மக்களின் மனதைப் புரிந்துகொள்ள முயலும் தொழிலதிபர் - ஆனந்த் மகிந்திரா

 









இந்தியாவில் தற்போது பொதுமக்களோடு அதிகம் உரையாடிக் கொண்டிருக்கும் தலைவர் யாரென  நினைக்கிறீர்கள்? அமெரிக்காவில் இதுபோல இயங்கும் சர்ச்சை கிளப்பும் தலைவர் ஒருவருண்டு. அவர் எலன் ம|ஸ்க் என அனைரும் தெரிந்துகொண்டிருப்பீர்கள். இந்தியாவில் எலன் ம|ஸ்கையொத்த பல்வேறு பரிசோதனை முயற்சிகளை செய்துகொண்டிருப்பவர் இவர் ஒருவரே….

அவர்தான் ஆனந்த் மகிந்திரா.

இந்தியாவைப் பொறுத்தவரை தொழிலதிபர்கள் யாரும் வெளிப்படையாக தங்கள் கருத்தை எங்கும் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். என்ன காரணம்? அரசியல் கட்சிகள் அதை வைத்து அவர்களது தொழிலை நசித்து விடுவார்கள் என்பதுதான்  முக்கியமான காரணம்.

 ஆனந்த் மகிந்திரா இந்தவகையில் அரசியல் என்பதைப் பற்றி கவலைப்படாமல் நம்பிக்கையான மனிதர்கள், அவர்களைப் பற்றிய வீடியோ என பகிர்ந்துகொண்டு  ட்விட்டரில் இயங்கி வருகிறார்.  ஆனந்த்  நாள்தோறும் ட்விட்டரில் பகிரும் வீடியோக்களைப் பார்க்க பகிரவே நிறைய மனிதர்கள் ட்விட்டரில் அவரைப் பின்தொடர்கிறாரகள். மகிந்திரா நிறுவனம் 1945ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2022ஆம் ஆண்டோடு 77 ஆண்டுகளை  நிறைவு செய்துள்ளது. 2020ஆம் ஆண்டில் 75 ஆண்டுகளை நிறைவு செய்தது. மகிந்திரா ரைஸ் எனவும் தனது லோகோவை மாற்றி அமைத்து பிராண்டை தனித்துவமாக்கிக் காட்டி செயல்பட்டு வருகிறது.  

அவரோடு ஒத்த தொழிலதிபர்கள் எல்லாம் மௌனமாக வேலை செய்யும்போது ஆனந்த் ட்விட்டரில் நம்பிக்கை  தரும் வீடியோக்களை  செய்திகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார். உண்மையில் இனிமேல் ட்விட்டர் பணம் கொடுத்து பயன்படுத்தும்படிமாறலாம். ஆனால் ஆனந்த் இந்த சமூக வலைதளத்தைப் பயன்படுத்தி தனது நிறுவனம் ஊக்கமுடன் செயல்படும்படி வைத்திருக்கிறார். அவர் பயன்படுத்த தொடங்கிய காலத்தில் அவருக்கு மக்களுடன் கலந்து பழக  உதவிய  தளம்தான் ட்விட்டர்.

மகிந்திரா இன்று 23 துறைகளில் 150க்கும் மேலானா நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி வருகிறது.  அதனை இன்று விவசாய பொருட்களை மட்டும் தயாரிக்கும் நிறுவனம் என்று சுருக்கமாக கூறிவிட முடியாது.  19 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட பன்னாட்டு பெரு நிறுவனமாக வளர்ந்து நிற்கும் மகிந்திரா, 130  நாடுகளில் செயல்பட்டு வருகிறது. மகிந்திராவின் வளர்ச்சி ஒரு நாளின் நள்ளிரவில் நடந்துவிடவில்லை. மகிந்திரா இன்றும் தன்னை குறிப்பிட்ட ஒரு துறை என்று இல்லாமல் பல்வேறு துறைகளில் கிளைவிரித்து பெரிய மரமாக வீற்றிருக்கிறது.

இதற்கு முக்கியமான மனிதர்கள் மகிந்திராவில் உண்டு. தற்போதைய மகிந்திராவின்  வெற்றிக்கு காரணமான  மூன்று நபர்களைப் பற்றிய குறிப்புகளைப் பார்ப்போம். கேஷப் மகிந்திரா, ஆனந்த் மகிந்திரா, அனிஷ்

 கேஷப் மகிந்திரா

இவர், மகிந்திரா நிறுவனத்தின் தலைவராக நாற்பது ஆண்டுகள் இயங்கினார். அமெரிக்காவின் வார்தா பல்கலைக்கழகத்தில் வணிகம் பற்றி படித்தவர். 1947ஆம் ஆண்டு மகிந்திரா  நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கி 1963ஆம் ஆண்டு மகிந்திரா அண்ட் மகிந்திரா எமெரிடஸ் நிறுவன  தலைவரானார்.

