யுபிஐ ஏற்படுத்தும் அதிவேக பிரிவினை! - சாதகங்களும் பாதகங்களும்

 


Get 10X Faster Payments with UPI Collect - Razorpay Payment Gateway



யுபிஐ ஏற்படுத்தும் பிரிவினை!

உங்கள் போன்தான் இனி வாலட்டாக இருக்கப் போகிறது என பில்கேட்ஸ் 1996ஆம் ஆண்டு சொன்னார். அப்போது அவர் அப்படி சொன்னது பலருக்கும் புரியாமல் இருந்தாலும் இப்போது நாம் அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. இன்று போன்பே, பேடிஎம், வங்கி ஆப்களில் வாலட்டில் பணம் வைத்து இணையத்தில் பொருட்களை வாங்கும் நிலைக்கு முன்னேறியிருக்கிறோம். 

பூம்பூம் மாட்டிற்கான தொகையை கூட யுபிஐயில் கொடுக்கலாம் என்றளவுக்கு நிலை மாறியதை, சிலர் பெருமையாக பேசுகிறார்கள். இடதுசாரிகள் பிச்சை எடுப்பதை நேரடியாக எடுத்தால் என்ன டிஜிட்டலாக எடுத்தால் என்ன என்று விமர்சிக்கிறார்கள். முதலில் சொன்னதை விட இரண்டாவது கேள்வியில் சற்று பொருள் உள்ளது. 

யுபிஐ பிற வசதிகளை விட வேகமாக பணக்கார ர்கள் ஏழைகள் ஆகியோருக்கு இடையில் பாகுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், செக்கை ஒருவர் வங்கிக்கு சென்று மாற்றுவது கடினமானது. வரிசையில் நிற்கவேண்டும். டோக்கன் போடுவது இதில் முக்கியமான அம்சம். இப்படி மாறும் பணம் சரியாக கணக்கில் வந்து விழ பதினைந்து நாட்கள் தேவை. இதில் வங்கி விடுமுறைகள் வந்தால் என்ன செய்வது? பொறுமைதான் முக்கியம் என நமக்கு நாமே கலா ஸ்வீட்ஸ் பாதுஷாவை ஆர்டர் செய்து மனதை ஆற்றுப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான். 

பிறகுதான் நெப்ட், ஆர்டிஜிஎஸ், ஐஎம்பிஎஸ் ஆகிய வசதிகள் வந்தன. இவற்றில் நெப்ட்டை அதிக தொகைக்கு பயன்படுத்தலாம். வங்கிக்கணக்கில் பணம் போய்ச்சேர மூன்று நாட்கள் ஆகும். பிற வசதிகள் வேகமாக செல்லும் என்றாலும் சில வங்கிகள் தற்போது இதற்கு கூடுதல் கட்டணத்தை விதிக்க தொடங்கியுள்ளன. பிற்காலத்தில் இதற்கு ஜிஎஸ்டியும் கூட விதிக்கப்படலாம்.  பிறகுதான் ஸ்மார்ட்போன்களின் எழுச்சி வந்தது. இதன் வழியாக வங்கி ஆப்கள், தனியார் நிதிநிறுவனங்கள் உள்ளே வந்தன. இதில் வங்கிக்கணக்கில் இருந்து வாலட்டில் பணத்தை வைத்து அதனை பிற கணக்குகளுக்கும், விற்பனைக்கும் பயன்படுத்தலாம். 

2018இல் யுபிஐ வசதிகள் வந்த பிறகு, பணத்தை பிறருக்கும் கடைகளிலும் செலுத்துவது எளிதாகிவிட்டடது. வங்கிக்கணக்கை அலைபேசி எண்ணுடன் இணைக்கவேண்டும் அப்படி இணைத்தால் எளிதாக க்யூஆர் கோட் மூலமே பல்வேறு பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும்.  விர்ச்சுவல் பேமண்ட் அட்ரஸ் என்றால் சரியாக புரிந்துகொள்ளமுடியாது. அதனை க்யூஆர் என்றால் எளிதாக அறியலாம். க்யூஆர் வந்தபிறகு அதனை போனிலுள்ள வங்கி ஆப் அல்லது வேறு தனியார் நிறுவன ஆப் வழியே ஸ்கேன் செய்தால் போதுமானது. ஒரு வார்த்தை பேசாமல் பொருளுக்கான பணத்தை வியாபாரிக்கு கொடுத்து விடமுடியும். இதில் இரண்டு வங்கிக்கணக்குகளை இணைத்துக் கொள்ளும் வசதிகளையும் வழங்குகிறார்கள். 

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகுதான் பேடிஎம் நிறுவனம் பெரும் வளர்ச்சி அடைந்தது. டிஜிட்டல் வழி பரிவர்த்தனைகள் அதிகமாக தொடங்கியதும் அப்போதுதான். இதில் இன்னொரு பக்கம், பாதிப்புகளும் உண்டு. இந்த வகையில் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. செய்தியில் கூட பார்த்திருப்பீர்கள். லிப்ட் கேட்பது போல வண்டியில் ஏறி, ஜி பே வழியாக பணத்தை கொடுக்கச்சொல்லி மிரட்டிய கும்பல் ஒன்று பிடிபட்டது என. இதுபோல இனிமேல் நிறைய விஷயங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. 

பணத்தை ஒருவர் அனுப்புவதற்கு பின் நம்பர் தேவை. ஆனால் அதனை ஒருவர் பெறுகிறார் என்றால் அப்படி எந்த பின்னும் தேவையில்லை. மேலும் உங்கள் போனை முன்னர் பிறர் அழைப்புகளை செய்ய கொடுத்திருந்தால் இனிமேல் கொடுக்காதீர்கள். எளிதாக உங்கள் போனில் சாப்ட்வேர்களை ஏற்றி பணத்தை கொள்ளையடிக்க முடியும். அதற்கான வாய்ப்புகள் இப்போது அதிகரித்துள்ளன. 

சிம்மை அப்டேட் செய்கிறேன் என்று சொல்லி அழைக்கும் அழைப்புகளும் அதிகரித்துள்ளன. இதனை வைத்து செல்போன் எண்ணை பெற்று வங்கி விவரங்களை எளிதாக அறியலாம். ஒடிபி செல்போன் எண்ணுக்கு வருவதால், கொள்ளைக்கூட்டம் எளிதாக பணத்தை திருடிவிடமுடியும். சில யுபிஐ ஆப்களில் சாட் வசதிகளும் உண்டு என்பதால், அதில் ஊடுருவும் திட்டம் போட்டு திருடும் கூட்டங்களிடம் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். 

வங்கிகளின் ஆப்களை பயன்படுத்துவது பிரச்னைகளை குறைக்கும். முடிந்தளவு பணம் திருடுபோனால் உடனடியாக வங்கிக்கு தகவல் கொடுத்து கணக்கு பற்றிய புகாரை அளிக்கவேண்டும் கூடுதலாக யுபிஐ ஆப் மூலமும் புகார் அளிக்கலாம். இதற்கு சைபர் கிரைம் போலீசார் உதவுகிறார்கள். 


தி இந்து ஆங்கிலம்

நித்யா கல்யாணி



கருத்துகள்