உண்மையை மறைக்காதபோது எதுவும் உங்களுக்கு சவாலாக இருக்காது - காஸ்டர் செமன்யா

 











காஸ்டர் செமன்யா 

விளையாட்டு வீரர்


ரேஸ் டு பி மைசெல்ஃப் என்ற சுயசரிதை நூலை எழுதியுள்ளீர்கள். இதற்கான அவசியம் என்ன?


நீங்கள் அமைதியான நல்ல மனநிலையில் இருக்கும்போதே சொல்ல வேண்டிய கதையை சொல்லவேண்டும். இந்த நேரத்தில் எனது ஆதரவு தேவைப்படுவோர்களுக்கு உதவுகிறேன். எனது கதை, வாய்ப்பு மறுக்கப்படுவோர்களுக்கானது. இதன் வழியே நீங்கள் யாரோ அப்படியே ஏற்றுக்கொண்டு வாழவேண்டும் என நினைக்கிறேன். 


நீங்கள் வளரும்போது சிறந்த கால்பந்து வீரராக இருந்தீர்கள். அந்த விளையாட்டு புறவயமானது என்றும் எழுதுவது அகவயமானது என்றும் கூறியிருந்தீர்கள். உங்களது தேர்வாக அகவயமானதை தேர்ந்தெடுத்திருந்தீர்கள். இதற்கு என்ன அர்த்தம்?


கால்பந்து விளையாடும்போது நீங்கள் தனியாக இருக்கமாட்டீர்கள். குழுவாக இருப்பீர்கள். அணியில் உருவாகும் பிரச்னைகளை குழுவாக அமர்ந்து தீர்க்க முயல்வீர்கள். சிலசமயங்களில் அவற்றை தீர்க்க முடியாமல் கூட போகலாம். ஆனால் தனிப்பட்ட வீர்ராக இயங்கும்போது வெற்றி, தோல்வி என்பது எனக்குமட்டுமே உண்டு. ஆனால் அப்படி இயங்கும்போது எனது மனதில் சுதந்திரத்தை உணர்கிறேன். எதற்கும் கவலைப்படுவதில்லை. 


உங்கள் மனைவியை முதன்முதலாக வீரர்களின் உடைமாற்றும் அறையில் சந்தித்திருக்கிறீர்கள். உங்களை அவர் ஆணாக கருதினார். நீங்கள் இதைப்பற்றி பெருமையாக கருதி எழுதியிருக்கிறீர்கள். எதனால் அப்படி உணர்கிறீர்கள்?


நீங்கள் யார், எப்படி இருக்கிறீர்கள் என்பதை உணர்வதால் வரும் பெருமை அது. என்னைப் பார்த்து ஒருவர் ஆண் என்று கருதி பேசினால், அவரை நான் சரியாக திருத்துவேன். மக்களுக்கு கற்பித்து வழிகாட்டுவது எனது பொறுப்பு. ஷார்ட்ஸ், பனியன் எனக்கு பிடிக்கும் என்பதால் அணிகிறேன். ஆனால் நான் பெண். நான் ஆணாக இருந்தால் எப்படி பெண்களின் உடை மாற்றும் அறைக்குள் சென்றிருக்க முடியும்? என் மனைவி அன்று கூறியதை தனிப்பட்ட ரீதியாக எடுத்துக்கொள்ளவில்லை. நாங்கள் நண்பர்களாகி பிறகுதான் திருமணம் செய்துகொண்டோம். ஒருவரையொருவர் புரிந்துகொண்டோம்.


பாலினம் சார்ந்த இரண்டு சோதனைகளை நீங்கள் எதிர்கொண்டிருக்கிறீர்கள். 2009ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்றபிறகு சோதனைகள் உங்களுக்கு நடந்தன. இதுபற்றிய தங்களது அனுபவம் என்ன?


நீங்கள எதையும் மறைக்காதபோது எந்த சோதனைகளும் உங்களுக்கு கடினமாக இருக்காது. சோதனைகளில் எனக்கு சவாலாக இருந்தது, அவர்கள் என்னை நடத்திய விதம்தான். நான் பெண்தான். எனது உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவு அதிகமாக உள்ளது. பெண்களின் உடலிலுள்ள கருப்பை இல்லை. இந்த வேறுபாடு எனது உடலில் உள்ளது. இந்த உண்மையை நான் வெளிப்படையாக கூறும்போது, மக்களுக்கு இப்படிப்பட்ட மனிதர்கள் உண்டு என புரிந்துகொள்ளலாம். 


உங்களது சட்டக்குழுவினருக்கு, போட்டி நடத்தும் அமைப்பினர் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொண்டு டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைத்தால் போட்டியில் பங்கேற்கலாம் என கூறியிருக்கிறார்கள். இதைபற்றி என்ன நினைக்கிறீர்கள்?


நீங்கள் அவர்கள் கூறியதுபோல செய்தால், நோய்வாய்ப்படுவீர்கள். உங்களிடமிருந்து ஆன்மாவை பிரிக்க முயல்கிறார்கள். நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அப்படியானவராக இனி இருக்க முடியாது. அதனால் இருளான எனது வாழ்க்கையைப் பற்றிய நூலை எழுதினேன். அந்த வழியை தேர்ந்தெடுத்தால் உங்களது வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடு்ம். 


மனித உரிமைக்கான நீதிமன்றம் தொடர்ந்த வழக்கில் சாதகமான முடிவு வந்தால் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் போட்டிகளில் பங்கேற்பீர்களா?


போட்டியில் பங்கேற்று ஓடுவேனா என்று இன்னும் நான் முடிவு செய்யவில்லை. மனித உரிமை என்பது விளையாட்டுகள் விவகாரத்தில் கடைபிடிக்கப்பட வேண்டும். மக்கள், கௌரவமாகவும், மரியாதையாகவும் நடத்தப்பட வேண்டும்.  சிறுவர், சிறுமிகள் தடகளத்தை விரும்பினால் அவர்கள் தங்கள் இளமையை ரசிக்கவேண்டும் விளையாட்டை கொண்டாட வேண்டும். 


சீன் கிரிகோரி

time magazine

கருத்துகள்