வாழ்க்கை, இறப்பு என இரண்டு புள்ளிகளுக்குள் ஓடும் ஓட்டம்!

 






வாழ்க்கையில் நல்லது, கெட்டது என இரண்டு விஷயங்களும் உண்டு. இதை ஒருவர் தவிர்க்கவே முடியாது. நல்ல விஷயங்களை எதிர்கொள்ளும் நேரம், நினைத்தே பார்க்க முடியாத விஷம் கொண்ட சுயநலமான மனிதர்களையும் எதிர்கொள்ளவேண்டும். இதுதான் ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரையில் ஒருவரை சுழன்றடித்துக்கொண்டே வருகிறது. நன்மை, தீமை என இரண்டு விஷயங்களுமே சமூகத்தை ஒருவகையில் முன்னே நகர்த்துகின்றன என்று கூறவேண்டும். ஒன்று இல்லாதபோது மற்றொன்று இல்லை. 


இறப்பு பற்றிய பயத்தை ஒருவர் நீக்கிக்கொள்ளவே பாலியல் மீதான ஈர்ப்பு உதவுகிறது என ஃப்ராய்ட் கருதினார். ஆராய்ச்சியாளர் மெலானி கிளெய்ன், இந்த கருத்தை விரிவுபடுத்தினார். இறப்பு பயத்தை வெளியே கொண்டு வந்தால், அது உள்ளுணர்வில் ஆபத்தை உணர்ந்து தப்பிக்கும் ஆவேசம் கொண்ட தன்மையை அடைகிறது. இதை பாலியல் உணர்வுக்கு எதிராக நிறுத்தலாம். வளர்ச்சி, புதுமைத்திறன் என்ற ஆசைகள் எந்தளவு ஆழமாக வேர்விடுகிறதோ, அதற்கு நிகராக அதை எதிர்க்கும் அழிவு சக்திகளும் வேர்விட்டு வளர்கின்றன. இந்த முரண்பாடுகள்தான் வன்முறை, ஆவேசம் ஆகியவற்றுக்கு அடிப்படையான காரணமாக அமைகிறது. பிறந்த குழந்தை வெளியுலகிற்கு ஏற்ப வாழ தன்னை மாற்றிக்கொள்ள போராடித்தான் அழுது தனது வருகையை அறிவிக்கிறது. அதற்குப்பிறகும். அந்த குழந்தை உயிரோடு வாழ அம்மாவின் பாதுகாப்பு தேவைப்படுகிறது. வாழ்வு, இறப்பு, வலி, வேதனை, மகிழ்ச்சி என்பவை மனிதர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்களிப்பு கொண்டுள்ளன. 


இறப்புக்கு எதிரான போராட்டமே வாழ்க்கை. வாழ்க்கை, இறப்பு என இரண்டு புள்ளிகளுக்கு இடையே மனிதர்கள் பதற்றம், வலி, வேதனை, மனச்சோர்வு, விரக்தி ஆகிய உணர்ச்சிகளோடு பயணிக்கிறார்கள். இந்த உணர்ச்சிகள், உளவியல் ரீதியாக கடுமையான அழுத்தத்தை தருகின்றன. ஆனாலும் வாழ்வு மீதான ஆசை, மனிதர்களை முழுக்க வீழ்ந்துவிட இறந்துவிட அனுமதிப்பதில்லை. உடலில் முக்கியமான புள்ளியில் கத்திகுத்து பட்டாலும் கூட தனது காதலியிடம் சென்று சேர்ந்துவிடவேண்டும் என காதலன் தவிப்பதைப் போல. இவற்றை எதிர்கொள்ள ஒரே வழி. எதிர்மறையான அனைத்து தன்மைகளையும் ஏற்றுக்கொண்டு அதை சகித்த்துக்கொள்வதுதான். இப்படி செய்வதன் மூலம் அவர் மோட்ச நிலையை அடைவாரா என்றால் இல்லை. அவர் இறப்பு நோக்கிய தனது வாழ்க்கையை போராடி வாழ்கிறார். அவ்வளவுதான். மெலானியா கிளெய்ன் கண்டறிந்த ஆய்வு உண்மை இதுவே. 


மெலானியா கிளெய்ன்


ஆஸ்திரியாவில் பிறந்த உளவியலாளர். பெற்றோர் விவாகரத்து பெற்று தனித்தனியாக பிரிந்துவாழ்ந்த காரணத்தால் மெலானியாவுக்கு எதிர்பார்த்த அன்போ, பாசமோ கிடைக்கவில்லை. பதினேழு வயதில் மணமானது. மருத்துவம் படிக்க நினைத்தார். 1910ஆம் ஆண்டு ஃப்ராய்ட் எழுதிய நூலை படித்தபிறகு மனப்பகுப்பாய்வு ஆய்வாளராக மாற நினைத்தார். அப்போது மெலானியா தனது வாழ்வில் உறவினர்களின் இறப்புகளை சந்தித்திருந்தார். இதனால் இறப்பு பற்றிய பயம் உருவாக, மனஅழுத்தத்தில் மாட்டிக்கொண்டார். அதுதான் அவரது ஆய்வுக்கு மையப்பொருளாக உதவியது.  


உளவியல் சார்ந்த கல்வியோ, பட்டங்களோ பெறாதபோதும் மெலானியா உருவாக்கிய கொள்கைகள் முக்கியமானவையாக இன்றும் கருதப்படுகின்றன. இவர் மனநல குறைபாடுகளுக்கு விளையாட்டை தெரபியாக வழங்கலாம் என்று கூறியவர். 


முக்கிய படைப்புகள்


1932 the psychoanalysis od children


1935  a contribution to the psychogenesis of maniac depressive states


1961 narrative of a child analysis



பின்டிரெஸ்ட்


கருத்துகள்