ஆசிரியர் வேலையா, வேண்டவே வேண்டாம் என பதறும் அமெரிக்க மாணவர்கள்!

 









அமெரிக்காவில் ஆசிரியர் வேலையை கைவிடும் தலைமுறையினர்!

அமெரிக்காவில் ஆசிரியர் தொழிலை கையில் எடுத்து பணியாற்றும் ஆட்கள் படிப்படியாக குறைந்து வருகிறார்கள். இதற்கு முக்கியமான காரணங்கள் என பள்ளியில் நடைபெறும் துப்பாக்கிச்சூடு, குறைந்த சம்பளம், அதிகவேலை ஆகியவற்றைக் காரணமாக கூறலாம்.

நமது ஊரின் டெலிகிராம், டெய்லிபுஷ்பம் ஆகிய நாளிதழ்களில் வரும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உழைப்பு கதையெல்லாம் அமெரிக்காவில் கூட நடந்து வந்தவைதான். ஆனால், இப்போது அதுபோல எந்த மாணவரும் பேட்டி கொடுப்பாரா என தெரியவில்லை. ஒரு ஆசிரியரே பல்வேறு பாடங்களை எடுக்க வேண்டியதிருக்கிறது. இன்னொரு ஆசிரியரின் மாணவர்களையும் சேர்த்து பார்க்கவேண்டியதிருக்கிறது என பிரச்னைகள் நீள்கின்றன.

 ஆசிரியர் வேலைக்கு குறைந்தபட்ச சம்பளம் என்பது மாகாணங்களைப் பொறுத்து மாறுபடுகிறது.அது இயல்பான ஒன்றுதான். ஆனால், மாறும் சம்பளம் விலைவாசிக்கு ஏற்றபடி இருக்கிறதா என்றால் இல்லை. ஆண்டுக்கு 48 ஆயிரம் டாலர்கள் என்பது மிக குறைவான சம்பளம். இதை வைத்து ஆசிரியர், அவரது மனைவி, குழந்தை என மூன்று பேர் கொண்ட குடும்பத்தை பசி, பட்டினியின்றி ஓட்டுவதே மிக கடினம்.சில மாகாணங்களில் மேற்சொன்ன சம்பளம் ஆசிரியருகு மிக அதிகம் என முடிவெடுத்து ரேஷனில் அரிசி போடுவது போல ஆண்டுக்கு 14 ஆயிரம் டாலர்கள் தருவது கூட உண்டு. ஆசிரியர், அவரின்  ஒற்றைக் குழந்தை என வாழ்ந்தால் கூட வறுமைக்கோட்டிற்கு கீழே வந்துவிடுவார். அந்த நிலையில்தான் ஆசிரியர்கள் அங்கு மாட்டித் தவிக்கிறார்கள்.

 எனவே, நிலையைப் புரிந்துகொண்ட மாணவர்கள் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேருவதை தவிர்த்து வருகிறார்கள். இதனால் முந்தைய ஆண்டுகளில் 20 ஆயிரம் பேர் சேர்ந்த ஆசிரியர் பயிற்சியில் வெறும் 7 ஆயிரம் பேர்தான் சேர்ந்து கல்வி கற்கின்றனர். இதனால் பல்வேறு மாகாணங்களிலும் ஆசிரியருக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன.

நிரப்ப நினைத்தாலும் யாரும் வருவதில்லை. குறைந்த சம்பளம் என்பதால் பலரும் தவிர்க்கிறார்கள். எனவே, தற்காலிகமாக கிடைக்கும் ஆட்களை வைத்து ஆசிரியர் உரிமமே இல்லாதவர்களை வைத்து பள்ளிக்கூடங்கள் ஒப்பேற்றி வருகின்றன.

கருத்துக்கணிப்பில் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு தேவை என மக்கள் சொன்னாலும் அரசியல் கட்சிகள் அதை ஏற்பதில்லை. ஆசிரியர்களின் சம்பள உயர்வை அதிகாரத்திலுள்ள அரசுகள் இன்னும் பரிசீலிக்கவில்லை.

