அமெரிக்க வருமானத்துறை போல நாடகமாடி மோசடி செய்யும் அக்கா, தம்பி! மோசகல்லு - தெலுங்கு

 




மோசகல்லு - தெலுங்கு






மோசகல்லு

தெலுங்கு

விஷ்ணு, காஜல் அகர்வால், நவ்தீப்

அர்ஜூன், அனு என இருவரும் சேரியில் பிறந்து  வளர்ந்தவர்கள். அக்கா, தம்பி என இருவருக்குமே அதிகளவு பணம் சம்பாதிப்பதே நோக்கம். இதில் அனு, பெண்களுக்கான நகைகளை தானே வடிவமைத்து இணையத்தில் விற்று வருகிறாள். வன்முறையான கணவரை விவாகரத்து செய்யும் மனநிலையில் இருக்கிறாள். அவள் கணவன், அவள் சம்பாதிக்கும் பணத்தை வீடு தேடி வந்து அடித்து உதைத்து பறித்து செல்கிறான்.

அர்ஜூன், கால் சென்டர் ஒன்றில் வேலை செய்கிறான். அமெரிக்க நாட்டிற்கு பல்வேறு சேவைகளை வழங்குவதே  அவனது கம்பெனி நோக்கம். அதேநேரத்தில் அவன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி அதை டார்க் வெப்பில் விற்று பணம் சம்பாதித்து வருகிறான். இதை அவனது கம்பெனி முதலாளி கவனிக்கிறார். அவனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக சம்பாதிக்க திட்டம் தீட்டுகிறார்.

ஆனால் அதை அவரால் எப்படி என கூற முடியவில்லை. அர்ஜூன், ஐஆர்எஸ் என அமெரிக்க வருமானத்துறை பற்றிய ஐடியாவைக் கொடுக்கிறான். அதை வைத்து சம்பாதிக்க தொடங்குகிறார்கள். அமெரிக்க மக்களுக்கு போன் செய்து அவர்கள் வரியைக் கட்டவில்லையென்றால் சிறைக்கு செல்லவேண்டும் என மிரட்டுகிறார்கள். இப்படி மிரட்டியே சம்பாதித்து ஜெமினி டெக் என நிறுவனமாக வளர்கிறார்கள். இந்த நிறுவனத்தில் கணக்கு பார்க்கும் நிர்வாகியாக அனு செயல்படுகிறார்கள். கம்பெனி வளர அர்ஜூனின் ஐடியா உதவுகிறது. அனு, அதை நிலைப்பெற்றதாக மாற்றுகிறாள்.

அமெரிக்க அரசிற்கு இந்த மோசடி தெரியவருகிறது. ஆனால் அதை எப்படி தடுக்கிறது என தெரியவில்லை. ஜெமினி டெக்கிலுள்ள ஒரு பெண்ணே இதற்கான தகவல்களைக் கொடுத்து உதவிகளை செய்கிறாள். இதன்மூலம் அர்ஜூனை பிடிக்க, ஹைதராபாத்திலுள்ள காவல்துறை அதிகாரி முயல்கிறார். அவர் அவனை பிடித்தாரா, இல்லையா என்பதே கதையின் இறுதிக்காட்சி.

எவன் வாழ்கை அழிந்தாலும் பரவாயில்லை. நான் பணம் சம்பாதிக்கவேண்டும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்ற மனநிலை கொண்ட நாயகன், கடைசி வரை அப்படியேதான் இருக்கிறார். கூடவே அவரின் அக்காவும் தம்பியால் சில முறை மனதளவில் காயம்பட்டாலும் அவனை விட்டுக்கொடுப்பதில்லை. இருவருமே மோசடியை அப்படியே தொடர்கிறார்கள். படம் அப்படித்தான் நிறைவடைகிறது. இதில் பெரிய ஆச்சரியம் ஏதுமில்லை.

ஐயையோ

படத்தின் இயக்குநரும், எடிட்டரும் பொங்கல் சாப்பிட்டுக்கொண்டே எடிட்டிங் செய்திருப்பார்கள் போல. டிராமா, சண்டை, உணர்ச்சிகரமான என அனைத்து காட்சிகளும் என்னமோ போடா மாதவா என்ற வகையில்தான் நகர்கிறது. எதிலும் முழுமை இல்லை. நாயகனின் வாழ்க்கையோடு பார்வையாளர் தன்னை இணைத்துக்கொள்ளும் ஒரு காட்சி கூட இல்லை. பரிதாபம்தான்.

அர்ஜூன், அனு ஆகியோருக்கு இடையிலான உறவைக் கூறும் காட்சிகளும் சிறப்பாக இல்லை.

சீக்கிய போலீசாக சுனில் ஷெட்டி நடித்திருக்கிறார். அவர் இந்த படத்தில் என்ன பங்களிப்பு செய்கிறார் என்றால் ஒன்றுமில்லை. எதற்கு சீக்கிய வேடம் என்றால் யாருக்கும் தெரியவில்லை. அமெரிக்காவில் இருந்து நேரடியாக ஒருவர் எப்படி ஹைதராபாத் போலீஸ் அதிகாரிக்கு ஒரு வழக்கு பற்றி சொல்லி விசாரிக்க கோர முடியும்?  வரியைக் கட்டவில்லை என்றால் வருமான வரித்துறை அதை விசாரிக்கும். ஆனால் இங்கே சுனில் ஷெட்டி, வரி கட்டாத நிறுவனத்தின் இயக்குநரை, நிறுவனத்திற்குள் புகுந்து அடித்து உதைக்கிறார்.

ஒருவர் வெளிநாட்டுக்கு விமானம் மூலம் தப்பிச்செல்கிறார் என்றால் அதற்கு எப்படி தடையாணை வாங்குவது என்று கூட தெரியாமல் இயங்குகிறார். பரிதாபம் என்பதை விட விரக்தியாக இருக்கிறது.

வோல்ஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட் மாதிரி வரவேண்டிய கதை. மோசமான திரைக்கதை, காட்சியமைப்புகளால் சுமாராக கூட தேறவில்லை.

மோசடி செய்யப்பட்டது பார்வையாளர்கள்தான்.

கோமாளிமேடை டீம்

நன்றி  - யூட்யூப்

கருத்துகள்