தொட்டால் குற்றங்களைக் கண்டுபிடித்துவிடும் இளைஞனின் அபூர்வ சக்தி!

 





ஹீ ஈஸ் சைக்கோமெட்ரிக்






ஹீ ஈஸ் சைக்கோமெட்ரிக்

கே டிராமா

ராக்குட்டன் விக்கி ஆப்

 

பள்ளியில் படிக்கும் லி ஆன், அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் இறந்துபோனவர்களை சோதிக்கிறான். அவனால் இறந்துபோனவர்களை, ஒரு பொருளை, கதவு கைபிடியைக் கூட கையால் தொட்டு காட்சிகளை அறிய முடியும். இதன்படி இறந்துபோனவர்களைப் பற்றிய எண்களைக் கூறுகிறான். அது அவர்களின் உள்ளாடை அளவாக இருக்க பிணவறையில் உள்ள மருத்துவர், டிடெக்டிவாக உள்ள அவனது அக்கா ஜி சூ என இருவரும் அவனை கிண்டல் செய்கிறார்கள். கூடுதலாக அவனது அண்ணன் காங் வேறு அவன் திறமை இன்னும் தேறவில்லை என கிண்டல் செய்கிறார். இப்படித்தான் தொடர் தொடங்குகிறது. 

பள்ளிக்கு பெரும்பாலும் போகாமல் வெளியில் சுற்றுபவனுக்கு பெட்ரோல் பங்க் வைத்திருப்பவரின் மகன் டாங் மட்டுமே நெருங்கிய தோஸ்த். தேர்வுகளில் மிக குறைந்த மதிப்பெண் எடுப்பதில்தான் லீ ஆனுக்கும் டாங்கிற்கும் போட்டி. இந்த நிலையில் நாயகி யூன் பாத்ரூமில் உடை மாற்றும்போது யாரோ ஒரு மாணவன் சாவி துவாரம் வழியாக பார்க்கிறான். இதை யூன் கண்டுபிடித்து அவனை பிடிக்க வரும்போது, அவனைப்போலவே ஹூடி போட்டுக்கொண்டு நடந்து செல்லும் லீ ஆனை பிடித்து போலீசில் செக்ஸ் குற்றவாளி என ஒப்படைக்கிறாள். அந்த பஞ்சாயத்தை  அவனது அக்கா ஜி சூ மூலம் தீர்த்துவிட்டு வருபவனை, பள்ளியில் தேர்வுத்தாளை திருடியதாக குற்றம்சாட்டுகிறார்கள். இதில், நாயகி யூன் தானே வந்து கணக்கு ஆசிரியரிடம் சண்டை போட்டு இணைகிறாள். இருவரும் சேர்ந்து பிரச்னையை கண்டுபிடித்து தீர்த்து கணக்கு ஆசிரியரை பள்ளியை விட்டே நீக்க வைக்கிறார்கள்.

யூனுக்கு அவரது அப்பா மூலம் ஒரு பிரச்னை இருக்கிறது. ஒரு அடுக்ககத்தில் தீ பிடித்து எரிந்ததில் ஏராளமானோர் இறந்துபோகிறார்கள். அதில் மக்களைக் காப்பாற்றிய கட்டிட செக்யூரிட்டி அவர்தான். ஆனால் காவல்துறை அவர் மீது வழக்கு போட்டு கொலைக்குற்றவாளி என முத்திரை குத்துகிறது. இதனால், யூனுக்கு பள்ளியில் மாணவிகளால் அவமானமும், வசைச்சொற்களும் கிடைக்கிறது. இதனால், அவள் நிறைய பள்ளிகளில் மாறி மாறி சேர்கிறாள். லீ ஆன் படிக்கும் பள்ளியில் கூட கணக்கு ஆசிரியர் ஒற்றை பெற்றோர், ஆதரவற்றோரைப் பற்றி அவதூறாகப் பேச கொந்தளித்து சவால்விட்டு லீ ஆன்னோடு சேர்ந்து வெல்கிறாள். அவள் மீது வேலை போன வெறியில் ஆசிட் அடிக்க முயன்று தோற்கும் ஆசிரியர், அவளது அப்பா கொலைகாரர் என சுவரில் எழுதுகிறார்.  அதோடு யூன் காணாமல் போகிறாள்.

