இனவெறி கொடுமைக்கு இழப்பீடு வேண்டும்! - இது பார்படோஸ் புரட்சிக்குரல்

 








பார்படோஸிலுள்ள தேவாலயம்




இனவெறிக்கும் கொத்தடிமைத்தனத்திற்கும் இழப்பீடு வேண்டும்!

பார்படோஸ், இன்று குடியரசு நாடு, ஆனால், அங்கு நானூறு ஆண்டுகளுக்கு மேலாக கறுப்பின கொத்தடிமைகளை கொண்டிருந்தது. அங்கு விளைந்த கரும்பை விளைவித்தவர்கள் கறுப்பினத்தவர்கள்தான். கரும்பு விளைச்சலுக்கு டிராக்ஸ் ஹால் என்ற பகுதி புகழ்பெற்றது.

லட்சக்கணக்கான கறுப்பினத்தவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டு கொத்தடிமைகளாக வேலை பார்க்கவைக்கப்பட்டனர். இப்படி வந்தவர்களில் வெள்ளையர்களின் கொடுமை, காலநிலை, நோய் என பல்வேறு சிக்கல்களால் முப்பதாயிரம் பேருக்கும் மேல் இறந்தனர். இந்த தொழிலாளர்களைப் பற்றிய ஆவணங்களைக் கூட வெள்ளை முதலாளிகள் மறைத்து, பின்னர் அதை நெருப்புக்கு இரையாக்கினர். அதனால் பெரிதாக நிலைமை ஏதும் மாறிவிடவில்லை. வெள்ளையர்கள் இன்றும் வசதியானவர்களாகவே வாழ்கின்றனர். கறுப்பினத்தவர்கள் இழப்புகளை சந்தித்து அதிலிருந்த மீண்டு வர பல தலைமுறைகள் ஆகிவிட்டது.

இன்று அங்கு வேலை செய்தவர்களின் பேரன், பேத்திகள் என அனைவரும் இணைந்து தங்கள் முன்னோர் அங்கு கொத்தடிமைகளாக இருந்து உழைத்த உழைப்பிற்கு இழப்பீடு கேட்டு வருகின்றனர். இது உண்மையில் அங்கு முதலாளிகளாக உள்ள வெள்ளையர்களுக்கு அதிர்ச்சி தந்தாலும், தாங்கள் அதற்கு பொறுப்பில்லை என்று மழுப்பிவருகின்றனர். பணக்காரர்கள் கொடுப்பதாக இல்லை என்றாலும் ஏழைகள் விடுவதாக இல்லை.

எஸ்தர் பிலிப்ஸ், ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கவிஞரும் கூட. இவரின் தாத்தா, டிராக்ஸ் ஹாலில் பணியாற்றிய கறுப்பினத்தவர்தான். 1650ஆம் ஆண்டு, கரும்பு விளைவிக்கவென நீக்ரோ தங்கிக்கொள்ள தனிப்பகுதி ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்று டிராக்ஸ் ஹால் பகுதி, பிரிட்டன் நாட்டின் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக உள்ள கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவரான ரிச்சர்ட் டிராக்ஸிற்கு சொந்தமாக உள்ளது. டிராக்ஸ் ஹால் பகுதியில் இருந்துதான் பல்லாயிரக்கணக்கான கறுப்பினத்தவர்கள் பிற காலனிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டடனர். அடிமை முறையின் தொடக்கமாக இருந்த இடம் இதுவே.

பதினேழாம் நூற்றாண்டில் அடிமையாக இருந்த கறுப்பினத்தவர்கள் சுதந்திரத்திற்காக போராடிய வழக்குகள் பார்படோஸ் நீதிமன்ற ஆவணங்களில் காணக்கிடைக்கிறது. அங்கு நடந்த கறுப்பினத்தவர்களின் போராட்டங்களை எழுத்தாளர் ஹிலாரி பெக்கில்ஸ் எழுதிய ‘பிரிட்டன் பிளாக் டெப்ட் ‘என்ற நூல் விளக்கியுள்ளது. அமெரிக்காவில் கூட கறுப்பினத்தவர்களுக்கு இழப்பீடு தரும்  செயல்பாடு தொடங்கியுள்ளது. அரசு அளிக்கும் இழப்பீடு தொடர்பான மசோதாக்கள், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

 தேவாலயங்களுக்கும் கறுப்பின அடிமை முறையில் லாபம் பார்த்த பாவக்கணக்குகள் உண்டு. தி சர்ச் ஆஃப் இங்கிலாந்து, தனது கடந்த கால அடிமைமுறை லாபக்கணக்கை ஆராய்ந்து பார்த்து பரிகாரமாக இனவெறி பாகுபாட்டைக் களையவென நூறு மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. நெதர்லாந்து நாடு, அடிமை முறையை கைக்கொண்டு லாபம் பார்த்ததற்காக மன்னிப்பு கேட்டுள்ளது.

