அப்பாவின் குடிப்பழக்கத்தால் குற்ற உலகில் நுழைந்த சகோதரர்கள்

 









ஒருவர் கொலை செய்கிறார் என்றால் அதற்கு அவர் மனதில் தோன்றும் எண்ணம் மட்டும் காரணமல்ல. அவருக்கு ரோல்மாடலாக யாரேனும் குடும்பத்தில் இருந்திருக்கலாம். கொலை செய்துவிட்டு சிறை சென்றிருக்கலாம். அவரே கொலை செய்வதற்கான ஆர்வத்தை பயிற்சியை புகைப்படங்கள், வீடியோக்கள், வேட்டை வழியாக தூண்டியிருக்கலாம். இந்த வகையில் கென்னத் பியான்சி, ஆஞ்சலோ பியூனோ, ஹில்சைட் ஸ்ட்ரேங்லர்ஸ் ஆகியோர் உறவினர்களாக இருந்தனர் இவர்களால் ஒரு டஜனுக்கும் மேல் பெண்கள் கொல்லப்பட்டனர்.

1964ஆம் ஆண்டு லாரி ரேனஸ் என்பவர் அமெரிக்காவில் சுற்றித் திரிந்து பல்வேறு கொலைகளை செய்தார். வீட்டில் அமைதியாக இல்லாத காரணத்தால் எப்போதும் கோபமாகவும் வீட்டுக்கு வெளியேதான் எப்போதும் இருந்தார். ராணுவப் பயிற்சி முடிந்தபிறகு இந்தியானா, ஓஹியோ, கென்டக்கி என சென்று கொண்டிருந்தார். போகும் வழியெல்லாம் கொலைகளைச் செய்தார். வண்டிகளை கைகாட்டி நிறுத்தி ஓட்டுநரைக் கொன்று அவரின் பணம், பொருட்களைக் கைப்பற்றுவதுதான் லாரியின் பாணி. காவல்துறை லாரியை பிடித்தபோது தான் கொன்ற பள்ளி ஆசிரியரின் ஷூக்களையும், வாட்சையும் திருடி கட்டியிருந்தார். லாரி.

விசாரணையில் ஐந்து நபர்களைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார். ஆனால் தன் அப்பா சிறுவயதில் அடித்து துன்புறுத்தியதாக வன்முறையில் கொலை செய்யத் தொடங்கியதாக கதை கட்டினார். மருத்துவர்களும் லாரியை ஆராய்ந்து மனநிலை பாதிப்பை உறுதி செய்தனர். இவர் எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸே நாவலில் வரும் பாத்திரத்தின் பெயரை தனக்கு வைத்துக்கொண்டார். பத்தொன்பது வயதில் லாரி செய்த வன்முறை செயல்களை அவரது அண்ணன் டேனி இருபத்தெட்டு வயதில் தொடங்கினார்.

லாரி, டேனி என இருவருக்கும் ஒரே பிரச்னைதான். குடிநோயாளியான அப்பா, போதையில் யார் அருகே இருந்தாலும் அடித்து உதைப்பார். சிறுவயது முதல் அடிபட்டு, உதைபட்டு வன்முறை சகோதரர்களின் மனதில் ஊறிப்போயிருந்தது. இவர்களுக்கு அடுத்து இரண்டு சகோதரிகளும் அடி உதைக்கு பழகியிருந்தனர்.   

ஒருவரை தாக்கிய வழக்கில் டேனியை காவல்துறை சிறையில் அடைத்தது. பிறகு பிணை கிடைக்க வெளியே  வந்தார். ஒரே மாதம்தான். சிறுவனோடு வந்த பெண் ஒருத்தியை கடத்தி வல்லுறவு செய்து கொன்றார். சிறுவனை அப்படியே விட்டுவிட்டார். வழிப்போக்கர்கள் சிறுவனை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். எரிபொருள் நிலையத்தில் வேலைக்கு சேர்ந்த டேனி, அங்குள்ள ஒருவரோடு சேர்ந்து இரு இளம்பெண்களை வேனில் கடத்தினர். அதில் அவர்களை வல்லுறவு செய்து கொன்றனர். இவர்களது உடல்களை கலாமாஜூ ஆற்றுப்பகுதியில் காவல்துறை கண்டெடுத்தது.

