புலனுணர்வு சார்ந்த வாழ்க்கை அர்த்தம் இல்லாதது, வெறுமையானது - ஜே கிருஷ்ணமூர்த்தி

 







மனிதர்கள் வாழ்வதற்கான பொருள்தான் என்ன? நீங்கள் இதற்கான பதிலைத் தேடாமல் இருக்கலாம். அதை புறக்கணிக்கலாம். இருபது அல்லது முப்பது ஆண்டுகளை செலவழித்து இயற்பியல், தத்துவம், சமூகவியல், உளவியல் என பலவேறு துறை சார்ந்த விஷயங்களைக் கற்கலாம். ஆனால், ஒருநாளை அல்லது ஒரு மணிநேரத்தைப் பயன்படுத்தி நீங்கள் யார், எதற்காக இங்கு வாழ்கிறீர்கள் என்று யோசித்துப் பார்க்க விரும்புவதில்லை.

ஐஐடி பாம்பே

7 பிப்ரவரி 1984

வொய் ஆர் யூ பீயிங் எஜூகேட்டட்?

 

நாம் நமது வாழ்க்கையை வீணடித்துக்கொண்டு இருக்கிறோமா? பல்வேறு தொழில் சார்ந்த துறைகளில் ஒட்டுமொத்த ஆற்றலையும் சிதறடித்துக்கொண்டு இருக்கிறோம் என்ற அர்த்தத்தில் இதைக் கூறுகிறேன். நம் முழு இருப்பையும், வாழ்க்கையையும் வீணடிக்கிறோமா?  நான் நிறைய பணம் சம்பாதிக்கவேண்டும். அதுதான் பெரிய சந்தோஷம். அல்லது உங்களுக்கு உள்ள திறமை என்பது ஒரு பரிசு. அதை ஆன்மிக வாழ்க்கைக்கு பயன்படுத்துவது ஆபத்தானது. எனவே, அதை குறிப்பிட்ட துறையில் பயன்படுத்தலாம் என நினைக்கிறீர்கள். 

குறிப்பிட்ட துறையில் திறமையைப் பயன்படுத்துவது என்பது துண்டுகளாக ஒருவரின் ஆற்றலை சிதறடிப்பது. எனவே நீங்கள் உங்களை உறுதியாக வாழ்க்கையை வீண்டிக்கிறீர்களா என்று கேட்டுக்கொள்ள வேண்டும். நீங்கள் பணவசதி கொண்டவராக இருக்கலாம். அனைத்து வசதிகளையும் பெற்றிருக்கலாம். குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுநராக இருக்கலாம். அறிவியலாளர் அல்லது தொழிலதிபராக கூட இயங்கலாம். ஆனால் இறுதியில் உங்கள் வாழ்க்கை முழுமையாக வீணானதுதானே?

 

பாம்பே

10 பிப்ரவரி 1985

தட் பெனடிக்‌ஷன் இஸ் வேர் யூ ஆர்

 

எதற்காக வாழ்க்கையின் அர்த்தம் தேடி அலைகிறாய்? உன் வாழ்க்கையை வாழலாமே, அழகில்லாததாக, விலங்கு போல சோகமாக, வலியுடன், பதற்றத்துடன், மகிழ்ச்சியாக, பயத்துடன், சலிப்பாக, தனிமையில் உழன்றவராக வாழலாம். ஏனெனில் இதெல்லாமே வாழ்க்கையின் ஒரு பகுதிதான். நீங்கள் இதைக் கடந்து செல்ல முடியாது. வாழ்க்கையை அனுபவிக்க, மகிழ்ச்சியைப் பெறுவதே முக்கியமானது. அதையே, லட்சியமாக்கிக் கொள்ளுங்கள் என உங்களது கலாசாரம் கூறலாம்.

நீங்கள் செய்வதும் கலாசாரம் கூறுவதைத்தான்.

 

சானென்

22 ஜூலை 1973

 

உலகம் முழுக்க மனித இனம் குறைவாகவோ, அதிகமாகவோ அழிவைச் சந்தித்து வருகிறது. தனிப்பட்ட ரீதியாக அல்லது குழுவாகவோ மகிழ்ச்சியைத் தேடும் முயற்சியில் பாதிப்பு நேருகிறது.

