாக்கும் ரிபோசோம்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர். தமிழ்நாட்டில் பிறந்து அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்து முனைவர் படிப்பை படித்தவர் இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜில் பணியாற்றத் தொடங்கினார். தற்போது அரச குடும்பத்தைச் சேர்ந்த மூன்றாம் சார்லஸ்  நியமித்த 24 பேர் கொண்ட குழுவிலும் இடம்பெற்றிருக்கிறார். இங்கிலாந்து நாட்டின் அறிவியல் துறையில் முக்கியமான ஆளுமை.


அரவிந்த் பனகரியா

70

பொருளாதார வல்லுநர்


திட்டக்குழு கலைக்கப்பட்டு நிதி ஆயோக் உருவானபோது அதன் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டவர் பனகரியா. அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர். ராஜஸ்தான் மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர்.  2016ஆம் ஆண்டு முதல் நாளந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தராக செயல்பட்டு வருகிறார். வலதுசாரி கருத்துகளில் ஆர்வம் கொண்டவர். எழுதும் கட்டுரைகளிலும் அதை பிரதிபலிக்கிறார்.


தீபக் ஷெனாய்

48

நிதி ஆய்வாளர்


சமூக வலைத்தளங்களில் தீபக்கை அதிக மக்கள் அவரின் நிதி ஆலோசனைகளுக்காக பின்பற்றுகிறார்கள். போர்ட்ஃபோலியோ மேம்பாட்டு சேவை மூலம் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிர்வாகம் செய்து வருகிறார். மென்பொருள் பொறியாளர் படிப்பு படித்தவர், பங்குச்சந்தையை  அறிந்து ஆர்வம் ஏற்பட்டு நிதி ஆய்வாளர் ஆனார். ‘மணி வைஸ் – டைம்லெஸ் லெஷன் ஆன் பில்டிங் வெல்த்’ என்ற நூலை எழுதியுள்ளார். பங்குச்சந்தை தொடர்பான சிக்கலான வார்த்தைகளை எளிமைப்படுத்தி விளக்கி பிரபலம் ஆனவர் தீபக்.

நிதின் காமத்

43

தொழிலதிபர்

நாளிதழ்களை வாசிக்கிறீர்கள், இணையத்தில் உள்ளீர்கள் என்றால் ஜெரோதா என்ற பங்குச்சந்தை நிறுவனம் பற்றி கேள்விப்படாமல் இருக்க முடியாது. அதன் நிறுவனர் நிதின் காமத். பங்குகளை வாங்கி வைத்து விற்றுத்தரும் நிறுவனம்தான். இதற்காக பெறும் தொகை குறைவு. இந்த நிறுவனம் எப்படி தொழிலில் சாதிக்குமா என பலரும் யோசித்த வேளையில் கடந்த ஆண்டு வருமானமாக 2 ஆயிரம் கோடியை சம்பாதித்துள்ளது. ஜெரோதா ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனமாக இருந்தாலும் முதலில் தனது ஐடியா மூலம் சுயமாக சம்பாதிக்கட்டும். முதலீட்டாளர்களின் பணத்தைப் பெறுவதில் அவசரம் வேண்டாம் என திட்டம்போட்டு தனிப்பாதையில் பயணிக்கிறார் நிதின் காமத்.


ஓப்பன் மைண்ட்ஸ் 2023

ஓப்பன் வார இதழ்

10 ஜூலை 2023

 

 

 


கருத்துகள்