தனது குடும்ப சொத்தை மீட்டு சிதறிய குடும்பத்தை ஒருங்கிணைக்கும் நாயகன்!

 









சர்தா புல்லோடு 


வெங்கடேஷ் , நக்மா, சங்கவி 


தனது அம்மாவை வேசி என சொல்லி அப்பாவிடம் இருந்து பிரித்து அவரை குடிநோயாளியாக்கி, தங்கையை பணி மனுஷியாக்கும் அத்தையை பழிவாங்கும் நாயகனின் கதை. 


மேலே சொன்ன விஷயங்களை சீரியலுக்கு பொருத்தமாக வைக்கலாம். ஆனால் படத்திற்கு கதையாக வைத்து எடுத்தால் எப்படியிருக்கும்? கண்றாவியாகவே இருக்கும். மாற்றமே இல்லை. அதேபோல்தான் இருக்கிறது. கொஞ்சம் ஆசுவாசமாக இருக்க சங்கவி, நக்மாவின் கிளுகிளு நடனம் உதவுகிறது. 


தெலுங்குபடங்களில் நாயகியை ஸ்டாக்கிங் செய்து காதலிக்கும் வம்பு பண்ணும் நாயகன் கூடவே அவரது மாமியாரையும் பாலியல் சீண்டல்களை செய்து ஆண்மையை நிரூபிப்பது வழக்கம். இதை நகைச்சுவை என நினைத்து செய்கிறார்கள். ஆனால் சண்டாளமான காட்சியாக வந்துவிடுவது வாடிக்கை. இதிலும் மாமியார் மஞ்சுளாவுக்கு அப்படியான காட்சிகள் ஒன்றல்ல இரண்டை வைத்திருக்கிறார் இயக்குநர். தெலுங்கில் இரு நாயகிகளை இடுப்பில் வைத்து ஆடுவது, அத்தை, அத்தை பெண்கள் இருவர் என த்ரீசம், ஃபோர்சம் செய்வதெல்லாம் உண்டு. கண்களைக் கட்டும் காம வித்தைகள் அவை. 


கோட்டா சீனிவாசராவ், சத்ய நாராயணா என இரு நடிகர்கள் நன்றாக நடித்திருக்கிறார்கள். வேறு யாரும் நம்பிக்கை தரவில்லை. படம் அதுபாட்டிற்கு நகர்ந்து செல்கிறது. சிரமமாக இருக்கும்போது சங்கவி அல்லது நக்மா வந்துவிடுகிறார்கள். பாடல் வந்துவிடும். நாயகி இருவரின் தொடைகளைப் பார்த்தால் கதை மறந்துவிடும் என இயக்குநர் நம்பியிருக்கிறார். 


தங்கையை சூடுபோட்டு அப்பாவின் சொத்தை அனுபவித்து கிராமத்து சபைக்கான திட்ட பணத்தை கையாடல் செய்யும் மாமியாரை, நாயகன் எப்படி பழிவாங்கியிருக்கவேண்டும். போதையில் மாமியாரோடு உடலுறவு கொண்டதாக நாடகமாடி அவரை திருத்துகிறார் நாயகன். வாட் எ கிரியேட்டிவிட்டி சாரே! நக்மாவை சந்திக்கும் முதல் காட்சியில் அவரைத் தொடாமல் முத்தமிடவேண்டும் என்ற சவாலை நாயகன் ஏற்கிறார். கணினியில் உள்ள நக்மாவின் புகைப்படத்திற்கு முத்தமிடுகிறார். அதை அவர் ஏற்காதபோது, மார்பிங் செய்து அவரது உடைகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கிறார். இதனால் நாயகி மிரள்கிறார். பந்தயத்தில் தான் தோற்றதை ஏற்கிறார். இதை காதல் காட்சி என கூறுவதா என்னவென்று எனக்கு புரியவில்லை. இதுபோல ஏராளமான அபத்த காட்சிகள் படம் நெடுக உண்டு. 

வணிக சினிமா சரி. ஆனால் அறிவியலுக்கு புறம்பான மூடநம்பிக்கையை ஏற்படுத்துவதுதான் சகிக்க முடியவில்லை. தன்னை எதிர்ப்பவர்களை வில்லி சிவப்பு சாயத்தை நீரில் கலக்கி அவர்களின் சட்டை மீது ஊற்றி காளை மாட்டை அவிழ்த்துவிட்டு கொல்ல வைக்கிறார். இதையெல்லாம் காட்சியாக யோசித்த இயக்குநருக்கு நிச்சயம் மாட்டு மூளைதான் இருக்கவேண்டும். 

கோமாளிமேடை டீம் 




கருத்துகள்