கேஷப் மகிந்திராவை தொழிலதிபர், வணிக வல்லுநர் என்று சொல்வதை விட பலரும் வாரி வழங்கிய வள்ளல் என்றுதான் அழைப்பார்கள். இந்திய அரசின் சாச்சார் கமிட்டியில் அங்கம் வகித்தவர். 1987ஆம் ஆண்டு கேஷப்பிற்கு செவாலியே விருதை பிரான்ஸ் நாட்டு அரசு வழங்கியது. 2004 தொடங்கி 2010ஆம் ஆண்டு வரையிலான வணிகம் மற்றும் தொழில்துறை கவுன்சிலில் உறுப்பினராக இருந்து இந்திய அரசுக்கு உதவினார்.  செயில், டாடா ஸ்டீல், பாம்பே டையிங், ஹெச்டிஎஃப்சி ஆகிய நிறுவனங்களின் வாரியக் குழுவில் அங்கம் வகித்திருக்கிறார. சில நிறுவனங்களில் தலைவராகவும் செயல்பட்டிருக்கிறார்.


மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபால் நகரில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் ஏற்பட்ட விஷவாயு கசிவு அனைவருக்கும் நினைவிருக்கும். அந்த நிறுவனத்தின் செயல்பாட்டில் இல்லாத நிர்வாகத தலைவராக இருந்தவர் கேஷப் மகிந்திரா. அந்த விவகாரத்தில் கேஷப்பிற்கு  களங்கம் ஏற்பட்டது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்ட விவகாரம் அல்லவா? 2010ஆம் ஆண்டு யூனியன் கார்பைடு பணியாளர்கள் ஏழுபேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அபராதமாக ஒரு லட்சம் ரூபாய் கட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இவர்கள் அனைவருமே விரைவில் பிணையில் வெளியே கொண்டு வரப்பட்டனர். செய்யும் தொழிலில் நிறைய விதிமுறைகளை பின்பற்றுபவர்தான் கேஷப். ஆனால் யூனியன் கார்பைடு விவகாரத்தில் அவர் பெயரில் தீராத களங்கம் உருவானது. நாடறிந்த கொடையாளிதான் ஆனால் மக்கள் இறந்ததையும் குற்றவாளிகள் தப்பிவிக்கப்பட்டதையும், குற்றவாளிகளில் வெளியே வந்ததையும் என்ன சொல்லி நியாயப்படுத்துவது? இவருக்குப் பிறகு மகிந்திரா  நிறுவனத்தின் பொறுப்பு மருமகன் ஆனந்திற்கு சென்றது.

ஆனந்த் மகிந்திரா

மோடியின் அணுகுமுறைகளில் தனித்துவம் தெரிகிறது என பேசிக்கொண்டிருக்கும் ஆனந்த், பிஏ, எம்பிஏ ஆகிய படிப்புகளை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர். டெக் மகிந்திரா, மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத்தின் குழுமத் தலைவர். ஆனந்தின் காலத்தில்தான் மகிந்திரா  நிறுவனம் மகிந்திரா டிராக்டர்களைத் தாண்டி பாதுகாப்பு, பயணிகள் வாகனம், கனரக வாகனம், ஊடகம், நிதித்துறை, கட்டுமான நிறுவனங்கள், தொழில்துறை எந்திரங்கள், சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் என கிளை விரித்தது. ஸ்வராஜ், ரேவா எலக்ட்ரிக், சத்யம் கம்ப்யூட்டர்ஸ், பியூஜியாட் மோட்டார் சைக்கிள் நிறுவனம், ஹாலிடே கிளப் ரிசார்ட், சொகுசு கார் நிறுவனமான பினின்பரினா ஆகியவற்றை கையகப்படுத்தினார். உள்நாடு, வெளிநாடு என நிறுவனம் விரிவடையத் தொடங்கியது.

தொழில் மட்டுமல்லாது இசைவிழாக்களை ஒருங்கிணைத்து அதற்கு நன்கொடை அளித்து உதவுகிறார். நான்கி காளி என்ற பெயரில் பெண் குழந்தைகளுக்கான தொடக்க கல்வியை வழங்குகிறார். நான்டி பவுண்டேஷன்  மூலம் வறுமை நிலையில் உள்ள பெண் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க உதவுகிறார். இதே தன்னார்வ அமைப்பு இளைஞர்களுக்கு தொழில்கல்வி, சிறுகுறு விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. 

தி ரைஸ் ஃப்ண்ட என்ற பெயரில் 2 பில்லியன் டாலர்களை மக்களுக்கு சமூகத்திற்கு உதவுவதற்கென்றே சேர்த்து வைத்து செயல்பட்டு வருகிறார் ஆனந்த் மகிந்திரா.

அனிஷ்

இவர் மகிந்திரா குழுமத்தின் இயக்குநர் மற்றும் தலைவராக, அதனை டிஜிட்டல் காலத்திற்கேற்ப நவீனப்படுத்தும் முயற்சிகளைச் செய்துவருகிறார். அகமதாபாத்தின் ஐஐஎம்மில் வணிக  நிர்வாகம் படித்து, பிறகு அமெரிக்காவின் கார்னெகி பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்தவர். பேங்க் ஆஃப் அமெரிக்கா, மும்பையில் உள்ள சிட்டி பேங்க் ஆகிய நிறுவனங்களில் கடன் பிரிவில் பணிபுரிந்து நிறைய மாற்றங்களை உருவாக்கியுள்ளார்.

 

தகவல் - மகிந்திரா நிறுவன வலைத்தளம்

கருத்துகள்