அமெரிக்காவில் அதிகரிக்கும் காலநிலைமாற்ற பதற்றம் - கொள்ளை லாபம் சம்பாதிக்கும் வானிலை ஆப்கள்

 










காலநிலை மாற்ற பதற்றம்

கொரோனாவுக்குப் பிறகு மக்களின் வாழ்க்கை அடியோடு மாறிவிட்டது. பலரும் வேலை என்பதை விட குடும்பம் முக்கியம் என மாறிவிட்டனர். சொந்த ஊருக்கு திரும்பி சென்று தெரிந்த வேலைகளைப் பார்க்கிறார்கள். அதைவிட முக்கியமாக எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்ற பயத்தில் வாழத் தொடங்கிவிட்டனர். அலுவலகத்தில் செய்து வந்த பணிகள் பெரும்பாலும் வீட்டில் இருந்தே செய்யுமாறு மாறிவிட்டன.

பெருநிறுவனங்கள் மீண்டும் அலுவலகத்திற்கு திரும்ப உத்தரவிட்டும் வேலை செய்தவர்கள் பணிக்கு திரும்பவில்லை. ஏராளமானோர் வேலையைக் கைவிட்டனர். இதெல்லாமே மனிதர்களின் பதற்றமான மனநிலையை அடையாளம் காட்டுவதுதான்.

பெருந்தொற்றுக்கு முன்பே வெப்ப அலை பிரச்னை இருந்தாலும் தற்போது அது தீவிரமாகிவருகிறது. அண்மையில் அமெரிக்காவின் டெக்ஸாஸில் 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்தது. அங்கு வாழ்ந்தவர்கள் பீதியடைந்து, இங்கேயே இருக்கலாமா, வெப்பம் அதிகரித்தால் வேறு நகரங்களுக்கு போகலாமா என யோசிக்கத் தொடங்கிவிட்டனர்.

 இவர்களின் உளவியல் பீதியை வானிலை ஆப்கள் மேலும் அதிகரித்தன. அமெரிக்கர்களில் 50 சதவீதம் பேர் வானிலை ஆப்களை பயன்படுத்துகின்றனர். ஆப்பிள், ஆண்ட்ராய்ட் பிளே ஸ்டோரில் மட்டும் 10 ஆயிரம் வானிலை ஆப்கள் உள்ளன. கிடைக்கும் வருமானத்தை யோசித்த ஆப்பிள் நிறுவனம், டார்க் ஸகை என்ற தனியார் வானிலை ஆப் ஒன்றை விலைக்கு வாங்கி தன்னோடு இணைத்துக்கொண்டது.

 வானிலை ஆப்களின் வருமானம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  2017ஆம் ஆண்டில் 530 மில்லியனாக இருந்த வருமானம், 2023ஆம் ஆண்டு 1.5 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள மக்கள் ஒருவர் தலா மூன்று வானிலை ஆப்களை பயன்படுத்தி வருகிறார்கள். பதினைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை அப்டேட்களை ஆப்களும் கொடுத்து தங்கள் வாடிக்கையாளர்களை பதற்றத்தில் வைத்திருக்கின்றன. வெதர் அண்டர்கிரவுண்ட, பாரீகா, வெதர்ஃபார்காஸ்ட், டார்க்ஸ்கை ஆகிய ஆப்கள் அமெரிக்காவில் புகழ்பெற்ற வானிலை ஆப்களாக உள்ளன.

அமெரிக்க வானிலையாளர்களில் பெரும்பாலானோர், தனியார் ஆப்களை பயன்படுத்துவதில்லை.அ வர்கள் அரசின் வலைத்தளத்திலுள்ள தகவல்களை மட்டுமே பார்க்கிறார்கள். உண்மையில் அவர்களின் வேலையும் அவற்றை கண்காணித்து பதிவு செய்வது என்பதால் பெரிய ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், மக்கள் மனதளவில் வெப்பம் அதிகரிக்கிறது. புயல் வருமா, காட்டுத்தீ உருவாகுமா என பதற்றத்தில் இருக்கிறார்கள். இயற்கை பேரிடர் நேரும்போது அவர்களின் வீடுகளை விட்டு பாதுகாப்பான பகுதிக்கு, காவல்துறை மாற்றுகிறார்கள். தான் வாழ்ந்த வீட்டை இழக்கும் வேதனை அந்த மக்களுக்கு இருக்கிறது.

அமெரிக்காவில் உள்ள தேசிய வானிலை சேவை வலைத்தளத்தில் இருந்துதான் தனியார் ஆப்கள் தகவல்களை பெறுகிறார்கள். அதை எப்படி நறுக்கி ஒட்டி செய்தியாக தங்களின் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறார்கள் என்பதில்தான் அத்தனை வணிக அம்சங்களும் இருக்கிறது. மூன்று ஆண்டுகளாக பெருந்தொற்று காரணமாக வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலை, காட்டுத்தீ, புயல், என வாழ்ந்த மக்கள் இப்போது  வெப்ப அலை பாதிப்பு காரணமாக  நம்பிக்கை இழந்து பயத்துடன் ஸ்மார்ட்போனை உசுப்பி நிலைமையை கட்டுக்குள் இருக்கிறதா என பார்த்து வருகிறார்கள். காலநிலை பதற்றம் என்பது இப்போது மக்களிடையே மனநல குறைபாடாகவே மாறிவிட்டது வேதனையான ஒன்று.

ஹன்னா மாரியட்

கார்டியன் வீக்லி

images - pinterest


கருத்துகள்