சிகரெட் அட்டைப் பெட்டிகளில் புகைப்பிடித்தலுக்கு எதிரான விழிப்புணர்வு- அருப்புக்கோட்டை மாணவியின் புதிய ஐடியா

 








மது எப்படி ஒருவரை குடிநோயாளி ஆக்குகிறதோ, அதேபோல்தான் புகைப்பிடித்தலும். சிலர் எந்த நோக்கமும் இல்லாமல் சிகரெட்டுகளை ஊதி தள்ளிக்கொண்டிருப்பார்கள். வெறுமையைப் போக்க என காரணம் சொல்லுவார்கள். இதனை கைவிடுவது அவர்களது ஆரோக்கியத்திற்கும் நல்லது அவர்களின் அருகே இருப்பவர்களுக்கும் நல்லது. 

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மாணவி அஸ்மா அஹமது, புகைப்பிடித்தலுக்கு எதிராக விழிப்புணர்வு முயற்சிகளை செய்து வருகிறார். இதற்கு தன்னார்வ நிறுவனமான வில் அவார்ட்ஸ் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் விருது வழங்கியுள்ளது. அப்படி என்ன விஷயம் செய்தார்? 

மூன்று ஆண்டுகளாக ஆயிரம் சிகரெட் அட்டைகளை பொறுக்கி எடுத்து அதன் பின்பக்கத்தில் புகைப்பிடித்தலுக்கு எதிரான வாசகங்களை எழுதி அதனை கண்காட்சியாக்கியிருக்கிறார். அட்டைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாசகங்களை எழுதியிருக்கிறார். ராமனாதபுரத்தைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனத்தின் மூலம் ஆறாவதிலிருந்து அஸ்மா செய்யும் விழிப்புணர்வு முயற்சிகள் வெளித்தெரிந்துள்ளன. இவரது புகைப்பிடித்தலுக்கு எதிரான கண்காட்சியை அவரது பள்ளியில் உள்ள 1500 மாணவ, மாணவிகள் பார்வையிட்டுள்ளனர். இதன்மூலம் அத்தனை குடும்பங்களிலும் மாற்றம் நடைபெறலாம் என அஸ்மா நம்புகிறார். 

சிகரெட் அட்டைகளை அஸ்மாவும் அவரது சகோதரியும் சாலைகளில் பொறுக்கியுள்ளனர். இதிலும் பலரும் இதைப்பற்றி கேள்வி கேட்டுள்ளனர். கலைப்பொருட்களை செய்வதற்காக என்று பதில் சொல்லியிருக்கிறார். புகைப்பிடிப்பவரை ஒருவரை மறித்து அஸ்மா கேள்வி கேட்டதற்கு, எங்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்னைகள் என்னவென்று உனக்கு தெரியுமா என்று கேட்டிருக்கிறார். அஸ்மாவின் முயற்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தவமணி, செயலாளர் மணிமாறன், ஆசிரியர்கள் இந்து காளிமுத்து, மனோன்மணி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

அஸ்மாவுக்கு விருது கிடைத்தது மகிழ்ச்சி. ஆனால் அதை விட்டுத்தள்ளுங்கள். புகைப்பிடித்தலுக்கு எதிராக அவர் செய்த முயற்சியும், உழைப்பும் முக்கியமானது. தன்னைப்பற்றி மட்டுமல்லாது சமூகத்தை பற்றியும் கவலைப்படும் அவரது குணம் பாராட்டத்தக்கது. 

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 

அசீபா ஃபாத்திமா


கருத்துகள்