நம்பினால் உறுதியாக கொல்வோம்!

 










இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர் சிப்மன். இவர் மருத்துவராக பணியாற்றி 250க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றார். அதையும் நுணுக்கமாக செய்ததால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. பிறர் நம்பிக்கை வைக்கும்படி மருத்துவர்கள், செவிலியர்களின் உருவம் இருந்தாலும் அவர்களின் மனம்  இருட்பாதையாக இருந்தால் என்ன செய்வது? கொலைகளின் எண்ணிக்கை என்பது சைக்கோ கொலைகாரர்களின் மனநிலையைப் பொறுத்ததுதான்.  இப்படி கொலைகளை செய்வதில் மருத்துவர் இருப்பது அரிதுதான். மருத்துவர் சிப்மன் மட்டும் இப்படி சாதனையாக நிறையப் பேர்களை கொலைசெய்திருக்கிறார். 1974ஆம் ஆண்டு முதலாக சிப்மன் கொலைகளை செய்யத் தொடங்கிவிட்டார். செவிலியர் என்றால் கூட நோயாளி இறந்துபோனால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் மருத்துவர் சிகிச்சை அளித்தும் கூட நோயாளி மேசையில் இறந்தால், படுக்கையில் இருந்து இறந்தால் அது பெரிய அவமானம். மேலும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு பெரிய சங்கடம். இதனால் சிப்மன் சிகிச்சை அளித்தவர்களில் பெரும்பாலானோர் இறந்துபோனது சர்ச்சையானது. மூன்றில் ஒரு பங்கு நோயாளிகளின் இறப்பில் சிப்மனின் பங்கு இருந்தது. இதற்கான கமிட்டி விசாரணையில் 137 நோயாளிகளின் இறப்பில் சிப்மன், சம்பந்தப்பட்டிருந்தார். அனைத்து இறப்புகளும் இரவு 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை நடந்திருந்தது.

 வீடுகளிலுள்ள வயதான பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதில் ஆர்வம் காட்டினார். இப்படி சிகிச்சை அளித்ததில் இறந்தபெண்மணி மார்க்கரேட். இவர் பக்க வாத த்திலிருந்து மீண்டு வந்துகொண்டிருந்தார். இவர் இறக்கும்போது அவர் அருகில்தான் சிப்மன் இருந்தார். சிப்மனின் அப்பா, புற்று நோயாளி. அவரை பெத்தடின் போட்டு எப்போதும் தூங்க வைத்துக்கொண்டிருந்தனர்.இறந்தவர்களின் அருகில் இருப்பதால்  சிப்மன் தனக்கு ஏற்றது போல உயில்களை எழுத வைத்து பயன்களைப் பெற்றார். சொத்துகளால்  உயர்ந்தார்.  2004இல் தண்டனை பெற்றவர் சிறை அறையில் தூக்குபோட்டு இறந்தார்.

இத்தனைக்கு வீட்டுக்கு வந்து சிகிச்சை தரும் மருத்துவர்களில் அதிகம் நல்லப் பெயர் இருந்தது சிப்மனுக்குத்தான். ஆனால் அதை அவர் பெரிதாக நினைக்காமல் தனது மனதிலுள்ள வன்மத்திற்கு இடம் கொடுத்துவிட்டார். பலரையும் மருந்துகளுக்கான சோதனைக்களமாக  நினைத்தார்.

பொதுவாக செவிலியர்களுக்கு மருத்துவர்களைப் போல பெரிய மரியாதை கிடைக்காது. ஆனால் அதை அவர்கள் மனதிற்குள் வைத்துக்கொண்டு அதிகாரத்தையும் அவமரியாதை ஏற்படுத்திய கோபத்தையும் பிறர் மீது எப்படி காட்டுவார்கள். தன்னை நம்பி வரும் நோயாளிகளைக் கொல்வதன் மூலம் அவர்கள் இதை சாதிக்கிறார்கள். நோயாளிகளை கட்டுப்படுத்தி அவர்களை கொல்வதன் மூலம் செவிலியர்களுக்கு அதிகாரம் கிடைக்கிறது. மனநிறைவும் நிறையவே பெறுகிறார்கள்.

2003ஆம் ஆண்டு சார்லஸ் குலன், நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை தரவில்லையென புகார் கூறப்பட்டு கைது செய்யப்பட்டார். நியூஜெர்சியில் கைதானவர், அதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே நாற்பது நோயாளிகளுக்கு மருந்துகளை அதிகமாக உடலில் செலுத்துவது அல்லது தேவையான மருந்துகளை செலுத்தாமல் விடுவது என செயல்பட்டு வந்துள்ளார். பலரும் அவர் செவிலியர் என்பதால் யாரும் அவரை சந்தேகமே படவில்லை. அதனால் சார்லஸ் தனக்கு பிடித்த நோயாளிகளை கொல்லும் பணியை நிதானமாக செய்து வந்துள்ளார். அவர் மீது சந்தேகம் வந்தால், விசாரணை கமிட்டி வைத்தாலும் மருத்துவ குற்றங்களை நிரூபணம் செய்வது கடினமான பணி. இறந்த உடலை தோண்டி எடுத்து பிணக்கூராய்வு செய்து சார்லஸின் குற்றத்தை நிரூபிப்பது எளிதானது அல்ல.