 பிரிட்டனைப் பொறுத்தவரை அரச குடும்பத்திற்கும் கறுப்பின அடிமை முறையில் லாப ருசி பார்த்த வரலாறு உண்டு. அங்கும், அடிமை முறைக்கு இழப்பீடு தரவேண்டுமென குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் ரிஷி சுனக் , இந்த கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுத்துவிட்டார். இந்திய வம்சாவளி என வெளிநாட்டில் சாதித்தவர்களைப் பற்றி நாளிதழ்கள் பெருமைப்படுகின்றனர். ஆனால், இனத்தில் இந்திய வம்சாவளியாக இருந்தாலும் அவர்கள் வெள்ளையர்களுக்கு கட்டுப்பட்டு அவர்களுடைய அடிமை போலவே நடந்துகொள்கிறார்கள். இதை காலச்சுவடு இதழில் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சுட்டிக்காட்டியிருந்தார்.

கறுப்பின கொத்தடிமை முறையால் லாபம் சம்பாதித்த ஐரோப்பிய நாடுகள் பொது மன்னிப்பு கேட்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு தரவேண்டுமென வலியுறுத்தி வருகிறது காரிகாம் என்ற அமைப்பு. இதை மேற்கு நாடுகள் ஏற்கவில்லையென்றாலும் காரிகாம் தனது கோரிக்கைகளை இன்னும் சில மாதங்களில் இறுதி செய்து வெளியிடுவோம் என்று கூறியிருக்கிறது.

காரிகாம் அமைப்பு, இனவெறி மற்றும் கொத்தடிமை முறைக்கு எதிராக போராடும் போராளிகளோடு  இணைந்து செயல்படுகிறது. இழப்பீடு பணம் தனிநபர்களுக்குச் செல்லாமல் ஒட்டுமொத்த மனிதர்களின் நலவாழ்வுக்கு செலவிடப்படும். 2012ஆம் ஆண்டு, பிரிட்டனில் மூன்று கென்ய நாட்டு மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கான இழப்பீடாக 17.86 மில்லியன் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

‘’நீங்கள் போராட்டங்களில் ஈடுபடும்போது பல பத்தாண்டுகள் கடந்துபோகும். மாற்றங்கள் ஏதும் நடந்திருக்கிறது. ஆனால் திடீரென சில வாரங்களில் பத்தாண்டுகளுக்கான மாற்றங்கள் நடந்தேறும். நாம் அப்படிப்பட்ட காலத்தில்தான் வாழ்கிறோம்’’  என ரஷ்ய புரட்சியாளர் லெனினின் மேற்கோளை சுட்டிக்காட்டி காரிகாம் தலைவர் கூறினார்.

1627ஆம் ஆண்டு முதன்முதலாக பிரிட்டிஷ் மக்கள் பார்படோஸுக்கு வந்தனர். பத்து அடிமைகளோடு வந்த ஜேம்ஸ் டிராக்ஸ்தான் அதில் முக்கியமானவர். அவர் வரும்போது அங்கு ஐம்பது ஆட்கள் குடியேற நினைத்து வந்தனர். குடும்பத்தில் இரண்டாவது அல்லது மூன்றாவது மகன் என்பதால் குடும்ப சொத்து ஜேம்ஸூகு கிடைக்க வாயப்பு இல்லை. எனவே, அவர் தனது திறமையை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். எனவே, ஆப்பிரிக்காவில் இருந்து கடத்தி வந்த கறுப்பின அடிமைகளை கரும்பு பயிர் பயிரிடுவதில் பயன்படுத்தினார். 1940களில்  பார்படோஸில் சர்க்கரை புரட்சி உருவானது. இதனால், அங்கு குடியேறி கரும்ப பயிரிட்ட பலரும் பணக்காரர்களாக ஆனார்கள்.

கரும்பு பயிரில் கிடைத்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள அடிமைகள் தேவைப்பட்டனர். எனவே, வெள்ளையர்கள் அவர்களுக்கான சட்டவிதிகளை, உரிமை வரம்புகளை 1661ஆம் ஆண்டு உருவாக்கினர். இங்குள்ள சர்க்கரை உற்பத்தி நிறுவனங்களில் கிழக்கிந்தியா நிறுவன பங்குதாரர்கள் முதலீடு செய்தனர். பதினெட்டாம் நூற்றாண்டில் டிராக்ஸ் வம்சாவளியினர், ‘இன்ஸ்ட்ரக்‌ஷன் ஃபார் தி மேனேஜ்மென்ட் ஆஃப் நீக்ரோஸ்’  என்ற வழிகாட்டி நூலை எழுதினர். இது அங்குள்ள முதலாளிகளுக்கு கறுப்பின அடிமைகளைக் கையாள பயன்பட்ட முக்கியமான நூல்.

