அமெரிக்கா கைவிட விரும்பாத போர்விமானம் எஃப் 35!

 








உலக நாடுகள் வாங்க விரும்பும் போர் விமானம்-எஃப் 35

 

அமெரிக்க அரசு, 1.7 ட்ரில்லியன் டாலர்களை ஒதுக்கி எஃப் 35 போர்விமானத்தை தயாரிக்க லோக்கீது மார்ட்டின் நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. அப்படியென்ன சிறப்பு அம்சம் இந்த விமானத்தில் உள்ளது?

சிரியாவுக்கு ரஷ்ய ரேடார்கள் கண்டுபிடிக்காமல் சென்று வரமுடியும். பசிஃபிக் கடலுக்கு சீனாவின் அச்சுறுத்தலின்றி சென்று இறங்கலாம். விமானம், இலக்கு, ஆயுதங்கள் பற்றிய விவரங்கள், நிலைய கட்டுப்பாடு இதெல்லாம் விமானி அணிந்துள்ள ஹெல்மெட்  கண்ணாடி வழியாக பார்க்கலாம். தனியாக கீழே குனிந்து மீட்டர்களை ரேடாரை பார்க்க வேண்டுமென்பதில்லை. போர் பற்றிய தகவல்களை விமானத்தில் இருந்தே அமெரிக்க ராணுவத்திற்கும் அதன் நேசப்படைகளுக்கும் எளிதாக பகிர முடியும். மணிக்கு 1,200 கி.மீ வேகத்தில் பறக்க முடியும். விமானி, காக்பிட்டில் உள்ள கருவிகளை, எந்திரங்களை பேச்சு மூலமே இயக்கலாம். இதில், 20 ஆயிரம் பவுண்டு எடையுள்ள ஆயுதங்களைக் கொண்டு செல்லலாம். சைபர் தாக்குதல்களுக்கு மசியாது.

ரஷ்யாவின் ரேடாரில் விமானம் தெரியாது. அடுத்த போர் என உலக நாடுகளுக்கு இடையில் நடந்தால்  அதில் எஃப் 35 இருக்கும் நாடுகள்தான் வெல்லும் என அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் போரில் தோற்று வெளியே வந்தபோது லோக்கீது மார்ட்டின் நிறுவனம் வணிகத்தில் சரிந்து கிடந்தது. அந்த நேரத்தில் ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுக்க எஃப் 35 விமானங்களுக்கான ஆர்டர்கள் குவியத் தொடங்கிவிட்டன. இந்த விமானம் இன்னும் முழுமையாக கட்டமைக்கப்படவில்லை. காரணம், அதில் ஏராளமான விஷயங்களை அமெரிக்க பாதுகாப்புத்துறை சேர்க்க வற்புறுத்துகிறது. இதனால் தயாரிப்பு தாமதமாகிறது. மேலும், எஃப் 35 விமானத்திற்கு தேவையான அல்காரிதம் மிக அதிகம். ஒப்பந்தப்படி விமானம் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டால், மென்பொருள், வன்பொருள் என இரண்டுமே அமெரிக்க அரசுக்கு பெரும்பலமாகிவிடும். அதற்குப் பிறகு ரஷ்யா, சீனாவை இடது கையாலேயே சமாளிக்காம். சீனா, ரஷ்யா ஆகியவை அல்காரித அடிப்படையில் ஆண்ட்ராய்ட் என்றால், அமெரிக்காவின் எஃப் 35, ஆப்பிள் ஐஓஎஸ் போல நவீனமானது. பாதுகாப்பானது.

விமானம் தயாரித்து அரசிடம் ஒப்படைப்பது தாமதமாகும் காலம்தோறும் திட்டமிட்ட பட்ஜெட் தொகை இருமடங்காக கூடிவருகிறது. ஆனால், அரசைப் பொறுத்தவரை இதற்கென நியமித்த பொறுப்பு அதிகாரியை மாற்றிவிட்டு அபராதம் விதிக்கிறது. ஆனால், விமானத்தை உருவாக்கும் திட்டத்தை கைவிடுவதாக இலலை. இதிலிருந்து அமெரிக்கா, தனது எதிரிகளை எதிர்கொள்ள எஃப்35 போர் விமானத்தை முக்கியமாக கருதுவது தெரிய வருகிறது. 2001ஆம் ஆண்டு தொடங்கி இந்த விமானத்தின் தயாரிப்பு நடைபெற்று வருகிறது. இன்னும் முடிந்தபாடில்லை. ஆனால், ரஷ்யாவின் உக்ரைன் மீதான போர் ஜெர்மனி நாட்டை 8 பில்லியன் டாலர்களை ஒதுக்கி எஃப்35 விமானத்திற்கான ஒப்பந்தத்தை போட வைத்துள்ளது. இத்தொகை அந்த நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதம். போர் அவசரம் காரணமாக நூறு மில்லியன் டாலர்களை ஜெர்மனி தனது ராணுவத்திற்கென ஒதுக்கியுள்ளது.