காவல்துறையினரின் பலமணி நேர விசாரணையின் இறுதியில் சார்லஸ் குலன் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார். அவருக்கு பொது வழக்கறிஞர் ஒருவரையும் சட்ட உதவி மையத்தின் மூலம் பெற்றவர், மரணதண்டனை விதிக்கப்படாது என்ற நம்பிக்கையில் தனது கொலைக் குற்றங்களை ஏற்றுக்கொண்டார். நிறைய நோயாளிகளை கொல்வதை மருத்துவமனை நிர்வாகங்கள் தெரிந்தாலும் அதை பெரிதாக காட்டிக்கொள்ளவில்லை என்பதை சார்லஸ் அடையாளம் கண்டார். சில மருத்துவமனைகளில் வாங்கும் மருந்துகளை செவிலியர்கள் சரியாக பயன்படுத்தவில்லை. மருந்து காப்பகங்களில் சரியான ஆவணங்கள் சேகரிக்கப்படவில்லை. மருந்துகளை எடுத்துச் சென்ற செவிலியர்களின் பெயர்கள் பதிவு செய்யப்படவில்லை. சார்லஸ் கணினியில்  பதிவு செய்யப்பட்ட தகவல்களில் நிறைய தில்லுமுல்லுகளைசெய்தார். இதை தெரிந்த மருத்துவமனைகள் பெரிதாக கவலைப்படவில்லை. அவர்களுக்கு இருந்த ஒரே கவலை, மருத்துவமனையின் பெயர் கெட்டுப்போய்விடக்கூடாது என்பது மட்டுமே. சில இடங்களில் விசாரணை கமிட்டி வைத்து சார்லசை வேலையில் இருந்து நீக்கினர். சில இடங்களில் அவராகவே வேலையைவிட்ட விலக நிர்பந்திக்கப்பட்டார். இதனால் நோயாளிகளின் மரணங்கள் எல்லாம் அமைப்பில் உள்ள குறைபாடு என  சார்லஸ் எளிதாக கூறினார்.

சார்லஸ் குலன், குடும்பத்தின்ஒன்பது பிள்ளைகள். அவர் குழந்தையாக இருக்கும்போது அப்பா இறந்துவிட்டார். பிறகு பள்ளியில் படிக்கும்போது அம்மாவும் காலமானார். சார்லஸ் வேலைக்கு சென்றபோது ஒருவரை மட்டும் கவனித்துக்கொண்டார். பிறகு சார்லசிற்கு மணமானது. இரு மகள்கள் பிறந்தனர். அவரது மனநிலையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மனைவியும் விவாகரத்து கேட்டு பிரிந்தார். மகள்களை வளர்ப்பதற்கு கேட்ட தொகை சார்லசை மருட்டியது. கூடவே அவர் வளர்த்த நாயை சித்திரவதை செய்தார் என விலங்கு நேய அமைப்பு வழக்கு போட்டது. அவருக்கு ஒரு பெண்தோழி இருந்தாள். அவளது வீட்டுக்கு ஜன்னலை உடைத்துவிட்டு உள்ளே சென்று சந்தித்தார். அந்த பெண்ணையும் தனது செயல்கள் மூலம் மிரட்டினார். பிறகு என்ன தோன்றியதோ தன்னைத்தானே மனநல சிகிச்சை பெற பதிவு செய்துகொண்டார். இதெல்லாம் சார்லஸை நெருக்கடியில் தள்ளியது. எனவே, அவர் நோயாளிகளை கொல்லத் தொடங்கினார். அவர்கள் நோயில் தவித்தவர்கள்தான் என சார்லஸ் காரணம் சொன்னாலும அது உண்மையல்ல. இருபத்தொன்பது நபர்களை சார்லஸ் கொன்றார். பின்னாளில் கொல்லப்பட்ட நோயாளிகளின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கூட கேட்டுக்கொண்டார்.

அமெரிக்காவைச் சேர்ந்த டொனால்ட் ஹார்வே மருந்துகளை சோதித்துப் பார்த்து  முப்பதிற்கும் மேற்பட்ட நோயாளிகளை தெய்வபதம் சேர்த்தார். ஏன் இப்படி செய்தீர்கள் என்பதற்கு, மனச்சோர்வுக்கு மருந்து கொலைதான் என புதிய கோட்பாட்டை சொன்னார்.  ஆர்வில் லின் மேஜர்ஸ் என்ற செவிலியர் தான் வேலைக்கு சேர்ந்த 22மாதங்களில்ல் 147 நோயாளிகளைக் கொன்றார். தொடக்கத்தில் 26 பேர்தான் இறந்தனர். ஆனால் விரைவில் இறக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல் சென்றது. பெரும்பாலும் அவசரநிலை சிகிசையில் இறந்தவர்களதான் இறந்தனர். பிறகு மருத்துவமனை விசாரணையில் எபின்பிரைன், பொட்டாசியிம் குளோரைட் அதிகளவில் நோயாளிகளின் உடலில் இருந்தது கண்டறியப்பட்டது.  ஆனாலும் கூட ஆர்வில்லை சிறையில் தள்ள ஆறு கொலைகளை ச் செய்தார் என வழக்கு பதிவு செய்தனர். மீதி கொலைகளுக்கான முழுமையான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

 


கருத்துகள்