கல்யாண வீடுன்னா மாப்பிள்ளை, இழவு வீடுன்னா பொணம் - என்பிடி ஆளுமைகள்

 










அமெரிக்காவில் மேரிலேண்டில் பெல்ட்வே ஸ்னைப்பர் என்ற கொலைகாரர்கள் உருவாகி வந்தனர். இவர்கள் 2002ஆம் ஆண்டு பிரபலமாக இருந்தனர். ஊடகங்கள் இவர்களைப் பற்றிய செய்தியை ஏகத்துக்கும் வெளியிட்டு மக்களின் பயத்துக்கு நெய் வார்த்தனர். இவர்களின் கொலை பாணி என்பது எளிதானது. ஆனால் பிறர் கண்டுபிடிப்பது கடினம். காரில் அமர்ந்து செமி ஆட்டோமேடிக் துப்பாக்கியை வைத்து வந்தவர் போனவர் என யாரையும் கவலைப்படாமல் குறிவைத்து சுட வேண்டியதுதான். தோட்டா எங்கிருந்து வருகிறது என கண்டுபிடிப்பதற்குள் ஏகப்பட்ட உயிர்கள் போயிருக்கும்.

இவர்கள் தங்கள் தில்லுக்கு துட்டு கிடைக்கும் என உறுதியாக நம்பி கடிதம் ஒன்றை காவல்துறைக்கு அனுப்பினர். உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். நீங்கள் எங்களை கடவுள் என அழைக்கவேண்டும் என கடிதம் எழுதியிருந்தனர். காவல்துறை அந்த கடிதத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அது கொலைகாரர்களின்  மனநிலையை வெளிப்படையாக வெளிப்படுத்துவது. சென்ற அத்தியாயத்தில் கூறிய சமாச்சாரம் உங்கள் நினைவில் இருக்கும் என நினைக்கிறேன். துப்பாக்கித் தோட்டா செலவுக்கு கூட ஆகாத வழியில் எதற்கு மக்களை கொல்ல வேண்டும்? காசுக்காகத்தான். மக்கள் பயந்தால் தானே அதை வைத்து காசு கேட்டு மிரட்ட முடியும்? மக்களைக் காப்பாற்ற வேண்டுமா, உடனடியாக பத்து மில்லியன் டாலர்களை அனுப்புங்கள் என்று ஸ்னைப்பர் குழு மிரட்டியது. காவல்துறை சும்மா இருக்குமா?

மால்வோ, முகமது என இருவரையும் இறுதியில் பிடித்து ஸ்னைப்பர்களின் தாக்குதலை நிறுத்தியது. இதில் மால்வோ பதினேழு வயதான இளைஞன். அவனை மூளைச்சலவை செய்து முகமது கொலை செய்யும் வேலையை செய்ய வைத்திருக்கிறார். முகமதுவுக்கு என்ன பிரச்னை? அவரது முன்னாள் மனைவியுடன் ஏதோ தகராறு. அதை தீர்க்கவே துப்பாக்கியை எடுத்துவந்து மக்களை சுட்டுக் கொன்றிருக்கிறார். முகமதுவுக்கு பதிமூன்று கொலைகளுக்கு தண்டனையாக மரண தண்டனையும், மால்வோவுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

மதநூல்களை படித்துக்கொண்டு மதகுருவின் சொல்பேச்சு கேட்பவர்கள் நாட்டிற்கு ஆபத்தானவர்கள். அவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பிற நாட்டு உளவாளிகளை அவர்களால் நாட்டு மக்களுக்கு நேரும் ஆபத்துகள் அதிகம். உதாரணம். கோட்சே. ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினரான கோட்சே அங்கு கூறும் உளறல்களை, வெறுப்பு வாதங்களை கேட்டுக்கொண்டு வந்து காந்தியை சுட்டுக்கொன்றார். அவருக்கு இறுதிவரை தான் செய்தது சரிதான் என்ற உறுதியும் பிடிவாதமும் இருந்தது. இந்தியாவில் இவர் ஒரு உதாரணம். உலகம் முழுக்க இப்படிப்பட்ட வெறிபிடித்த முட்டாள்கள் உண்டு. இதில் உச்சம் தன்னை இயேசுவாக, நபியாக, ராமனின் அவதாரம் என்று சொல்லிக்கொண்டு அடாத செயல்களைச் செய்வது. பெரும்பாலும் இவர்களின் உளவியல் என்பது சுயவிரும்பிகளாக, மனநிலைக் குறைபாடுகளைக் கொண்டதாகவே இருக்கும்.