ஜெர்மனி, பின்லாந்து, ஸ்விட்சர்லாந்து, சிங்கப்பூர், செக் குடியரசு, க்ரீஸ் என பிற நாடுகளும் எஃப் 35 விமானத்தை வாங்க வரிசையில் நிற்கின்றன. போரால் யார் அழிந்தாலும் லோக்கீது மார்ட்டின் நிறுவனம் வாழும் என்பது உறுதியாகிவிட்டது. அமெரிக்காவில் ஒப்பந்தம் போட்டு பல்லாண்டுகள் ஆகியும விமானம் தயாராகவில்லை. திட்டமிட்ட பட்ஜெட் கூட 80 சதவீதம் அதிகமாகிவிட்டது. செனட்டில், விமானத் தயாரிப்பு என்பது எப்போதும் விவாதத்திற்குரியதாகவே உள்ளது. ஆனாலும் அமெரிக்க அரசு, போர் விமானத்தை தனது நாட்டின் பாதுகாப்பிற்கு முக்கியம் என நம்புகிறது.

எஃப்35 போர் விமானத்தை தயாரித்து அதை பராமரித்து வருவது என்பது எளிதல்ல. இப்படி அறுபது ஆண்டுகள் பராமரிக்க 1.7 பில்லியன் டாலர்களை அரசு செலவிட வேண்டியிருக்கும். இப்படி கூறுவது கூட தோராயமான தொகைதான். ஜெர்மனி இந்த வகையில் 8 பில்லியன் டாலர்களை செலவிட்டு 40 போர் விமானங்களை வாங்க முன்வந்துள்ளது. கனடா அரசு, தனக்கு 88 விமானங்கள் தேவை என அறிவித்துள்ளது.

லோக்கீது மார்ட்டின் நிறுவனம், தொண்ணூறுகளில் தொடங்கி இயங்கி வருகிறது. பெரும்பாலான ஆயுதங்களை அமெரிக்க அரசுக்காக தயாரித்து கொடுக்கிறது. வருமானமே அரசு செய்யும் போர்களால்தான் கிடைக்கிறது. 2022ஆம் ஆண்டு ஆயுதங்களை விற்றதன் மூலம் 66 பில்லியன் டாலர்களை வருவாயாக பெற்றது. லாபம் என்ற வகையில் 5.7 பில்லியன் டாலர்களை சம்பாதித்தது. இந்நிறுவனம் போர் விமானம், ஏவுகணைகள், ஏவுகணை தடுப்பு அமைப்புகள் என பல்வேறு ராணுவ தளவாடங்களை உருவாக்கி உலகமெங்கும் விற்று வருகிறது. இன்று அமெரிக்க பாதுகாப்புத்துறையின் பட்ஜெட்டில் 58 சதவீதம், தனியார் ஆயுத தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதில் பெரும்பகுதியை லோக்கீது மார்ட்டின் பெறுகிறது. இந்த நிறுவனம், தொடங்கியபோது, விலை மலிவான போர்விமானங்களை தயாரிப்பதை நோக்கமாக கொண்டிருந்தது. பின்னால்தான் இந்த நிலை மாறியது. சிஐஏவிற்காக தனித்துவமான எவர் கண்ணிலும் சிக்காத விமானங்களை தயாரித்து தர அமெரிக்க பாதுகாப்புத்துறைக்கும், நிறுவனத்திற்குமான உறவு பலமானது.

எஃப்35 விமானத்தை வேகமாக தயாரிக்க முடியாது. ஒரு விமானம் உடைந்து நொறுங்கிவிட்டால், உடனே அடுத்த விமானத்தை எடுத்து பயன்படுத்த முடியாது. காரணம், ஒரு விமானத்தை உருவாக்கவே நானகு ஆண்டுகள் தேவைப்படுகிறது. இப்போதைக்கு லோக்கீது மார்ட்டின் ஆண்டுக்கு 125 போர் விமானங்களை தயாரித்து வருகிறது. இந்த செயல்பாடு வேகம் கூடினால் மட்டுமே எஃப் 35 போர் விமானத்தின் தயாரிப்பு வெற்றி பெறும்.

ஃபார்ச்சூன் இதழில் கிறிஸ்டோபர் லியனார்ட் எழுதிய கட்டுரையைத் தழுவியது.

கருத்துகள்