பள்ளிகளில் நடைபெறும் துப்பாக்கிச்சூடுகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் இறப்பதும் அதிகரித்து வருகிறது. பத்தில் நான்கு ஆசிரியர்கள், இதுபோல சூழலில் வேலை செய்ய பயப்படுகிறார்கள். அமெரிக்காவில் துப்பாக்கி விற்கும் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதி கொடுப்பதால், பைடனோ, டிரம்போ யார் ஆட்சியில் இருந்தாலும் துப்பாக்கிச்சூடு பற்றி எதையும் பேசமாட்டார்கள். கொடுத்த காசு பேசுகிறது. வாங்கிய காசுக்கு விசுவாசமாக அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இதுபோன்ற சூழலால் மாணவர்கள், பெற்றோர்கள் பதற்றமுறுகிறார்கள். அவர்களின் கோபத்தை ஆசிரியரே எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது.

பள்ளி, கல்லூரிகளுக்கு அமெரிக்க அரசு இதுவரை வழங்கிய மானியங்களை நிறுத்திக்கொண்டுவிட்டது. இதனால், மாணவர்களின் கல்விக்கட்டணம் கடந்த பத்து ஆண்டுகளில் இருபது சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால், ஆசிரியர்களின் சம்பளம் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. இதன் உச்சமாக அமெரிக்காவைச் சேர்ந்த தொடக்க பள்ளி ஆசிரியர், டிக்டொக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில். தான் பள்ளி ஆசிரியராக வேலை செய்தேன். ஆனால், அந்த வேலையை விட்டு விலகப்போகிறேன் என்றவர். வால்மார்டில் ஸ்டோர் மேனேஜராக இருப்பவர் தன்னை விட 50 சதவீதம் அதிகம் சம்பாதிக்கிறார். இத்தனைக்கும் அவர் படித்த டிகிரியை பயன்படுத்தவில்லை என குமுறலோடு பேசியிருந்தார்.

எஸ்தானியா, ஃபின்லாந்து, ஹாங்காங், ஜப்பான், போலந்து, சிங்கப்பூர், சீனா, தைவான், கொரியா ஆகிய நாடுகளில் கல்வி சிறப்பாக உள்ளது. அறிவியல் துறைகளான கணிதம், அறிவியலில் அமெரிக்காவின் செயல்பாடு கடைசி புள்ளிகளைக் கொண்ட நாடாக வந்துவிட்டது.துயரமான நிலைதான் அல்லவா?

கட்டுரை ஆசிரியர்களைப் பற்றியது என்றாலும் அமெரிக்க மாணவர்களின் எதிர்காலமே வீணாகப்போகிறது. பொருளோ, மனிதரோ அதிக காலம் பயன்படுத்தாமல் இருந்தால் வீணாகிவிடும். மாணவர்களிடம் உள்ள திறமையை ஆசிரியர்தான் கண்டறிந்து ஊக்கப்படுத்துகிறார். அப்படி ஊக்கப்படுத்தும் மனிதரே குறைபாடாக மாறும்போது, சரியானவராக இல்லாமல் போகும்போது மாணவர்களின் நிலை என்னவாகும்?

புதிய  கண்டுபிடிப்புகள், காப்புரிமைகளை ஒரு நாடு பதிவு செய்யாத நிலையில் அந்த நாட்டின் வளர்ச்சி பின்னடைவைச் சந்திக்க தொடங்கும். அமெரிக்கா, தற்போது வீழ்ச்சிப் பாதையில் வேகமாக சென்று வருகிறது.

 

ஆர்டி இதழில் ஆதம் பியோ ர் எழுதிய கட்டுரையைத் தழுவியது.

Illustration by Karolis Strautniekas

கருத்துகள்