பூச்சிகளுக்கு உணர்ச்சிகள் உண்டா?

 








பூச்சிகளுக்கு உணர்ச்சிகள் உண்டா?

தேனீகளுக்கு உணர்ச்சிகள் உண்டு. அவை உயர்ந்தும் தாழ்ந்தும் மாறுகின்றன. இதில் சில பொம்மைகளோடு விளையாடும் இயல்பு கொண்டுள்ளன. கரப்பான் பூச்சிகளுக்கு ஆளுமைகள் உள்ளன. பழ ஈக்களுக்கு பய உணர்வு உள்ளது ஆகிய உண்மைகள், பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளில் தெரிந்துள்ளது.

பூச்சிகளுக்கு உணர்ச்சிகள் உள்ளது என்பது புதிய சிந்தனை கிடையாது. 1872ஆம் ஆண்டு, சார்லஸ் டார்வின்  பூச்சிகளுக்கு பயம், பீதி, பொறாமை, காதல் ஆகிய உணர்ச்சிகள் உண்டு என்று கூறியுள்ளார். இப்போதுவரை பூச்சிகளின் மூளையில் என்ன சிந்தனை ஓடுகிறது என கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், நரம்பியல் ஆய்வாளர்கள், தத்துவவாதிகள் இந்தக்கருத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு சயின்ஸ் இதழில் அறிவியல் கட்டுரை ஒன்று வெளியானது. அதில் கட்டுரையாளர்களான ஃபிரான்ஸ் டே வால், தத்துவ பேராசிரியர் கிரிஸ்டன் ஆண்ட்ரூஸ் ஆகிய இருவரும் பூச்சிகளுக்கு உணர்வுகள் இருப்பது உண்மையென்றால், அவைக்கு குண இயல்புகளும் உண்டு என அர்த்தமாகிறது என கூறியிருந்தனர். மனிதர்கள் என்றால் அவர்கள் மனதில் நினைப்பது என்ன என்று கூற வாய்ப்புள்ளது. மனிதர்களல்லாத விலங்குகள் எப்படி தங்கள் நிலையை கூறமுடியும்? இதில் மனித இனத்தின் குழந்தைகளும் சேர்வார்கள். அவர்களும் கூட தங்களது உணர்வுகளை நேரடியாக கூற முடியாத சூழலில்தான் இருக்கிறார்கள். பின்னாளில்தான் பேச ஆரம்பித்து, மொழியைக் கற்று உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள் அல்லவா?

குழந்தைகளுக்கு அனஸ்தீசியா இல்லாமல் அறுவை சிகிச்சை செய்தபோது அவர்கள் வலியை உணர்ந்தார்கள். ஆனால் அதை வெளியில் பிறருக்கு கூற முடியவில்லை. இந்த உண்மை 1980ஆம் ஆண்டுதான் பலருக்கும் தெரிய வந்தது. இதை டே வால், ஆண்ட்ரூஸ் ஆகிய இருவரும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

உலக நாடுகள் விலங்குகள் மீது நடத்தப்படும் சோதனைகளை மெல்ல தடுத்து நிறுத்த தொடங்கின. 2015ஆம் ஆண்டு சிம்பன்சிகள் மீது நடத்தப்பட்ட சோதனைகளுக்கு அமெரிக்க தடை விதித்தது. அதற்கு முன்பே, மனிதக்குரங்ககளை ஆராய்ச்சிக்கு பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருந்தது. இந்த வகையில் இறால், நண்டு, ஆக்டோபஸ்களை இங்கிலாந்து அரசு, அங்கீகரித்தது. ஆனால் பூச்சிகள் இன்னும் இந்த வகை பட்டியலில் வரவில்லை.

 

ஆண்ட்ரூ பேரோன், ஆஸ்திரேலியாவில் உள்ள மேக்குவாரி பல்கலைக்கழகத்தில் விலங்குகளின் குண இயல்புகள் பற்றி ஆய்வு செய்து வந்தார். இவர், தனது சக ஆராய்ச்சியாளர்களோடு இணைந்து தேனீயின் மூளை பற்றி ஆராய்ச்சி செய்து வந்தார்.

2016 ஆம் ஆண்டு ஆண்ட்ரூவும், ஆஸ்திரேலியா தேசிய பல்கலைக்கழக நரம்பு அறிவியல் தத்துவவியலாளரான கோலின் கிளெய்ன் ஆகியோர் இணைந்து தேனீயின் மூளையில் உணர்வுகள் உள்ளது என ஆய்வறிக்கை ஒன்றை எழுதி வெளியிட்டனர்.

இவர்களது ஆராய்ச்சி ஸ்வீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பிஜோர்ன் மெர்க்கர் என்பவரின் ஆய்வை அடியொற்றியது. இவர் பூச்சிகளின் தன்னுணர்வுநிலை அதன் மூளையிலுள்ள கார்டெக்ஸ் பகுதியில் இல்லை. சப்கார்டல் பகுதியில் உருவாகுவதாக ஆராய்ந்து கூறினார். இந்த அமைப்பு அப்படியே மனிதர்களைப் போன்றது என மெர்க்கர் கருதுகிறார். மனிதர்களைப் போன்றே பரிணாமவளர்ச்சி அடைந்து உருவாகியுள்ளது என்பது ஆராய்ச்சி முடிவு கூறும் செய்தி.

 

அவெரி ஹர்ட்

டிஸ்கவர்

wikimedia

கருத்துகள்