இரண்டு ஆண்டுகள் கழித்து யூன் காவல்துறை தேர்வு எழுதும்போது மையத்தில் சூபர்வைசர் குரலை எங்கோ கேட்டது போல இருக்க, அது யூன். பள்ளியில் படிக்கும்போதிலிருந்தே லீ ஆனுக்கு அவளின் நேர்மையான போக்கும், தைரியமும் பிடித்துப்போக காதல் உருவாகிவிடும்.

அவளுக்கும் மனதில் காதல் இருக்கும். ஆனால், அதை வெளிப்படையாக கூற மாட்டாள். லீ ஆனின் அண்ணன்தான் அவளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வங்கி மூலம் கல்விச்செலவுகளுக்கு பணம் அனுப்பி வருபவர். யூன், தனது அத்தையின் வீட்டில் இருப்பாள். பிறகு காவல்துறையில் வேலை கிடைத்தபிறகு அதிக குற்றங்கள் இல்லாத பாதுகாப்பு மையத்தில் பணியாற்றுவாள். அவளும் இன்னொரு மூத்த அதிகாரியும்தான் அங்கு பணியாளர்கள்.

இந்த நிலையில் லீ ஆன் காவல்துறை தேர்வெழுத முயல்வதோடு, தனது சைக்கோமெட்ரிக் திறனை அதிகரிக்கவும், தகவல்களை அலசி ஆராய்ந்து புரிந்துகொள்ள யூன் நூல்களை வாசிக்க கூறுகிறாள். ஆனால் லீ ஆன் நூல்களை படித்தால் கூட யூனை எப்படி டேட்டிங்கிற்கு கூட்டிச்செல்வது என்பது ரகமான நூல்களையே படிக்கிறான். யூன், படிப்பில் கெட்டிக்காரி. வழக்கு விஷயங்களை ஆராய்வதிலும் கூட திறமைசாலி. அவளது திறமையை பார்த்த அரசு வழக்குஞரான லீ ஆனின் அண்ணன் காங், லீ ஆனை கவனித்து திறமையை மேம்படுத்து என கூறுகிறார். அவளும் அந்த பணியை ஏற்கிறாள்.

 இருவரும் சேர்ந்து குழந்தை காணாமல் போனது பற்றி விசாரிக்கும்போது சூட்கேஸ் கொலைகள் பற்றிய ஆதாரங்கள் கிடைக்கின்றன. இதைப்பற்றிய தகவல்களை தோண்டும்பது லீ ஆன், யூன் ஆகியோரின் கடந்தகாலம் உள்ளே வருகிறது. இந்த உண்மைகளில் வழக்குரைஞர் காங்கிற்கும், அவரது அப்பாவிற்கும் கூட பங்கிருக்கிறது. அதைப்பற்றி தொடரில் பார்த்தால் உங்களுக்கே புரியும்.

இந்த தொடரும் ஷின் யென் யுன்னின் அற்புதமான நடிப்பால் நன்றாக வந்திருக்கும் தொடர். அடுத்து பாப் பேண்டான கிஓடி7 என்பதில் உறுப்பினராக உள்ளவ ஜின் யங்தான் நாயகன். தொடர் பார்க்கும்படி இருக்கிறது என்றால் அதற்கு இவரின் அப்பாவித்தனமான நடிப்பே முக்கியமான காரணம்.  லீ ஆன் பாத்திரம் உணர்ச்சிகரமானது. நிறைய தவறுகளை செய்யக்கூடியது. அதற்கு நியாயம் செய்துள்ளார் என்று கூறவேண்டும். லீ ஆன் கூறும் காட்சிகளை தொகுத்து அதில் வழக்கு சம்பந்தமான விஷயங்களை யூன் ஆராய்கிறாள். இந்த இரண்டுபேர்தான், வழக்குரைஞர் காங்கின் பல்வேறு குழப்பமான ஐடியாக்களை துப்புகளை ஆராய்ந்து விடை கண்டுபிடிக்கிறார்கள். 

கட்டுமான விபத்து, அதை கட்டிய நிறுவனம் செய்யும் பல்வேறு சட்டவிரோத காரியங்கள், மக்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து வேலை செய்ய வைப்பது என கதை செல்லும் தூரம் அதிகம். தொடர் மிகவும் நீளமாக அதையெல்லாம் காட்சிபடுத்தவில்லை. யூனின் தந்தை தவறாக குற்றம்சாட்டப்பட்டு பதினொரு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டார். அவரை விடுவிப்பதை மட்டுமே கூறுகிறது. அனைத்து பிரச்னைகளுக்கும் காரணமாக காவல்துறை கமிஷனர், வழக்குரைஞர் அட்டர்னல் ஜெனரல் ஆகியோர் இருக்கிறார்கள். ஆனால் தொடர் முடியும்போது நாயகன், நாயகிக்கு எந்த சிக்கலும் இல்லை.

