ஊபா சட்டத்தில் குற்றத்தை நிரூபிக்க முடியாமல் தடுமாறும் ஒன்றிய, மாநில அரசுகள்!

 



 

 

ஊபா சட்டத்தில் குற்றத்தை நிரூபிக்க முடியாமல் தடுமாறும் ஒன்றிய, மாநில அரசுகள்!

ஒன்றிய, மாநில அரசுகள் தங்கள் மீது விமர்சனங்களை முன்வைக்கிற, தலித், ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்கு பாடுபடுகிற போராளிகள் மீது பல்வேறு வழக்குகளை தொடுத்து வருகின்றன. அதில் முக்கியமானது பயங்கரவாத சட்டமான ஊபா. இச்சட்டத்தைப் பற்றி இடதுசாரி கட்சிகள் அளவுக்கு, அதிகம் பேசியவர்கள் யாரும் கிடையாது. அவர்களின் நாளிதழ், ஊடகங்கள் அனைத்திலும் ஊபா சட்டம் பற்றிய செய்திகள் இன்று வரைக்கும் வெளியாகி வருகின்றன.

ஊபா என்பது சட்டவிரோத செயல்பாடுகளைத் தடுக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட சட்டம். எப்போதும்போல, அரசியல் கட்சிகள் இதை தம் சொந்த சுயநலனுக்கு பயன்படுத்திக்கொண்டு மனித உரிமை போராளிகளை, திட்டங்களை கேள்வி கேட்பவர்களை சிறையில் அடைக்க பயன்படுத்துகின்றன. பெரும்பாலும் இந்த வழக்குகளில் குற்றங்களை நிரூபித்து தண்டனை வாங்கித்தருவதற்கு அரசு புலனாய்வு அமைப்புகள் விரும்புவதில்லை. இதனால் வழக்குகளில் இருந்து வெளியே வருபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அரசுகள், ஒருவரை உளவியல் ரீதியாக அச்சுறுத்தவே இதுபோன்ற அடக்குமுறை சட்டங்களைப் பயன்படுத்துகின்றன.

2014ஆம் ஆண்டு தொடங்கி 2022 ஆண்டு வரை 8,719 வழக்குகள் ஊபா சட்டப்பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தண்டனை கிடைத்தது 215 வழக்குகளில் மட்டுமே. 567 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊபா சட்டத்தை முன்னமே கூறியபடி ஒன்றிய, மாநில அரசுகளின் புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்துகின்றன. இதனால், மொத்தமாக பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கை கூடுகிறது. அரசு அமைப்புகள், வழக்கு பதிவு செய்வதில் காட்டும் வேகத்தை, வழக்கு தொடர்பான ஆவணங்கள், ஆதாரங்களை சேகரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க காட்டுவதில்லை. உடனடி நீதியாக புகார் கூறப்பட்டவர்களை பிடித்து சிறையில் அடைத்து தண்டனை வழங்கத் தொடங்கிவிடுகிறார்கள். வழக்கு விசாரணை எப்போது நடக்கும், பிணை கிடைக்குமா என்பது இந்து குடியரசு நாட்டில் கேட்கப்படவேண்டிய கேள்வியா என்ன? 2022ஆம் ஆண்டில் ஊபாவில் குற்றம்சாட்டப்பட்ட 153 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2014ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து பெறப்பட்ட தகவல்களில் 2022ஆம் ஆண்டிலேயே அதிக நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எங்கு பிரச்னை உருவாகிறது என்று விசாரித்தால், நேர்மையாக, துல்லியமாக விசாரிப்பது, ஆதாரங்களைத் திரட்டுவது என்பது மாநில புலனாய்வுத்துறையில் பரவலாக இல்லை என மத்திய புலனாய்வு அதிகாரிகள் புகார் சொல்கிறார்கள். ஊபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்படுபவர்களுக்கு, அவர்கள் ஒருவேளை கொல்லப்பட்டாலும் கூட வெளிநாடுகளில் தொடர்பு இருப்பது அறியப்பட்டால் அதை நிரூபிப்பது என்பது கடினமான பணி. ஒன்றியம், மாநிலம், யூனியன் பிரதேசம் என இவற்றிலுள்ள அனைத்து அதிகாரிகளும் இப்பணியை எளிதாக எடுத்து செய்ய முடியாது. எளிமையாக சொன்னால் புலனாய்வுத் தொழிலில் நிபுணத்துவம் தேவைப்படுகிறது. அரசியல் காழ்ப்புணர்வால், விமர்சனங்களை ஒழித்துக்கட்ட வழக்கும் போடுபவர்களிடம் இப்படியான திறன்கள் குறைவாக உள்ளன.  

ஒன்றியத்திலுள்ள பெரும்பாலான உள்நாட்டு, வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள், அரசியல் பழிவாங்குதல் பணிக்கே பயன்படுத்தப்படுவதால் வழக்குகள் வேகமாக தொடுக்கப்படுகின்றன. ஆனால், அதை விசாரிக்க அவர்களுக்கு நேரமிருப்பதில்லை.  நீதிமன்றத்தில் சமர்பிக்கும் ஆதாரங்கள் பின்னரே நிதானமாக திரட்டப்படுவதால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர், விரைவில் விடுவிக்கப்பட்டு விடுகிறார். குற்றம் சாட்டப்படுபவர், வழக்குரைஞர்களை நாடுவார். ஆனால், வழக்கு தொடுக்கும் ஒன்றிய அரசு, வழக்கில் வெல்ல தீர்ப்பளிக்கும் நீதிபதிகளை சகாய விலைக்கு வாங்கிவிடுவதால், எதிர்காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.  
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - முகேஷ் ரஞ்சன்

தமிழாக்க கட்டுரை
தீரன்
#UAPA #acquittal #conviction #NIA #state #central #probe #evidence #terror #chargesheet #failed #politics #religion #unlawful activities #law enforcement    

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்