சுரத்தே இல்லாத சவால்களும், மாறுவேட குத்தாட்டங்களும்!

 








சாணக்யா சபதம்


சிரஞ்சீவி, விஜயசாந்தி,கோபால்ராவ்


விமானநிலையத்தின் கஸ்டம்ஸ் அதாவது சுங்கத்துறை அதிகாரி சாணக்யா, கள்ளக்கடத்தல் தொழிலதிபருடன் மோதி வெல்லும் கதை. 


படத்தில் பாடல்களும் அதற்கு நாயகனும் நாயகனும் ஆடினால் போதும் என்ற மனநிலையில் எடுக்கப்பட்டுள்ளது. அதைத்தாண்டி இந்த படத்தில் வேறு எந்த அம்சமும் உருப்படியாக இல்லை. சுங்கத்துறையில் வேலைக்கு வரும் முதல்நாளே நாயகியைக் காப்பாற்றி கடத்தல் செய்யப்பட்ட வைரங்களை பிடித்துக்கொடுக்கிறார் நாயகன் சாணக்யா. சுங்கத்துறையின் தலைவருக்கு கள்ளக்கடத்தல் செய்யும் தொழிலதிபர் மீது நல்ல அபிப்ராயம் உள்ளது. இதை அறிந்த சாணக்யா, தனது விசாரணையை அமைதியாக செய்யாமல் சவால் விடுவது எனது குணம். என் பெயர்தான் சாணக்யா என லூசு தனமாக ஏதோ பேசுகிறார். வில்லனிடமே இப்படி பேசி பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார்.


வில்லனும் சாதாரணமான ஆள் இல்லை. வில்லனின் மகன் விமானியாக உள்ளார். அதை வைத்து பொருட்களை கடத்தல் செய்கிறார். இதை விமான பணிப்பெண் சசிரேகா, கண்டுபிடித்து நாயகனுக்கு தகவல் கொடுக்கிறார். இப்படித்தான் கதை நகர்கிறது. நாயகன், வில்லனின் விமானி மகனை ஆதாரத்துடன் பிடித்து நீதிமன்றத்தில ஒப்படைக்க நினைக்கிறார். அப்போது வில்லன், நாயகனின் அப்பாவைக் கடத்தல் வழக்கில் சிக்க வைக்கிறார். பிறகு கடத்தி சென்று மகன் மீதுள்ள வழக்கை கைவிட செய்கிறார். இதன் காரணமாக நாயகனுக்கு வேலை பறிபோகிறது. அப்புறமென்ன வில்லனை பழிதீர்ப்பதுதான் இறுதிக்காட்சி. 


எப்படி கடத்துகிறார்கள், என்னென்ன நுணுக்கங்களை பின்பற்றுகிறார்கள் என்று காட்டியிருந்தால் கூட படம்  சுவாரசியமாக வந்திருக்கும். ஆனால் அதெல்லாம் ரிஸ்க்தானே என நினைத்த இடத்தில் எல்லாம் விஜயசாந்தியையும், சிரஞ்சீவியையும் குத்தாட்டம் ஆட வைத்து பாடல்களை வைத்தே நிரப்பியிருக்கிறார்கள். படத்தில் கோல்டன் பிரதர்ஸ் என வரும் காட்சிகளெல்லாம் ஸ்ஸ்... அப்பப்பா..... என்னை சோதிக்காதீங்கடா என சொல்ல வைக்கின்றன. படத்தின் ஒரு காட்சியில் கோபால்ராவ் சோபாவில் அயர்ச்சியாகி தளர்ந்து படுத்திருப்பார். மேலே மாடியில் சிரஞ்சீவி, விஜயசாந்தியோடு குத்தாட்டம் ஆடிக்கொண்டிருப்பார். படமும், பார்வையாளர்களின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது. 


விஜயசாந்தியின் குடும்ப காட்சிகள் சன்டிவி சீரியல் போலவே இருக்கின்றன. 


சாணக்கிய புத்திசாலித்தனமும் அறிவும் படத்தில் எள் அளவும் இல்லை. நாயகன் செய்வது அடி,உதைதான். வேறு ஏதுமில்லை. 


கோமாளிமேடை டீம்


கருத்துகள்