உடலுறவு, சொத்துக்கான தேடுதல், ஆர்வத்தூண்டுதல்.  தன்முனைப்பு, அதிகாரம், அந்தஸ்து ஆகியவற்றைத் தேடுவதில் உள்ள மகிழ்ச்சி வாழ்க்கையில் ஒருவருக்கு முக்கியமானதான உள்ளது.

மகிழ்ச்சிக்கான தேடுதலை நிறைவேற்றி அவர் பூரணமடைதலே அழிவுக்கான தொடக்கம். மகிழ்ச்சிக்காக மனிதர்கள், உறவுகளை அமைத்துக்கொள்வதுதான் அழிவு. பொறுப்புகளை மறந்து, பிறரைப் பற்றிய அக்கறையைக் கைக்கொள்ளாமல் வாழ்வது இன்னொரு வடிவிலான அழிவாக மாறுகிறது.

 உயர் வர்க்கத்தினரின் பைத்தியக்காரத்தனம், வணிகத்திலுள்ள நேர்மையின்மை, பேச்சிலுள்ள பொய்கள், முழு வாழ்க்கையிலுமுள்ள துரோகம் ஆகியவை வாழ்க்கையின் மொழியைக் கொன்றுவிடுகிறது. அன்பை தங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்பவர்கள், அழகு மற்றும் வாழ்வின் புனிதம் ஆகியவற்றில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்கிறார்கள்.

எந்தளவுக்கு மகிழ்ச்சியை தேடுகிறோமோ, அந்தளவுக்கு நான் என்ற இயல்பு ஆழமானதாகிறது. மகிழ்ச்சியைத் தேடும்போது, மனிதர்கள் ஒருவருக்கொருவர் தம்மை உடைத்துக்கொள்கிறார்கள்.

 வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டுமே முக்கியமாகும்போது, உறவு என்பது எளிதாக உடைகிறது. இயல்பில் ஒருவருடனான உறவு என்பது உண்மையானது அல்ல. எனவே இங்கு உறவு என்பது மகிழ்ச்சியைத் தேடும்போது வணிகமாகிறது. தேவையை நிறைவேற்றிக்கொள்ளும் மகிழ்ச்சி என்பதில், மகிழ்ச்சி தடைபடும்போது கோபம், வெறுப்பு, துன்புறுத்துதல், கசப்புணர்வு உருவாகிறது. இப்படி விடாமல் மகிழ்ச்சியைத் தேடுவது என்பது பைத்தியக்காரத்தனமேதான்.

தி வோல் மூவ்மென்ட் ஆஃப் லைஃப் இஸ் லேர்னிங் – லெட்டர்ஸ் டு ஸ்கூல்ஸ்

 

உடல் சார்ந்த மகிழ்ச்சியில் மனிதர்கள் எதற்காக மாட்டிக்கொள்கிறார்கள்?  இது, நவீன சமூகத்தில் முக்கியமான பிரச்னையாக உருவாகிவருகிறது. நாளிதழ்கள், திரைப்படம், வார, மாத இதழ்கள் அனைத்துமே உடலுறவு இன்ப தூண்டுதலையே உருவாக்குகின்றன. பெண்கள் உள்ள விளம்பரங்களே உங்களது கவனத்தை ஈர்க்கின்றன.

வெளிப்புறத்திலும், உள்புறத்திலும் பாலியலுக்கான தூண்டுதல் உருவாகிறது. இதற்கு, பொருள், அதிகாரம், பெயர், வர்க்கம் ஆகியவை எல்லாமே முக்கியமானதாகிறது. புலன்சார்ந்த முக்கியத்துவம் வாழ்க்கையை நடத்திச்செல்வதில் ஆதிக்கம் செலுத்தினால், உங்கள் வாழ்க்கை வெறுமை நிறைந்ததாக, ஆழமற்றதாக மாறிவிடும். பணம் சம்பாதிப்பது, சீட்டு விளையாடுவது, திரைப்படத்திற்கு செல்வது, புத்தகங்களை வாசிப்பது என்றே வாழ்க்கை நகரும்.  

தி ரியல் கிரிசிஸ் – ஜே கிருஷ்ணமூர்த்தி

 

கருத்துகள்