செயற்கை நுண்ணறிவு, அதன் ஆபத்துகள் என்ன?

 









செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?


1955ஆம் ஆண்டு கணினி வல்லுநரான மார்வின் மின்ஸ்கி என்பவர் முதல்முறையாக கூறினார். அப்போது அதற்கான தீர்க்கமான வரையறை ஏதும் இல்லை. தினசரி பயன்படுத்தும் கால்குலேட்டரை விட சற்று சிக்கலான அமைப்புமுறை என்று புரிந்துகொள்ளலாம். இன்று அப்படி முழுக்க சொல்ல முடியாது. சிக்கலான பிரச்னைகளை தீர்க்க எழுதப்படும் கோடிங் முறை எனலாம். இதை தீர்க்கும் முறை அப்படியே மனிதர்கள் யோசிக்கும் முறையை ஒத்திருக்கும். கணினிகள் தானாகவே யோசிக்காது. ஆனால் தகவல்களைக் கொடுத்து அவற்றை சோதித்து தீர்வுகளை வழங்க செய்யலாம். நிறைய தகவல்களைக் கொடுத்துவிட்டு கேள்விகளைக் கேட்டால் சரியான பதில்களை நாம் பெறலாம். நியூரல் நெட்வொர்க் முறையில் கணினிகளை இன்று உருவாக்கி எந்திர வழி கற்றலை நுட்பமான செயலாக்குகிறார்கள். 


ஏஐ எங்கெல்லாம் பயன்படுகிறது?


இன்று போனின் சேவைகளை கட்டண தொலைபேசியில் அழைத்து பெறுகிறீர்களா? அங்கும் ஏஐ பாட்கள் உண்டு அவைதான் உங்களுக்கு வழிகாட்டுகின்றன. இப்போது குரலை அடையாளம் கண்டு பிடித்து பேசவும், உங்களை அழைக்கவும் கூட திறன் பெற்றுள்ளன. நீங்கள் எழுதவேண்டிய மின்னஞ்சலை ஏஐ இலக்கணப் பிழை இல்லாமல் எழுதிவிட முடியும். கூகுள் இப்போது தனது தேடலில் ஏஐயை இணைத்து வருகிறது மைக்ரோசாஃப்ட் ஏற்கெனவே தனது பிங்க் தேடலில் ஏஐயை இணைத்துவிட்டது. 


மனித சமூகத்தை ஏஐ அழித்துவிடுமா?


மனிதர்களை விட ஸ்மார்ட்டாக ஏஐ ஒன்றை கட்டமைக்கும்போது என்ன ஆகும் என்று யாருக்கும் தெரியாது. பல்வேறு நாடுகளில் மக்களின் பாதுகாப்பு என்ற பெயரில் ஏஐயைப் பயன்படுத்தி கண்காணிப்பை பலப்படுத்த தொடங்கியுள்ளனர். ராணுவத்தில் ஏஐயைப் பயன்படுத்தினால் மனிதர்கள் இல்லாமலே போரை எளிதாக நடத்த முடியும். போர், உள்நாட்டு கலகம் ஆகியவற்றை எளிதாக ஏஐ வைத்து நடத்தி அதில் வெற்றி பெற்றுவிட முடியும். 


இதில் லாபம் சம்பாதிப்பது யார்?


ஆல்ப்பெட், ஓப்பன் ஏஐ, மைக்ரோசாஃப்ட், மெட்டா, ஸ்டேபிலிட்டி ஏஐ, ஆந்த்ரோபிக் ஆகிய தனியார் நிறுவனங்கள்தான். இந்த நிறுவனங்கள்தான் பல்வேறு திறன் வாய்ந்த ஏஐ மாடல்களை உருவாக்கி வருகின்றன. ஸ்டான்ஃபோர்ட் வெளியிட்ட அறிக்கையில் 32 ஏஐ மாடல்களை சந்தையில் கொண்டு வந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர். இதில் மூன்று மாடல்களை பல்கலைக்கழகங்கள் உருவாக்கியுள்ளன.


ஏஐயால் வேலையிழப்பு உருவாகுமா?


அறிவுசார்ந்த தொழிலாளர்கள் குறிப்பாக எழுத்தாளர்கள், கணக்கு தணிக்கையாளர்கள், கட்டுமான கலைஞர்கள், மென்பொருள் வல்லுநர்கள், வழக்குரைஞர்கள் ஆகியோரின் வேலைகள், வாடிக்கையாளர் சேவைத்துறை பணிகள், மனிதவளத்துறை அலுவலக பணிகள் ஆகியவை பாதிக்கப்படும் என கூகுள், ஓப்பன் ஏஐ, ஐபிஎம் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஏறத்தாழ ஐந்தே ஆண்டுகளில் வேலையிழப்பு பிரச்னைகள் உருவாகும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். 


சட்டவிதிமுறைகளை இயற்றப்படுவதில் தாமதம் ஏன்?


இப்போது இணையத்தில் ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதைபற்றி ஃபர்ஸ்போஸ்ட் செய்தி நிறுவனம், செய்தி வீடியோவை வெளியிட்டுள்ளது. நடிகை அந்த வீடியோவில் உள்ளது தானில்லை என்று கூறியுள்ளார். ஆனால், இதே போன்ற வீடியோ டீனேஜில் உள்ள பெண் ஒருவருக்கு வெளியானால் அவர் என்ன விதமான மனப்பதற்றத்தை அடைவார் என்ற கேள்வி எழுவதை தடுக்கமுடியவில்லை. 


ஐரோப்பாவில் ஃபேஸ்புக் அறிமுகமாகி இருபது ஆண்டுகளுக்கு பிறகுதான் பாதுகாப்பு சட்டம் அமலாகியுள்ளது. பல்வேறு நாடுகளிலும் ஏஐயின் பாதிப்பை இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை. டீப்ஃபேக் வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவை எது உண்மை, பொய் என்ற குழப்பத்தை மக்களுக்கு ஏற்படுத்தும். தேர்தல் நேரத்தில் இதுபோன்ற ஏஐ தலையீடுகள், முறைகேடுகள் அதிகம் வெளிவரலாம். அரசியல் கட்சிகளுக்கு இதில் லாபம் அதிகம். இன, சாதி, மத கலவரத்தை தூண்டிவிட்டு லாபத்தை அடைவார்கள். ஆனால் மக்கள் உணர்ச்சிவசப்பட்டு வன்முறையில் இறங்கி வாழ்க்கையை தொலைத்துவிடுவார்கள். 








கார்டியன் வீக்லி

அலெக்ஸ் ஹெர்ன், டான் மில்மோ

 

மூலக்கட்டுரையை தழுவியது. 

டெனர்.காம்

கருத்துகள்