சங்க காலம் முதல் இன்றுவரை உப்பின் சமூக, பொருளாதார முக்கியத்துவத்தைப் பேசும் நூல்- உப்பிட்டவரை

 











உப்பிட்டவரை

ஆ.சிவசுப்பிரமணியன்

காலச்சுவடு பதிப்பகம்

பக்கம் 164

 

உப்பு என்றால் உங்களுக்கு என்னென்ன விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன? பழமொழிகள், உப்பு குறைந்து சாப்பிடாமல் போல உணவு, ஊறுகாய், அப்பளம், நன்றி என ஏதேதோ நினைவுக்கு வரும். ஆனால் இந்த அனைத்திலும் உப்பு மையமாக உள்ளதுதானே?

இந்த நூல் முழுக்க உப்பு அதன் வணிக, சமூக, பொருளாதார முக்கியத்துவம் பற்றி பேசப்பட்டுள்ளது. சங்க காலம் தொடங்கி இப்போது வரை உப்பின் முக்கியத்துவம் என்ன, அதனை உற்பத்தி செய்யும் உப்பள தொழிலாளர்கள் நிலை, அவர்கள் பயன்படுத்தும் தொழில்சார்ந்த வாழ்க்கை, உப்பளத்தை மையப்படுத்திய நாவல்கள் என நிறைய விஷயங்களை உப்பிட்டவரை நூலில் தோழர் ஆ சிவசுப்பிரமணியன் பேசியிருக்கிறார்.

இதுபோன்ற ஆய்வுகளை செய்து நூல்களை தேர்ந்து படித்து அதனை வாசகர்களுக்கு எழுதி தொகுத்து அளிப்பது சாதாரண காரியமில்லை. இதை நீங்கள் இந்த நூலில் குறிப்பிட்டுள்ள மேற்கோள் நூல்களின் வரிசைப்பட்டியலை பார்த்தாலே புரிந்துகொள்ளலாம். அந்தளவுக்கு நூலாசிரியர் உழைத்துள்ளார்.

சமூகம் சார்ந்த விஷயங்களில் முக்கியமானது திருநெல்வேலி பகுதியில் உள்ள திருடர்கள் பிறரது வீட்டில் சாப்பிடும் தயிர்ச்சோறு அல்லது மோர்ச்சோற்றுக்கு உப்பு போடாமல் சாப்பிடுவார்கள் என்பது… உப்பு போட்டு சாப்பிட்டுவிட்டால் அந்த வீட்டில் தொழில்முறையாக வந்து திருட முடியாது என்பதே காரணம். உப்பு போட்டால் கூட அதை மண் கொண்டு முறித்து சாப்பிடுவது என்பது ஆச்சரியப்படுத்திய தகவல்.

இதற்கடுத்து, அதிகம் வெயிலில் வேலை செய்பவர்கள் சோற்றை உலையில் போடும்போது உப்பிட்டு சமைக்கும் முறை. முதலில் சில சமூகத்தினர் உப்பு போட்டு சமைப்பதை நினைத்து எதற்கு இப்படி சமைக்கிறார்கள் என புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறி இருக்கிறேன். ஆனால் உப்பிட்டவரை நூல் மூலம் அதற்கான காரணத்தை தெரிந்துகொண்டேன்.

பொதுவாக ஆய்வு நூல்களை மிகவும் கொடுமையான தமிழில் எழுதி பீதியூட்டுவார்கள்.. ஆனால் இந்த நூல் அப்படி இல்லாமல் விஷயங்களை எளிதாக புரிந்துகொள்ளும்படி இருக்கிறது. அதற்காகவே எழுத்தாளருக்கு நன்றி சொல்லவேண்டும். 

உப்பிட்டவரை நூலை வாசித்தால் இந்திய, தமிழக அளவில் உப்பு என்பது என்னவாக இருந்தது, இருக்கிறது, இப்போதுள்ள நிலைமை வரையில் அறியலாம். உப்பளத் தொழிலில் தற்போது மார்வாரிகள் நுழைந்ததையும் நூலாசிரியர் கோடிட்டு காட்டுகிறார். தமிழ்நாட்டிற்கு போட்டியாக குஜராத் மாநிலம்  உள்ளது. இதற்கான காரணங்களை தெளிவாக ஆசிரியர் கூறியுள்ளார். பிழைகளை திருத்திக்கொண்டால் நிச்சயம் உப்புத்தொழிலில் தமிழ்நாடு முன்னிலை பெறுவதோடு தொழிலாளர்களும் பிழைப்பார்கள்.

உப்பள வாழ்க்கையை கவனப்படுத்திய ராஜம் கிருஷ்ணன், ஶ்ரீதர கணேசன் ஆகியோரின் நூல்களை நூலாசிரியர் கூறியிருப்பதோடு சில பகுதிகளையும் சுட்டிக்காட்டுகிறார். இரு நூல்களுமே உப்பள தொழிலாளர்களின் வாழ்க்கையை, அதில் உள்ள அரசியலை பேசிய வகையில் முக்கியமானவைதான்.

சிறப்பாக எழுதப்பட்ட ஆய்வுநூல்.

கோமாளிமேடை டீம்

 

நூல் ஆசிரியரின் முகவரி

பாரதி

2/360 மூன்றாம் குறுக்குத் தெரு

தபால்தந்தி குடியிருப்பு மேற்கு

தூத்துக்குடி 628 008

அலைபேசி எண் 94420 53606

வாசகர்கள் நூலைபடித்துவிட்டு எப்படி இருக்கிறது என ஒற்றை வரியிலேனும் விமர்சனங்களை, வாசிப்பு அனுபவத்தை கூறுவது ஆ. சிவசுப்பிரமணியன் போன்ற எழுத்தாளரை பெரியளவு ஊக்குவிக்கும். நன்றி

 

 


கருத்துகள்