எரிபொருள் மையத்தில் வேலை செய்த வல்லுறவு கூட்டாளி, காவல்துறை விசாரிக்கும்போது தனது நண்பன் டேனிதான் இப்படி செய்யக் கூறினான் என சொல்லிவிட டேனியை காவல்துறை கைது செய்தது. தான் எந்த கொலையும் செய்யவில்லை என டேனி அடம்பிடித்தாலும் கூட்டாளி கூறிய அடையாளத்தின்படி பதினெட்டு வயதான பெண்ணின் உடலை காவல்துறை ஆற்றுக்கு ஒரு கி.மீ. தொலைவில் கண்டறிந்தது. எனவே டேனிக்கு எளிதாக நீதிமன்றம் கொலை, வல்லுறவுக்கான தண்டனையை விதித்தது.

குடும்ப சூழல்தான் ஒருவரை இப்படி மாற்றுகிறதா என சோதித்து பார்த்தால் அப்பாவின் வன்முறை, குடிப்பழக்கம், வறுமை ஆகியவை நிறைய அமெரிக்க குடும்பங்களில் இருந்தவைதான்.ஆ னால்  அனைவருமே துப்பாக்கியை கையில் எடுக்கவில்லையே.. கேரி கில்மோர் குடும்பத்தில் அவர் மட்டும்தான் கொலையாளியாக மாறினார். ஆனால் அதே குடும்பத்தில் கடைசி உறுப்பினரான மிகால் கில்மோர் விருதுபெற்ற இலக்கிய எழுத்தாளராக மாறினார். எப்படி சாத்தியமானது? இதற்கு ஒருவரின் எண்ணம். அதை பின்தொடரும் மனம் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது.

அமெரிக்காவில் கேரி லெவிங்டன், சார்லஸ் லெவிங்டன் ஆகியோர் ஒன்று சேர்ந்து ஓஹியோவில் மூன்று நபர்களை ரைபிளால் சுட்டுக்கொன்றனர். துப்பாக்கித் தோட்டாவை அடையாளம் வைத்து காவல்துறை குற்றவாளிகளைத் தேடியது. அப்போது கிரடிட் கார்ட் மோசடியில் சிக்கிய கேரி என்பவரை விசாரித்தபோது அவர்தான் கொலையாளி என்று காவல்துறை தீர்மானமாக நம்பியது. கொலையானவரின் கிரடிட் கார்டை எடுத்து பயன்படுத்தியபோது கேரி மாட்டிக்கொண்டார். விசாரணையில் சார்லஸ் என்ற தனது சகோதர ர்தான் கொலைகளுக்கு முக்கியமான காரணகர்த்தா என கேரி சொல்லிவிட்டார். சார்லஸ் ஒன்பது பேர்களையும், கேரி எட்டு பேர்களையும் கொன்றிருந்தனர். சிறையில் இருந்த சார்லஸ் புற்றுநோயால் இறந்தார். கேரி, மனநல மருத்துவமனையில் இருந்தார். அங்கிருந்து தப்பிக்க முயன்று மீண்டும் பிடிபட்டார்.

பெண்கள் மட்டும் கொலை செய்வதில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்களா என்ன? சிஸ்டர்ஸ் இன் பிளாக் என்று அழைக்கப்பட்ட மூன்று சகோதரிகள் தங்கள் பிள்ளை, கணவர்களை கொன்றனர். எதற்கு அல்டிமேட்டான பணத்திற்குத்தான். வர்ஜினியா, கரோலின், மேரிவார்ட்லோ என்பதுதான் சகோதரிகளின் பெயர். எப்போதும் மூவரும் கறுப்பு உடையில் தான் வலம் வருவார்கள். மகனை எரித்துக்கொன்றது, மகளை பாத்டப்பில் நீரில் அழுத்தி கொன்றது, கணவரை விஷம் கொடுத்து கொன்றது என சளைக்காத கொலைகாரிகள் இவர்கள். காப்பீடூ பணத்தைக் கையில் வாங்கியபோது கையில் விலங்கும் மாட்டப்பட்டது.  

கருத்துகள்