மனிதனை பித்தாக்க இங்கு மதம், கடவுள் ஆகியவை கருவியாக உள்ளது. தான் இந்த உலகில் பிறந்ததே பிறரை நல்வழிப்படுத்தவே, தனது கருத்துக்கு ஒவ்வாதவர்கள் கொல்லவே என்று நினைத்து தனிப்பாதையில் செல்வார்கள். தி டயக்னாஸ்டிக் அண்ட் ஸ்டாடிஸ்டிகல் மேனுவல் ஆஃப் மென்டல் டிஸார்டர் என்ற நூலில் இதற்கான வரையறை உள்ளது. பெரும்பாலும் தன்னைத்தானே முக்கியப்படுத்திக்கொண்டு பிறரை வெறுத்து ஒதுக்கி நல்ல உறவைப் பேண முடியாதவர்களுக்கு என்பிடி பிரச்னை இருக்கும். நார்சிஸ்ட் பர்சனாலிட்டி டிஸார்டர் என்பதுதான் இதன் பெயர். செக்ஸ் குற்றங்களை செய்பவர்களுக்கு இந்த குறைபாடு இருக்கும். ஜான் கேசி, டெட் பண்டி ஆகியோர் இதற்கு சரியான எடுத்துக்காட்டு.

என்பிடியின் அறிகுறிகள்

தகுதி இருக்கிறதோ இல்லையோ தாங்கள்தான் முக்கியமானவர்கள் என நினைப்பார்கள்.

அதிகாரம், வெற்றி ஆகியவற்றைப் பற்றி மட்டுமே நினைத்து அதைநோக்கி செல்வார்கள்.

மரியாதை கிடைக்கவேண்டும் என நினைப்பார்கள்.

தனது விருப்பங்களுக்கு உடனடியாக மதிப்பு, பாராட்டு கிடைக்கவேண்டுமென எதிர்பார்ப்பார்கள்.

பிறரை விட மேலான லட்சியங்களைக் கொண்டிருப்பதாக காட்டிக்கொள்வார்கள்.

பிறரின் தேவை, உணர்வுக்கு மிகச்சிறியளவு மட்டுமே மதிப்பு கொடுப்பார்கள்.

மற்றவர்கள் தன்னைப் பார்த்து பொறாமை படுகிறார்கள் என நினைப்பார்கள்.

போகுமிடமெல்லாம் அதிகாரத் தோரணையோடும் ஆக்ரோஷத்தோடும் நடந்துகொள்வார்கள்.

 

இந்த குறைபாடு உள்ளவர்கள் அலுவலகத்தில் குடும்பத்தில் வேறு இடங்களிலும் கூட இருக்கலாம் அதெல்லாம் பிரச்னையில்லை. ஆனால் குற்றங்களில் இறங்கினால்தான் நாம் கவனிக்க வேண்டும். இந்த மனநிலை குறைபாடு கொண்டவர்கள் குற்றவாளிகளாக இருந்தால், அவர்கள் தங்களின் குற்றங்களை முதன்மைபடுத்தி ஊடகங்களில் பெயர், புகைப்படம் வர மெனக்கெட்டு போஸ் கொடுப்பார்கள். விசாரணை அறை, நீதிமன்றம் என இடம் ஏதாகிலும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள முயல்வார்கள். அதற்கு என்னவேண்டுமென்றாலும் செய்வார்கள். வரலாற்றிலேயே தன்னைவிட பெரிய மோசமான குற்றவாளி இருக்கமுடியாது என்ற அளவில் நடந்துகொள்வார்கள். கொலை செய்தவர்களின் எண்ணிக்கையை அதிகமாக கூறுவது, கொலைபாணியை சினிமா இயக்குநர் காட்சியை விவரிப்பது போல சொல்வது, தனது வாழ்க்கையை நூலாக எழுதுவது ஆகியவற்றை செய்வார்கள்.

 


கருத்துகள்