மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் - தீக நிகாயம் - பௌத்த மறைநூல்

 






தீக நிகாயம் நூல் அட்டை



தீக நிகாயம்

பௌத்த மறைநூல்

மு கு ஜெகந்நாத ராஜா

தமிழினி

விலை ரூ.140


பாலி மொழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்திருக்கிறார் ஆசிரியர். இதனால் நூல் முக்கியத்துவம் பெறுகிறது. பாலி மொழியில் உள்ள சொற்கள், சமஸ்கிருத மொழியில் உள்ள சொற்களைப் பற்றி முன்னமே விவரித்துவிடுகிறார்கள். இதனால் நூலை படிக்கும்போது பெரிதாக தடுமாறவேண்டியதில்லை.

புத்தர் கூறியது என நிறையப் பேர் எழுதுவார்கள். ஆனால் இந்த நூல் இப்படியாக கேட்டிருக்கிறேன் என்று சொல்லி எழுதப்பட்டுள்ளது. அந்த வகையில் பௌத்த மறைநூல் என கூறியதற்கு ஏற்பவே உள்ளது. மோசமில்லை.

சமண புத்தர் ஓரிடத்தில் தனது சீடர்களோடு அமர்ந்திருக்கிறார். அங்கு அவரைப் பார்க்க பல்வேறு மன்னர்கள், விவசாயிகள், பிராமணர்கள், குறு நில மன்னர்கள், பிற சமயங்களை கடைபிடிக்கும் ஆட்கள் வருகிறார்கள். அங்கு வந்து கேள்விகளைக் கேட்கிறார்கள்.

இந்த முறையில் புத்தர் ஏராளமான சூத்திரங்களை வரிசையாக சொல்லிக்கொண்டே வருகிறார். அவர் கூறும் உபதேசங்களை மனம் ஒன்றிக் கேட்டு தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொண்டது போலவே வாசகர்களும் மனம் ஒன்றிப் படித்தால்தான் புத்தரின் கருத்துகள் புரியும்.

ஒருமுறை படித்துவிட்டு கீழே வைத்துவிடும் தன்மை கொண்டதல்ல. எனவே, நூலை பொறுமையாக படித்தால்தான் புத்தரின் கருத்துகளைப் புரிந்துகொள்ள முடியும்.

நூலில் மொத்தம் பதினைந்து சூத்திரங்கள் உள்ளன. இது தீக நிகாயம் என்ற நூலின் முதல் பாகம்தான்.

நூலில் பல்வேறு சீர்திருத்த கருத்துகளை கூறியுள்ளதோடு யார் பிராமணன், சாதாரண மக்களின் இயல்பு, திருமணத்திற்கு அடிப்படையாக கருதவேண்டியவை எவை, நிர்வாணம் அதாவது ஞானம் அடைவதற்கு தேவையானவை எவை, ஆன்மா, கடவுள், நிலையான உலகம் பற்றிய கேள்விகள் ஏன் அநாவசியமானவை என்பதைப் பற்றி விளக்கும் பகுதி நன்றாக உள்ளது.

உடைகளல்ல, குலமல்ல குணத்தாலேயே ஒருவன் உயர்கிறான். துறவியாகி ஞானம் பெறுகிறான் என பொட்டாபத சூத்திரத்தில் விளக்குகிறார் புத்தர். மகா சீஹநாத சூத்திரப்பகுதியில் துறவி என்பவர், பகையற்ற உள்ளத்துடன் உயர் ஞானம் பெற்று துறவியாவதை சுட்டிக்காட்டுபவர், துறவிக்கான அடையாளங்கள், உணவு முறை மூலம் ஒருவர் துறவி ஆவதில்லை என்பதை தீர்க்கமாக கூறியுள்ளார்.

புத்தருக்கான சிந்தனைகளை முழுமையாக படிக்க நினைத்தால் தீக நிகாயம் உங்களை ஏமாற்றாது. நிச்சயம் இந்த நூல் உங்களுக்கு பௌத்தம் பற்றி சிறந்த அறிமுகமாக இருக்கும.

கோமாளிமேடை டீம்

 

 

 

 

 

 


கருத்துகள்