சைவ உணவால் குழந்தைகளை மெல்ல கொல்லும் அரசியல்வாதிகள்!

 




Steak, Meat, Beef Steak, Food, Beef, Eat, Delicious
மாட்டிறைச்சி அரசியல்



குஜராத் மாநிலம் உலகிலேயே அதிகம் வளர்ச்சியடைந்துள்ளது என பலரும் நமக்கு விபூதி அடித்துள்ளனர். ஆனாலும் உண்மையான செல்வம் என்பது மனிதவளத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பதுதான். அதனை இங்குள்ள சைவ அரசியல்வாதிகள் கணநேரம் மறந்துவிட்டனர் போல. 

மாநிலத்தில்  80 சதவீத குழந்தைகள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரும் ஆறு மாதம் முதல் ஐம்பத்தொன்பது மாதம் வரையிலான வயதைக் கொண்டவர்கள் இதனை சொன்னது வெளிநாட்டு தன்னார்வ அமைப்பு அல்ல. ஆத்மநிர்பாராக செயல்படும் குடும்ப சுகாதார துறையின் ஆய்வுதான். ஏறத்தாழ ஒட்டுமொத்த நாடுமே மன்னர் ஆட்சிகாலத்தைப் போல மாறிக்கொண்டிருக்கிறது. அந்தக் காலத்தில்தான் மன்னர் எந்த மதமோ, அதே மத த்தை மக்களும் பின்பற்றவேண்டும். மறுப்பவர்களை கொன்றுவிடுவார்கள். அல்லது மிரட்டி மதம் மாற்றுவார்கள். இப்போதும் குறிப்பிட்ட நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சியில் இருக்கும்போது அவர்களுக்கு பிடித்த விஷயங்களை மக்கள் மேல் திணித்து வருகிறார்கள். 

இதன்படி குஜராத்தில் சைவ உணவு வாசிகள், நான் - வெஜ் சாப்பிடும் பழக்கத்தை ஒழிப்பதை இப்போது தங்களது கடமையாக கொண்டுள்ளார்கள். ஏன் இப்படி என்று கேட்டால், சுத்தம் முக்கியம், இறைச்சி சமைக்கும்போது காற்று சூழல் மாசுபடுகிறது என ஐ.நா. அறிக்கையில் கூட பார்க்க முடியாத காரணங்களை கண்டுபிடித்து சொல்லி வருகின்றனர். குஜராத்தின் பரோடா, ராஜ்கோட், ஜூனகாத், பாவ்நகர் ஆகிய பகுதியில் அசைவ உணவுகளை விற்பதற்கு தங்களால் முடிந்த கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பள்ளிகளுக்கு நூறு மீட்டர் தூரத்திற்கு இறைச்சி கடைகள் இருக்க கூடாது என உள்ளூர் நிர்வாக அமைப்பு சட்டம் போட்டுள்ளது. இந்த அமைப்பில் உள்ளவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்கள் என்று நாம் தனியாக சொல்லவேண்டியதில்லை. இந்த விவகாரத்தில் சமணர்களும் ஒத்துப்போவதுதான் கொடுமை. 

பள்ளிகள் அரசே இப்படி சட்டம் போடும்போது நாமும் ஏதாவது செய்யவேண்டுமே என பள்ளிகளுக்கு மாணவர்கள் இறைச்சி உணவுகளை கொண்டு வந்தால் அவ்ளோதான் என மிரட்டி வருகின்றன. இனிமேல் குஜராத்தில் அசைவ உணவுகளை லைசென்ஸ் வாங்கிக்கொண்டுதான் சாப்பிடவேண்டும் என அடுத்தபடியாக சட்டம் உருவாகவும் வாய்ப்பு உள்ளது. 

குஜராத்தில் உள்ள அகமதாபாத் மாநகராட்சி, பொது இடங்கள், ஆன்மிக இடங்களில் எந்த வித அசைவு உணவுக்கடைகளும் இயங்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி குறிப்பிட்ட உணவுவகைகளை சாப்பிடுபவர்களை, கடைகளை எதிர்ப்பது புதிதல்ல. மும்பையில் இப்போது பல்வேறு அபார்ட்மெண்டுகளில், பிளாட்டுகளில் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு தங்க அனுமதி கிடையாது. அசைவ உணவு என்பது குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு என்றாகிவிட்டது. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் தலித்துகள், சிறுபான்மையினரின் உணவு, இறைச்சிக்கடைகளை முழுமையாக விலக்குவதன்மூலம் அந்த மக்கள் சாப்பிடுவதற்கே இனி அல்லாடுவார்கள். உயர்தர சைவ உணவுகளை காசு கொடுத்து வாங்குவது அனைவராலும் முடியாது. 

பாஜக ஆளும் மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களில் மட்டும்தான் தீவிரமான சைவ பிரசாரம் செய்யப்படுகிறது. மேலும் மக்களிடையே அச்சுறுத்தல் ஏற்படுத்த வதந்திகளை பரப்பி அதன்மூலம் சிறுபான்மையினரை அடித்துக்கொல்வதும் சித்திரவதை செய்வதும் சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்பப்படுகிறது. 

தேசியவாதத்தை முன்னிறுத்தி, பசுவை இந்தியாவின் அடையாளமாக்கி, தேசிய உணவாக சைவத்தை இந்துத்துவா குழுக்கள் முன்வைக்க முயல்கின்றனர். இது பன்மைத்தன்மையான கலாசாரமும், உணவும் கொண்ட மக்களுக்கு இடையில் பெரும் வேறுபாடுகளை உருவாக்கும். இதனை மதவாத குழுக்கள் தெரிந்தேதான் செய்துவருகிறார்கள். 


பத்ரலேகா சட்டர்ஜி டெக்கன் கிரானிக்களில் எழுதிய கட்டுரையைத் தழுவியது. 


கருத்துகள்