பார்படோஸில் கரும்பு பயிர் மூலம் கிடைத்த செல்வத்தை ஜமைக்காவில் நிலம் வாங்கி முதலீடு செய்தனர். அட்லாண்டிக்கின் இரு புறங்களிலுமுள்ள நிலங்களை பல்கலைக்கழகங்களுக்கு வழங்கியுள்ளனர். பார்படோஸிலுள்ள பெரும்பான்மையான நிலங்கள் இன்றும் டிராக்ஸ் ஹால் குடும்பத்தினருக்கே சொந்தமாக உள்ளது. பிரிட்டனிலேயே நாடாளுமன்ற உறுப்பினரான ரிச்சர்ட் டிராக்ஸ்தான், அதிக நிலம் வைத்திருக்கும் பணக்கார ஆசாமி.  பார்படோஸில் 2,85,000 பேர் வாழ்கிறார்கள். இங்கு மக்களின் வாழிடமும், மக்களும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாக இருக்கின்றனர்.

2021ஆம்ஆண்டு எஸ்தர் பிலிப்ஸ், பகிரங்க கடிதம் ஒன்றை ரிச்சர்ட் டிராக்ஸிற்கு எழுதினார். அதில், கறுப்பின அடிமை மக்கள் மூலம் சம்பாதித்த பணத்தை அந்த மக்களுக்கு திரும்ப கொடுக்க வலியுறுத்தியிருந்தார். பார்படோஸ் டுடே  என்ற பத்திரிகையில் தலைப்புச்செய்தியாக கடிதம் வெளியானது. டிராக்ஸ் ஹால் பகுதியில் அருங்காட்சியகமும், வேளாண்மை பள்ளியும் அமைக்கப்பட வேண்டும் என்பது பிலிப்ஸின் ஆசை. ரிச்சர்ட் டிராக்ஸ் பிலிப்ஸின் கடிதத்திற்க்கு பெரிதாக வளைந்து கொடுக்கவில்லை. வெளிப்படையாக கருத்தும் தெரிவிக்கவில்லை.

பார்படோஸிற்கு 4,50,000 பேர் அடிமையாக கொண்டு வரப்பட்டுள்ளனர். அதில் உயிரோடு கடைசி வரை இருந்தவர்கள் 3,75,00 பேர்தான். பிலிப்ஸ் தனது முன்னோர்கள் எங்கு புதைக்கப்பட்டிருப்பார்கள் என பார்படோஸில் ஆய்வு செய்திருக்கிறார். ஆனால், சரியான இடத்தை அவரால் கண்டறிய முடியவில்லை. தற்போது இங்கிலாந்தில் உள்ள பிலிப்ஸ், கறுப்பின மக்களுக்கான இழப்பீடு என்ற கொள்கையை எதிர்த்து வந்தார். ஆனால், இப்போது அக்கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். கரீபிய நாட்டில் வாழ்ந்த அடிமை பெண்களைப் பற்றிய ஆய்வு செய்து வருகிறார்.

இரண்டாம் உலகப்போரில் நாஜிகளின் கொடுமை வெளியே  தெரிந்தபிறகுதான் உலகம் முழுக்க மனிதநேய உதவிகள் வழங்குவது பற்றிய சட்டங்கள் உருவாயின. 1815ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகள் வியன்னாவுடன் அடிமை முறையை ஒழிக்கும் ஒப்பந்தத்தை செய்துகொண்டது. ஆனால் அதை செயல்படுத்தவில்லை. உலகளவில் நடைபெற்ற அடிமை வணிகம், அதனால் ஏறபட்ட உளவியல் பாதிப்பு என கணக்கிட்டால் 101.4 டிரில்லியன் டாலர்களை மேற்கு நாடுகள் கறுப்பின மக்களுக்கு கொடுக்கவேண்டும். இதில் பார்படோஸின் பங்கு 3.5 ட்ரில்லியன் டாலர்களாகும்.  இந்த தொகையை அமெரிக்காவைச் சேர்ந்த பிராட்டில் என்ற பொருளாதார அமைப்பு கணக்கிட்டுள்ளது.  

 

ஜேனல் ரோஸ்

டைம் வார இதழ்


கருத்துகள்