கமிஷனரை அவரது மகளை கொன்றுவிடுவதாக சொல்லி மிரட்டும் கட்டுமான நிறுவனம், அவர் அவர்களுக்கு எதிராக திரும்பியபிறகு அமைதியாகவே இருக்கிறது. ஏன்? அவர்களிடம் உள்ள சமூக பாதுகாப்பு எண் இல்லாத ஆட்களை வைத்து எளிதாக கொலைகளை செய்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாமே?

லீ ஆனுக்கு யூன் பள்ளியில் இருந்து படிப்பை நிற்க காரணமே அவளது அப்பா பற்றிய உண்மை அனைவருக்கும் தெரிந்துவிட்டது என்பதுதான். அப்புறம் கூட அவன் யூன் யார், அவளது அப்பா யார் என தெரியாமல் இருப்பது நம்ப முடியவில்லை.  காதலியாக மாறிய யூனின் கையைப் பிடித்து அவளது அப்பாவை அறிய வேண்டுமென்பதில்லை. நாளிதழைப் படித்தால், இணையதளங்களில் புகைப்படம் இருக்குமே?

லீ ஆனின் சைக்கோமெட்ரிக் திறனில் பார்க்கும் காட்சிகள் ஒரு தனிநபரின் பார்வையில் இருந்து விரிய வேண்டும். ஆனால், சிசிடிவி காட்சிகள் போலவே பெரும்பாலான காட்சிகள் தெரிகின்றன. எப்படி?

காவல்துறை கமிஷனர் கட்டிட விபத்து பற்றிய உண்மைகளை மறைத்து கட்டுமான நிறுவனத்தைக் காப்பாற்றி அதற்கு பதிலாக மகளுக்கு சில சகாயங்களைப் பெறுகிறார். ஆனால், அவரது குற்றம் எப்போதும் அவருக்கு நினைவுக்கு வருவதேயில்லை. வந்தாலும் தனது மகள், குடும்பத்திற்காக என நியாயப்படுத்திக்கொள்கிறார். ஆனால் இறுதியில் மகள் சீரியல் கொலைகாரரால் கொல்லப்பட்டபிறகு தனது குற்றத்தை ஏற்பது பொருந்தவேயில்லை. ஏனெனில் அவரது குழுவில் இருந்த போலீஸ் அதிகாரி, அவரின் மனைவி ஆகியோரும் தீவிபத்தில் இறந்துபோகிறார்கள். சிறுவனிடம் அவனது அப்பாவின் பொருட்களை எடுத்து கொடுக்கிறார். நெஞ்சறிய குற்றம் செய்துவிட்டு, வலியை பிறகுக்கு கொடுத்து விசாரணையில் கூடவே இருந்த நண்பனிடம் சிறிய தவறு என்கிறார். இறுதியாக மனம் திருந்துகிறாராம்.

லீ ஆன் பெற்றோரை இழந்து அனாதையாகி, அண்ணனுடன் வாழ்கிறான். அவர் அவனை வளர்க்கிறார். தங்க இடம் கொடுக்கிறார். ஒழிய ரத்த சம்பந்தமான உறவு அல்ல. யூனைப் பொறுத்தவரைக்கும் உறவுகள் கைவிட , கணவரை விவகாரத்து செய்த அத்தை மட்டுமே துணைக்கு இருக்கிறாள். செய்யாத குற்றத்தை ஏற்ற தந்தையால் வசைகள், அவமானங்களை சந்தித்துக்கொண்டே இருக்கிறாள். இந்த மன உளைச்சலுக்கு எப்படி இழப்பீடு பெறுவது?

குற்றம் செய்த அதிகாரியோடு, அவரின் இரண்டு தலைமுறைகளுக்கும் தண்டனை விதித்தால்தான் குற்றத்திற்கு பரிகாரம் தேட முடியும்.

வலி, வேதனை, விரக்தி, பழிவாங்கும் வெறி, வன்மம், துரோகம் தொடர் முழுக்க நிறைந்திருக்கிறது.

கோமாளிமேடை டீம்


கருத்துகள்