வாழ்க்கை, தொழில் என இரண்டிலும் வாகை சூடுவதற்கான வழிகாட்டி நூல்!

 






ரியோ ஒகாவா நூல்



வாகை சூடும் சிந்தனை

ரியோ ஒகாவா

ஜெய்ஹோ

தமிழாக்கம் – மிஸ்டிக் ரைட் நிறுவனம்

 

 நான் நன்றாக இருக்கிறேன் என்ற புத்தகம் ரியோ எழுதியதுதான். பக்கம் 85. நூல் சற்று சிறியது. கருத்துக்களும் அதனால் சிறியதோ என்று தோன்றும்படி நூலை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த நூலோடு ஒப்பிடும்போது வாகை சூடும் சிந்தனை சொல்லும் கருத்துகள் அடிப்படையில் சற்று மேம்பட்ட சுய முன்னேற்ற நூல் எனலாம்,

ஹேப்பி சயின்ஸ் ஆன்மிக மத தலைவர் ஆற்றிய நான்கு உரைகளை தொகுத்து ‘வாகை சூடும் சிந்தனை’ என நூலாக்கியிருக்கிறார்கள். இப்படி நூலாக்குவதில் உள்ள நுட்பம் பற்றியும் ரியோ, பேசியுள்ளார். ஆனால், அது எந்தளவு சரி என்பதை வாசகர்கள்தான் படித்து புரிந்துகொள்ளவேண்டும்.

பானாசோனிக் நிறுவனத்தின் நிர்வாக முறை. குழாய் தண்ணீர் தத்துவத்தை எப்படி கடைபிடித்து நிறுவனம் மின்சாதனங்களை விற்றது என்பது படிக்க நன்றாக இருந்தது. இன்று அந்த தத்துவத்திற்கு என்ன மதிப்பு என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அதை எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் செயல்படுத்திய காலம் முக்கியமானது.

குறிப்பிட்ட பதவி, அதிகாரம் கிடைத்தபிறகு நாம் எப்படி செயல்படவேண்டுமென ரியோ கூறும் கருத்து ஆச்சரியப்படுத்துகிறது. குறிப்பிட்ட காலத்தில் வீழ்ச்சி, பின்னடைவு, சரிவை சந்திக்க நேர்ந்தாலும் உதவும் சக்திகள் ஆதரவாக இருந்து உதவும்படி சூழலை அமைத்துக்கொள்ளலாம் என கூறுவது எதிர்பாராத திருப்புமுனைக் கருத்து.

மேற்கத்திய சுய முன்னேற்ற நூல்களில் சில கோட்பாடுகள், தத்துவங்களை முன்வைத்து நகர்வார்கள். நூலிலுள்ள கருத்துக்களை முழுக்க படித்தாலும் கூட அது மனதில் ஒட்டுவது கடினம். ஆனால், ஆசிரியர் ரியோவின் கருத்து, அவரது வாழ்வில் இருந்து வந்தது போல இயல்பானதாக உள்ளது.

ரியோவின் கருத்துகளை பிழையின்றி புரிந்துகொள்ள தமிழ் மொழிபெயர்ப்பும் முக்கியமான காரணமாக உள்ளது. அதை மறுக்க முடியாது. சில இடங்களில் எழுத்துப்பிழைகள் வந்துள்ளன. அதை அடுத்தடுத்த பதிப்புகளில் சரிசெய்வார்கள் என நம்பலாம்.

ரியோவின் எழுத்துக்களில் அடிக்கடி வரும் விஷயம், கடவுள் நம்பிக்கையும், அதை நேர்மறையான எண்ணங்களை உருவாக்க பயன்படுத்துவது எப்படி என்பதும்தான். நம் சிந்தனைகளில் உள்ள கருத்து செயலாக மாறுகிறது. எனவே, சிந்தனை சரியாக இருந்தால் செயலும் தெளிவாக இருக்கும் என்பதுதான் அடிப்படை.

எளிமையான சுயமுன்னேற்ற நூலை வாசிக்க வேண்டும் என நினைப்பவர்கள் வாகை சூடும் சிந்தனை நூலை வாங்கி வாசிக்கலாம்.

கோமாளிமேடை டீம்

 

 


கருத்துகள்