குழந்தைகளை கொன்று சமைத்து சாப்பிட்ட பெண்மணி, கண்களை மட்டும் வெட்டியெடுத்த ஆசிரியர்!

 










அசுரகுலம் 3

ரத்த சாட்சி 1.0

மின்னும் கண்கள்.

தொண்ணூறுகளில் அமெரிக்காவில் குற்றச்சம்பவம் நடைபெற்றது. விலைமாதுக்கள் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். ஆனால் அவர்களின் கண்கள் மட்டும் அறுவை சிகிச்சை மருத்துவரால் வெட்டி எடுக்கப்பட்டது போல இருந்தது. ஆனால் யார் இதை செய்தது என காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை. சில மாதங்கள் கழித்து ஒருவரின் கொலை முயற்சியில் தப்பித்த பெண் ஒருவர் காவல்துறையினர் உதவியை நாடினார். அந்த நபர் பற்றி விசாரித்தபோது அவர் பெயர் சார்லஸ் ஆல்பிரைட் என்று தெரிய வந்தது. இவர், பள்ளியில் தாவரவியல் ஆசிரியராக  வேலை செய்துகொண்டிருந்தார். மேலும் பேஸ்பால் விளையாட்டுக்கு பயிற்சியாளராகவும் இருந்தார். இவர்தான் பெண்களைக் கொன்று கண்களை மட்டும் வெட்டி எடுத்தவர் என காவல்துறையினர், அவரது அறையை சோதித்து முடிவு செய்தனர்.

சார்லஸிற்கு பெண்களின் உடல் மீது பெரிய ஈர்ப்பு கிடையாது. அவருக்கு பிடித்தது கண்கள்தான். அதுதான் அவரை கொலை செய்வதற்கான ஈர்ப்பை உருவாக்கியது. பின்னாளில் சிறையில் இருந்தபோது கூட சுவற்றில் கண்களை வரைந்து வைத்துக்கொண்டே இருந்தார். ஃபெட்டிஷ் என முன்னர் சொன்னது போல குறிப்பிட்ட உடல் பாகங்களை வெட்டி வைக்கும் கற்பனை கொண்ட கொலைகாரர் சார்லஸ். பல்வேறு மொழிகளை பேசும் புத்திசாலியான நட்பான ஆள்தான். ஆனால் மோசமான கற்பனைகளால் அவரது வாழ்க்கை அவரது மனைவிக்கே தெரியாமலேயே கூட சிதைந்துகொண்டிருந்தது.

பிள்ளைக்கறி

சிவனுக்கே பிள்ளைக்கறி படைத்தவர்கள் வாழ்ந்துவிட்டு போயிருக்கிறார்கள் என கடந்துவிடலாம். ஆனால் ஒருவரை வெட்டி கொல்வது, அவரது உடல்பாகங்களை வெட்டி உண்பது சட்டத்திற்கு புறம்பானது. இதற்கான மேற்குலக  ஆய்வு அடிப்படையில் 1912ஆம் ஆண்டு ஒரு குழந்தை காவல்நிலையத்திற்கு வந்து தன்னை ஒரு பெண்மணி கடத்தி அடைத்து வைத்திருந்ததாகவும் இறந்தவரின் உடல் இறைச்சியை தின்ன கொடுத்ததாகவும் புகார் கொடுத்தது.

அதை ஒதுக்காமல் விசாரிக்க சென்ற காவல்துறையினர், அங்கு மார்ட்டி என்ற பெண்மணி குழந்தைகளை கடத்தி கொல்வதோடு, கொன்ற உடல் உறுப்புகளை தானும் தின்று வந்திருப்பதைக் கண்டறிந்தனர். மேலும், ஆறு குழந்தைகளுக்கு மேல் கொலை செய்திருப்பதை ஆதாரங்கள் மூலம் உறுதி செய்தனர்.

அடுத்து ஜெர்மனிக்கு விமானம் ஏறுவோம். அங்கு பெர்லின் நகரில் கறிக்கடைக்கார ர் ஒருவர் வாழ்ந்து வந்தார். கிராஸ்மன் என்பது அவரது பெயர். வீட்டுக்கு மஜாவாக இருக்க விலைமாதுக்களை கூட்டி வருவதும் அனுப்பி வைப்பதுமாக இருந்தார். ஒருமுறை அவரது வீட்டில் பெண் ஒருவர் அலறும் ஒலியை பக்கத்து வீட்டினர் கேட்டிருக்கிறார்கள். உடனே காவல்நிலையத்திற்கு என்னமோ ஏதோ என தகவல் கொடுத்துவிட்டனர். வந்தவர்கள் அவரது வீட்டை ஆராய்ந்து நான்கு பெண்களை இதற்கு முன்னரே கொன்று இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

கிராஸ்மன் எப்படியென்றால், விலைமாதுக்களை கூட்டி வந்து சுகமாக இருந்துவிட்டு அனுப்பிவிடுவது வழக்கம். ஆனால் அவருக்கு மனநிலை சரியில்லை என்றால் பெண்களை கொன்றுவிட்டு அவர்களை துண்டு துண்டாக வெட்டி கறிக்கடையில் உள்ள கறியில் கலந்து ஆஃபரில் விற்றுவிடுவார். சில உறுப்புகளை நாமும் சாப்பிட்டு பார்ப்போம் என சாப்பிட்டும் வந்தார். பதினான்கு பெண்களை கொன்றதற்காக தண்டனை கிடைத்தது. அதாவது ஆதாரங்கள் அவ்வளவுக்குத்தான் கிடைத்தது. ஆனால் அதற்கு முன்னே ஐம்பது பெண்களை கொன்றிருந்தார் கிராஸ்மன்.

போலந்து நாட்டைச் சேர்ந்தவர் டெங்கே. இவர் கடவுளை வழிபட்டு வந்தவர். பிறருக்கு தேவைப்பட்டால் உடனே உதவி செய்பவர் என நல்லபெயர் ஊருக்குள் இருந்தது. அதெல்லாம் அவர் தன்னை தாக்கினார் என ஒருவர் டெங்கே மீது புகார் கொடுத்து காவல்துறை டெங்கேவின் வீட்டுக்கு வரும்வரைதான். அங்கு வந்து சுற்றும் முற்றும் பார்த்தால், வீட்டு ஃப்ரிட்ஜில் நிறைய இறைச்சி இருந்தது. எல்லாமே மனிதர்களின் உடல் உறுப்புகள், தசை. பக்கெட்டில் ரத்தம் பிடித்து வைத்திருந்தார். காவல்துறை வந்தபோது முப்பத்தியொரு நபர்களைக் கொன்று அவர்களின் உடல் உறுப்புகளை ஒன்றையேனும் வேக வைத்து அல்லது ஊறுகாய் போட்டு தின்றிருந்தார் டெங்கே.

கொன்றவர்களின் உடல் தோலை கடவுள் வழிபாட்டிற்கு பயன்படுத்தியிருந்தார் டெங்கே. பிறகு தண்டனை கிடைத்து சிறையில் அடைக்கப்பட்டபோது கடவுளின் குரல் காதில் கேட்டதோ என்னமோ தற்கொலை செய்துகொண்டார்.

 

 








கருத்துகள்