தாய்மொழி என்பது நமது போர்க்கருவி!

 

 

 



பெரியார் ஆயிரம்

பாட புத்தக கமிட்டியில் உள்ளவர்கள், தமிழர்களுக்கு மான உணர்ச்சி, நாட்டு உணர்ச்சி, இன உணர்ச்சி இருக்குமானால் இராமாயண, மகாபாரத கதைகளை சரித்திரத்தில் சேர்க்க சம்மதிப்பார்களா?

நம் பிள்ளைகளுக்கு நம்மைப் பற்றி கீழ் வகுப்பில் இருந்து தெரிந்துகொள்ள வழி செய்தால் ஒழிய எப்படி அவர்கள் தங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். பண்டிதர்கள், உபாத்தியாயர்கள் இவற்றை நாம் சொல்லும்போது நம்மீது பாய்கிறார்களே தவிர, தமிழர்களுக்கு இழிவு தரக்கூடிய, முற்போக்கைத் தடுக்கக் கூடிய, பகுத்தறிவுக்கு ஒவ்வாதவற்றைக் கற்பிப்பது குறித்து கவலைப்படுவதில்லை.

பள்ளியில் தமிழர் திராவிடர் என்ற வார்த்தைகளுக்கு இடமில்லை. அங்கு அய்யர், பிராமணன் போன்ற வார்த்தைகள் மட்டுமே காணப்படுகின்றன. மேல்வகுப்புக்கு வந்தால் தமிழ்நாட்டு சரித்திரம் இல்லை. இராமாயணம், மகாபாரதம், அசோகன், முஸ்லீம், வெள்ளையர் ஆட்சியும்தான் விளக்கப்படுகிறதே  தவிர திராவிடர் தமிழர் ஆட்சியைப் பற்றி காண்பது மிகவும் அருமை. அப்படி ஏதாவது காணப்பட்டாலும் அது பெரும் பித்தலாட்டமும், மோசடியுமாக இருக்கும்.

தமிழ் மக்களை பகுத்தறிவு விஷயத்தில் மரக்கட்டையாக்கிவிட்டு தமிழர் அல்லாதவர்கள் அடிமைப்படுத்தி சுரண்டி கொள்ளை கொள்வதைத் தடுக்க வேண்டாமா?

 பிள்ளைகளில் மூடக்கருத்துகளை, தமிழர் விரோத கருத்துகளை நீக்கி, அறிவுவளர்ச்சி, மான உணர்ச்சிக்கு உகந்த பாடங்களை வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நமக்கு சுதந்திரம் உள்ள கல்வி இலாகாவில் இம்மாற்றம் செய்யாமல் வேறு எதில் விடுதலை பெறப்போகிறோம்?

மொழி என்பது உலக போட்டிப் போராட்டத்துக்கு ஒரு போர்க்கருவியாகும். போர்க்கருவிகள் காலத்துக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும். அவ்வப்போது கண்டுபிடித்து கைக்கொள்ள வேண்டும்.

புலவர்கள், அறிஞர்கள் என்பவர்களுக்கு உலக மாறுபாட்டை அறிந்து அதற்கேற்ப வாழ்வியலை அமைத்துக்கொடுக்க வேண்டியது அவர்கள் கடமையாகும்.

நம் புலவர்கள், மாறுபாட்டை விரும்பாதவர்கள் மூவாயிரம் வருஷத்திற்கு முன்பிருந்ததை மூடச்செய்திகளைப் பரப்பவும் நிலைநாட்டவும் முயற்சிப்பவர்கள்.

போராட்டம் என்பது ஆயுதங்களைக் கொண்டு சண்டையிடுவது மட்டும் இல்லை. அறிவு கொண்டு வாய்ப்புகளை மற்றவருக்கு விடாமல் உள்ள வாய்ப்புகள் அவ்வளவையும் தமக்கே பயன்படுத்திக் கொள்ளுதலும் போராட்டம்தான்.

பார்ப்பனர் இந்தியா முழுமையிலும் கல்வி வாய்ப்புகளையும், உத்தியோக வாய்ப்புகளையும் தங்களுடையதாக தொடர்ந்து பல நூறு ஆண்டுகளாக வைத்துக் கொண்டிருக்கின்றனர். இது அறிவு அடிப்படையில் சூழ்ச்சியையும் தந்திரத்தையும் பயன்படுத்தி வென்ற வெற்றியாகும்.

தாய்மொழியிடத்து அன்பில்லாதவர்களுக்கு தாய்நாட்டின் மீதும் அன்பிராது. எனவே, ஒவ்வொரு தமிழ் மாணவனும் தமிழ் கற்க வேண்டும்.இதனால் தமிழ் வளர்ச்சி அடையும், தாய்நாடான தமிழ்நாடு சிறப்புற்றோங்கும்.

படித்த தமிழர்கள் கூட ஆரியத்தின் அடிவருடியாகவே இருந்து வருகின்றனர். தமிழர்க்கு துரோகமும் செய்கின்றனர். ஒரு சிலர் விலாங்கு மீன் போல இருபக்கமும் நடிக்கின்றனர்.

தமிழ்ப் பாட்டுகள் புராண மூடநம்பிக்கை கொண்ட பாடல்களாக இருக்க கூடாது.
நல்ல தமிழில் இயற்கை எழில்களையும், தமிழரின் வீரத்தையும், அன்பையும், சமத்துவத்தையும் மானத்தையும் நேர்மை, நீதிநெறிகளையும், தமிழ்நாட்டுப் பற்றையும், மொழிப்பற்றையும், ஒற்றுமையையும், வரலாற்று அறிவையும் உள்ளடக்கி இருக்கவேண்டும்.

இந்திக்கு பெருந்தொகை செலவிடப்படுவதால் எந்தப் பயனும் இல்லை. 100க்கு 97 பேர் ஆரியப் பார்ப்பனர்களே அதைப் படிக்கின்றனர். எந்த தமிழரும் அதைப் படிக்கவில்லை.

எனது நாடு எனது லட்சியத்திற்கு உதவாது என்று கருதினால் உதவும்படி செய்யமுடியாது என்று கருதினால் விட்டுவிட்டுப் போய்விடுவேன்.

எனது பாஷை என்பதானது, எனது லட்சியத்திறகு எனது மக்கள் முற்போக்கடைவதற்கு மானத்துடன் வாழ்வதற்கு பயனளிக்காது என்று கருதினால், உடனே அதனை விட்டுவிட்டு பயனளிக்க கூடியதைப் பின்பற்றுவேன்.

தமிழ், இந்த நாட்டு மக்களுக்கு சகல துறைக்கும் முன்னேற்றமளிக்கக்கூடியதும், சுதந்திரத்தை அளிக்கக்கூடியதும் மானத்துடனும், பகுத்தறிவுடனும் வாழத்தக்க வாழ்வை அளிக்க கூடியதும் என்பது எனது அபிப்ராயம்.
 
யான், தாழ்த்தப்பட்டோருக்காக தனியாக உழைக்கிறேன் என்று உங்களிடையே பொய் கூறமுடியாது. அவ்வித எண்ணம் எனக்கில்லை. ஆதிதிராவிடன், திராவிடன் என்ற பிரிவையே நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது. எல்லோரும் திராவிடர்கள் என்பதே எங்களது திட்டமாகும்.
 

 


https://in.pinterest.com/pin/976436762957119111/

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்