வாழ்வின் இயல்போட்டத்தில் தன்னை அறிதல் - யதி - தத்துவத்தில் கனிதல்

 







நித்ய சைதன்ய யதி



யதி

தத்துவத்தில் கனிதல்

ஜெயமோகன், பாவண்ணன், எம்.கோபாலகிருஷ்ணன், நிர்மால்யா

தன்னறம் வெளியீடு

 

ஈழவ சமூகத்தைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதி நாராயண குரு. இவரின் சீடரான நடராஜ குருவின் மாணவர்தான் நித்ய சைதன்ய யதி. தத்துவம் சார்ந்த கல்வி கற்றுள்ளவரான இவர், இந்தியாவில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.

நூலில் யதி தன்னுடைய வாழ்பனுவங்களையும், தத்துவங்களையும் விளக்கி பேசுகிறார். இந்த நூலில் உள்ள கட்டுரைகளை ஜெயமோகன், பாவண்ணன், எம், கோபாலகிருஷ்ணன், நிர்மால்யா ஆகியோர் மொழிபெயர்த்துள்ளனர்.

யதி, தனது குருவான நடராஜரிடம் கற்ற கல்வி, அவருக்கும் தனக்குமான ஊடல் கொண்ட உறவு ஆகியவற்றைப் பற்றி சுவாரசியமாக விளக்கி எழுதியுள்ளார். சிறுவயதிலேயே ஏதோ நாளிதழில் வந்த நடராஜ குருவின் புகைப்படத்தை வெட்டி எடுத்து வைத்திருந்திருக்கிறார். பின்னாளில் யதி, நடராஜரின் மாணவராக இணைகிறார். இவரும் இன்னும் இரண்டு மாணவர்களும் சேர்ந்து நாராயண குருகுலத்தை மேம்படுத்துகின்றனர். குருவின் கொள்கைகளை உலகம் முழுக்க பரப்ப இதழ் நடத்தியதோடு, பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளனர்.

யதி, மலையாளம், ஆங்கிலம் என இருமொழிகளிலும் மொத்தமாக நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

விவேகானந்தா கல்லூரி எப்படி பிராமணர்களால் கட்டுப்படுத்தப்பட்டது, சாதி வெறி காரணமாக பேராசிரியராக இருந்த யதி வெளியேற்றப்பட்டதைப் பற்றி அவரே பதிவு செய்துள்ளதை அறியும்போது வேதனையாக உள்ளது. கல்வி கற்கும் நிறுவனத்திற்கு நாராயண குருகுலத்தைச் சேர்ந்த நடராஜர் வந்ததை காரணம் காட்டி யதி கேள்வி கேட்கப்பட்டு பிறகு பணிவிலக்கம் செய்யப்படுகிறார்.

இதைப்பற்றி யதி கோபம் கொண்டாலும் நடராஜகுரு யதி தன்னோடு இருந்தால் போதும் என்ற நோக்கத்தில் கோபம் கொள்ளளவேண்டாம் வேண்டாம் விட்டுவிடு என்று கூறிவிடுகிறார்.

நடராஜ குரு, மனிதர்களை நம்புவது பற்றிய கருத்தை சம்பவமாக யதி விவரித்துள்ளார். அதாவது, ரயிலில் சிறுவன் நடராஜ குருவிடம் உணவு யாசிப்பது. அடுத்து பழங்குடி சிறுவன் ஒருவனை சந்தித்து அவனது உதவியைப் பெற்று குரங்குகளை மிரட்டுவது.

ஆன்மிக நூல்களை குறிப்பாக கோட்பாட்டு நூல்களை விலாவாரியாக விவரித்து அனுபவங்களை பகிர்வது கடினம். எனவே, நீங்கள் படித்து அதை நீங்களாகவே மனதில் செரித்து பார்த்து புரிந்துகொள்ளவேண்டும்.

எழுத்தாளர் ஜெயமோகன், தன்னுடைய குருவாக வரித்துக்கொண்டவர் நித்ய சைதன்ய யதிதான். அவரது அனுபவத்தில் யதி இன்னும் மேம்பட்டவராக இருக்கிறார். நடராஜகுரு, யதி என இருவருக்குமே பக்கவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கான காரணமாக நடராஜகுரு கூறும் கருத்துகள் முக்கியமானவை. நோயை கடவுளின் மொழி  என கூறியிருப்பது ஆச்சரியகரமானது. பயணத்திற்க்கான திட்டமிடலில் நடராஜகுரு இருக்கிறார். அதை ஒருமுறை நண்பரின் வீட்டில் விருந்து சாப்பிடும்போது சொல்லுகிறார். அப்போது யதி அவரை பணம் இல்லாமல் பயணம் செய்வது எப்படி முடியும் என எள்ளலாக கேட்கிறார். அதற்கு, குரு செடியில் புதிய இலைகள் தளிர்க்கும்போது தனக்கான இடத்தைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டு இருக்குமா என்ன என்கிறார். பிறகு, குருவுக்கு விருந்து அளித்தவரே ஐரோப்பிய பயணத்திற்கான தொகையைக் கொடுத்தார் என்பதே வேறு கதை.

வாழ்க்கை அதன் போக்கில் செல்வது. அதை தடைபடுத்தாமல் அப்படியே செல்வதை குரு எவ்வளவு எளிமையாக கூறுகிறார் அல்லவா? நூலில் உள்ள நிறயை கருத்துகளை வாசிக்கும்போது நாம் வாழ்கின்ற வாழ்க்கையை நாம் மறுபரிசீலனை செய்துகொள்வோம். அப்படி ஒரு தாக்கத்தை நூல் ஏற்படுத்துகிறது.

கோமாளிமேடை டீம்




https://www.commonfolks.in/books/d/yathi-thaththuvaththil-kanithal

https://www.amazon.in/%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-Thaththuvathil-Kanithal/dp/B093H5DJ27


கருத்துகள்