அதிகரிக்கும் கொலைக்குற்றங்கள் - தடுமாறும் அமெரிக்க காவல்துறை

 









கலிஃபோர்னியாவைச் சேர்ந்தவர் ஹாக்கின்ஸ். இவர் 2019 ஆம் ஆண்டு தொடங்கி மாகாணமெங்கும் புகைப்படங்களைக் கொண்ட பில்போர்டுகளை வைத்து வருகிறார். அதில், படுகொலையாகி குற்றவாளி கண்டுபிடிக்கப்படாத மனிதர்களின் முகங்கள் உள்ளன. எங்களை கொன்றவர்கள் யார்? என தலைப்பிட்டு புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. தகவல் கொடுக்க காவல்துறையின் தொடர்புஎண் உள்ளது.

ஹாக்கின்ஸ் எதற்கு இப்படி செய்கிறார்? ஏனெனில் 1995ஆம் ஆண்டு டிசம்பர் ஆறு  அன்று, அவரது மகன் ரெகி பத்தொன்பது வயதில் தெருவில் சுடப்பட்டு படுகொலையாகி கிடந்தார் 27 ஆண்டுகளாகியும் காவல்துறையால் குற்றவாளியை பிடிக்க முடியவில்லை. முயற்சிக்காமல் இல்லை ஆனால் குற்றவாளி கிடைக்கவில்லை.

 அந்த ஆண்டில் நடைபெற்ற 838 கொலைகளில ரெகியும் ஒருவராக பட்டியலில் ஆவணப்படுத்தப்பட்டார். மகன்தான் வாழ்க்கை என நினைத்து வாழ்ந்த  ஹாக்கின்ஸ் மனதளவில் நொறுங்கிப்போனார். அவர் கணக்காளராக இருந்து ஓய்வு பெற்றவர்.

ஹிப் ஹாப் இசைக்கு டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த இளைஞன், அங்குள்ள உள்ளூர் குழுக்களில் சேர்ந்து சிறுசிறு கடத்தல்களுக்கு குருவியாக செயல்பட்டு பின்னாளில் உயிர் இழந்துள்ளான். ரெகி என்ற ஹாக்கின்ஸின் மகன் ஆப்பிரிக்க அமெரிக்கர். எனவே, வெள்ளையர்கள் பெரும்பான்மையாக உள்ள பள்ளியில் பெரிய நட்பு வட்டம் அமையவில்லை. அவர், பள்ளிக்கு வெளியில் தனக்கென அமைத்துக்கொண்டதுதான் குற்றக்குழுக்களின் உறவு. அதுவே அவரது படுகொலைக்கு அச்சாரமாக அமைந்துவிட்டது.

ஹாக்கின்ஸ் முதலில் தனது மகன் கொலைக்குத்தான் நீதிகேட்டார். ஆனால், அவரைப் போலவே ஏராளமானவர்கள் ஆண், பெண் என பிள்ளைகளை தொலைத்துவிட்டு தடுமாறிக்கொண்டிருந்தனர். அவர்களைத் தனது தன்னார்வ தொண்டு நிறுவனம்  மூலம் இணைத்து விளம்பரத்தட்டிகளை வைத்து மக்களின் கவனத்தை வழக்குகளின் மீது திருப்ப முயன்று கொண்டிருக்கிறார்.

அமெரிக்காவில் தெருவில் இயங்கும் இளைஞர்களின் குற்றக்குழுக்களால் ஏற்படும் கொலை, கொள்ளை, தாக்குதல் சம்பவங்கள் அதிகம். காவல்துறை இதுபோன்ற குழுக்களை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதேசமயம், கொலைக்கு காரணமான குற்றவாளிகளையும் பிடிக்கவில்லை. உள்ளூர் காவல்துறை முதல் எஃப்பிஐ வரை இதே நிலைதான். ஹாக்கின்ஸ் இதை மாற்றவே தனது தன்னார்வ அமைப்பு மூலம் போராடி வருகிறார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 5 ஆயிரம் கொலைகளில் இன்னும் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை என்பதே ஆவணப்படுத்தப்பட்ட உண்மை. படுகொலை செய்யப்பட்டவர் மட்டுமல்ல அவர் மீது அன்பு கொண்ட மனிதர்களும் குற்றத்தின் பாதிப்பை வாழ்நாள் முழுக்க சுமந்துகொண்டு திரிவது கொடுமையான வேதனை அல்லவா?

ஸ்டீவ் டகர்டி

பீப்புள் இதழ்


கருத்துகள்