இந்தியாவில் கிறித்தவத்தின் எதிர்மறை செயல்பாடுகள்! - சிலுவையின் பெயரால் - ஜெயமோகன்

 









சிலுவையின் பெயரால்….

ஜெயமோகன்

கிழக்குப் பதிப்பகம்

 

ஜெயமோகன், அவரது வலைத்தளத்தில் கிறித்தவம் பற்றி எழுதிய கருத்துகளும் அதற்கு எதிர்வினையாக வந்த பல்வேறு வாசகர்களின் கருத்துகள், அதற்கு பதில் அளித்த எழுத்தாளரின் கருத்துகள் என அனைத்துமே சேர்ந்து தொகுக்கப்பட்டுள்ளது.

நூலில், ஜெயமோகன் விரிவாக கிறித்தவம் தன்னை இந்தியப் பண்பாட்டிற்கு ஏற்ப எப்படி மாற்றிக்கொள்ள முயல்கிறது என கூறியுள்ளார். ஏறத்தாழ சிறில் அலெக்ஸ், அரவிந்தன் நீலகண்டன் ஆகியோரின் எதிர்வினைகளும் அதை எப்படி ஜெயமோகன் எதிர்கொள்கிறார் என்பதையும் வாசிக்கும்போது நமக்கு கிறித்தவம் பற்றிய புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளள முடிகிறது.

பெந்தகொஸ்தே சபையின் அரசியல், தமிழில் கிறித்தவத்தை பரப்புபவர்கள் அதற்கு செய்யும் அநீதியான செயல்கள், இலக்கியவாதிகளை பணம் கொடுத்து வளைப்பது, அதற்கென போலித் தகவல்களைக் கொண்ட நூல்களை எழுதுவது என நிறைய செயல்களை நூலெங்கும் பட்டியலிடுகின்றனர்.

 ஒருவகையில் இந்த நூல் கிறித்தவ அடிப்படை மதவாத தன்மையை வெளிச்சம்போட்டு காட்ட எழுதப்பட்டதோ என தோன்றுகிறது. அல்லது இந்தியாவிற்கு விரோதமான அந்நிய மதம் என்று கூற வருகிறார்களோ என சிலசமயங்களில் சந்தேகமே எழுகிறது.

நூலில் இரண்டாவது அத்தியாயமாக எழுதப்பட்ட அல்போன்சம்மாள் பற்றிய கட்டுரை, வாசிக்கும் கட்டுரைகளில் சற்று ஆறுதலும் நேர்மறையாக தன்மையையும் தருகிறது. புனித ஜானின் கவிதைகளைப் படிக்கும்போது மனம் சற்று அமைதி பெறுகிறது.  

கிறித்தவம் பற்றி நேர்மறையாக எழுதப்பட்ட விஷயம் என்றால் அது அல்போன்சம்மாள் பற்றியும், சிரியன் கிறிஸ்தவர்கள் பற்றியதும்தான். மற்றபடி அவர்களை பூதம், பிசாசு போல மாற்றிக்காட்டுவதை அரவிந்தன் நீலகண்டன், ஜெயமோகன் சித்தரிப்புகள் மெல்லச் செய்கின்றன. இந்த நூலை கிழக்கு பதிப்பகம் ஏன் வெளியிட்டுள்ளது என்பதன் காரணத்தையும் இதன் மூலம் எளிதாக அறிந்துகொள்ளலாம்.

தோமா, புனித ஜான், அல்போன்சம்மாள், இந்திய கலாசார விஷயங்களை எப்படி கிறித்தவம் தனது செயல்பாட்டிற்குள் கொண்டு வந்தது என அறிய நினைத்தால், நீங்கள் நூலை வாசிக்கலாம். ஜெயமோகனுக்கு எழுதப்பட்ட கடிதங்களில் சிறில் அலெக்ஸ் எழுதியுள்ளவை, வாசிக்க நன்றாக இருக்கிறது. நிறைய தகவல்கள் உள்ளன.

சிலுவையின் பெயரால் நூலில் உள்ள கருத்துகளை, வாசகர்களே சோதித்து அறிந்துகொள்வதுதான், அதிலுள்ள உண்மையை அறியும் ஒரே வழி. ஏனெனில் பெரும்பாலும் இந்த நூலை படிப்பவர்கள் கிறித்தவத்தை எதிர்மறையாக தவறாக புரிந்துகொள்ளவே வாய்ப்பு அதிகம்.

கோமாளிமேடை டீம்

கருத்துகள்